மனித நாகரிகத்தின் தொடக்கப்புள்ளி எதுவென்று ஆராய்ந்தால், மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிரத் தொடங்கிய தருணத்திலிருந்தே அது ஆரம்பிக்கிறது.
ஆதிகாலம் முதல் இன்றுவரை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்கள் கண்டடைந்த உண்மைகளையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான சக்தி ‘எழுத்து’ எனும் ஆயுதமே ஆகும்.
காலம் பல மாற்றங்களைச் சந்தித்தாலும், அறிவு அழியாமல் நிலைத்திருக்க பதிவுகள் அவசியம். நம் முன்னோர்கள் தாங்கள் கண்டடைந்த உண்மைகளை வெறும் செவிவழிக் கதைகளாக மட்டும் விட்டுச் செல்லவில்லை.
நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குறிப்புகள், வாழ்வியலை விளக்கும் அறநெறிகள், நுணுக்கமான கலை மற்றும் கட்டிடக்கலை ரகசியங்கள் என அனைத்தையும் அவர்கள் பாறைகளில் கல்வெட்டுகளாகச் செதுக்கினார்கள்; பனை ஓலைகளில் சுவடிகளாகப் பதித்தார்கள்.
இன்று அவை காகிதத் தாள்களாக நம் கைகளில் தவழ்கின்றன. இந்த எழுத்து வடிவப் பதிவுகள் இல்லையென்றால், நமது வேர்களையும் வரலாற்றையும் நாம் இழந்திருக்க வாய்ப்புள்ளது.
எழுத்து என்பது ஒரு விதை என்றால், வாசிப்பு என்பது அதை விருட்சமாக மாற்றும் செயல்.
வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது நமக்குள் ஒரு மௌனமான புரட்சியை உருவாக்குகிறது.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்கும் மனிதர்கள் குறைவாக இருக்கலாம்; ஆனால் வாசிப்பின் மூலம், உலகெங்கிலும் உள்ள அறிஞர்களுடனும், பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிந்தனையாளர்களுடனும் நாம் உரையாட முடிகிறது.
ஒவ்வொரு புத்தகமும் நமக்குள் ஒரு புதிய தேடலை விதைக்கிறது. அந்தத் தேடல் நம்மை சுயமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.
நாம் எதை வாசிக்கிறோமோ, அதுவே நம் ஆளுமையை வடிவமைத்து மெருகேற்றுகிறது.
வாசிப்பவன் ஒருபோதும் தேங்கிப் போவதில்லை. வாசிப்பின் வழியாகப் பிறக்கும் தேடல், ஒருவனை எழுத்தின் பக்கமும் நகர்த்துகிறது.
இன்று நாம் வாசிக்கும் ஒரு குறிப்பு எவ்வாறு நமக்கு அறிவை அளிக்கிறதோ, அதேபோல நாம் வாசித்து, சேகரித்து, எழுதும் அனுபவங்கள் பிற்காலத்தில் யாரோ ஒருவருக்குக் கலங்கரை விளக்கமாக மாறும்.
நமது தேடல் சுயநலமானது அல்ல; அது வருங்காலத் தலைமுறைக்கான ஒரு பெரும் சொத்து. நாம் எதை வாசிக்கிறோம், எதை அடுத்தவருக்குக் கடத்துகிறோம் என்பதில்தான் மனித இனத்தின் தொடர்ச்சி அடங்கியிருக்கிறது.
எழுத்து என்பது காலத்தை உறைய வைக்கும் ஒரு வித்தை. வாசிப்பு என்பது அந்த வித்தைக்கு உயிர் ஊட்டும் கலை.
நாம் வாசிப்போம்; அறிவைத் தேடி ஓடுவோம்.
அந்தத் தேடல் நமக்கானதாக மட்டுமல்லாமல், இந்த உலகிற்கான ஒரு நற்பயனாகவும் அமையட்டும்.
- எழுத்தாளர் மோ. ரவிந்தர்