எல்லைகளற்ற தமிழ்!

படைப்பு:

“கல் தோன்றி மண் தோன்றா”

என்றதும் இகழ்ந்தார், நகைத்தார்;

கீழடி, பொருநை, காவிரி, பாலாற்றில்

அகழந்ததும் திகைத்தோர் அவரே;

 

நாட்படு தேறல் தேள்போல் கடுக்கலாம்

தமிழோ நாட்பட்ட தேன்;

கணியனுக்கு முன்பே பிறந்து,

சங்கம் பல கண்டு

சாவா மூவா வரம்பெற்று

கணினிக்குப் பின்பும் வாழும்

உரம்பெற்ற செந்தமிழ் நமது;

 

பழங்கதை பேசி,

பத்திரமாய்ப் பூட்டிவைத்து

பாதியில் மடிந்தபின்,

மீதி நாளெல்லாம் செயற்கை சுவாசத்தில்

நீடித்திருக்கும் கபடதாரியா தமிழ்?

இலக்கிய, இலக்கண எல்லை தாண்டி

பொறியியல், மருத்துவம், கணினியென

காலத்தடை வென்ற பெருநதி;

 

ஆயிரந்தான் சிறப்பு இருப்பினும்

ஆங்கிலந்தான் பெரிதெனக் கருதச் செய்யும்

அற்பர்களிடமிருந்து மீட்கும் போர்

அன்றாடம் இல்லாது போயின்,

மெல்லத் தமிழினி சாகுமெனக்

கனவு காண்போர் பெருகுவர்;

 

கால எல்லை, தேச எல்லைகளை

வென்று வாழும் தமிழைக்

காத்திட, கரம் கோர்த்திட வாரீர்!

– அபிநயா பன்னீர்செல்வம்.

தமிழ்த்துறை, இளங்கலை மூன்றாம் ஆண்டு.

டாக்டர் எம்.ஜி.ஆர். –  ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அடையாறு.

Comments (0)
Add Comment