ஆணவக் கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்!

  • கணவரை இழந்த பெண் கண்ணீருடன் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஜெகனை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சட்ட சபையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் கண்ணீர் விட்டு அழுத ஜெகனின் மனைவி சரண்யா, ”திருமணம் ஆன நாளில் இருந்து என்னை ராணி மாதிரி ஜெகன் பார்த்துக் கொண்டார். ஆனால் என்னுடைய பெற்றோர் எங்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டார்கள். இதில் தொடர்புடைய ஒருவரையும் விடாமல்  அனைவரையும் தூக்கிலிட வேண்டும்” என்றுக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் தரப்பில், ”ஜெகன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சரண்யாவுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)
Add Comment