அளவுக்கு மீறிக் கொள்ளாதே!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 35

***

”மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்
பொன்னுங் கொள்ளார் மன்னர்”

நற்றிணை – 226. 1-3; பாலை

ஆசிரியர்: கணி புன்குன்றனார். கணியன் பூங்குன்றார் என்று சிலர் கூறினாலும் பலர் அதனை மறுக்கின்றனர்.

சொற்பொருள் :

மரம்=மருந்து மரம்; சா=சாகும்படி, அழியும் படி; மருந்தும்=மரத்திலுள்ள மருத்துவப்பயன்தரும் இலை காய் முதலியன; உரம்=மன வலிமை; சா=அழியும்படி; செய்யார்=மேற்கொள்ளார்; உயர்தவம்=கடுமையான தவம்;

வளம்=நாட்டு வளமை; கெட=கெடுமாறு, குறையுமாறு, அழியுமாறு; பொன்னும்=வரியாகச் செல்வத்தை; கொள்ளார்=எடுத்துக்கொள்ள மாட்டார்; மன்னர்=ஆள்வோர்.

பொருள்:

இவ்வுலக மக்கள் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருத்துவப் பயன்தரும், இலை, பூ, காய், கனி, பட்டை, வேர் முதலிய அனைத்துப் பொருள்களையும் முழுமையாகப் பறித்துக்கொள்ள மாட்டார்கள்.

அதேபோல் தம் வலிமை முழுமையும் குன்றுமாறு தவம் மேற்கொள்ள மாட்டார்கள்.

அரசர் நாட்டு மக்கள் செல்வமெல்லாம் குறையும் வண்ணமோ அழியும் வண்ணமோ அவர்களிடமிருந்து வரித் தொகைகளைப் பெறமாட்டார்.

விளக்கம்:

மருத்துவப் பயனுக்காக மரத்திலுள்ள இலை முதலியவற்றை எடுத்துக் கொள்வோர் மேலும் மேலும் தேவைப்படும் என்று அனைத்தையும் முற்றிலுமாக எடுத்துக்கொள்ள மாட்டார்.

அவ்வாறு கொள்வதால் மரம் அழிந்து மேற்கொண்டு யாரும் பயன் பெற இயலாமல் போய்விடும்.

தங்களின் மன வலிமையும் உடல் வலிமையும் கெடுமாறு கடுந்தவம் மேற்கொண்டால், அழிவே ஏற்படும்.

நாட்டு மக்களிடம் வரியை அளவோடுதான் பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் வரி கொடுக்கிறார்கள் என்பதாலும் மக்களிடம் செல்வம் இருக்கிறது என்பதாலும் அளவு கடந்த வரியைக் கொள்ள மாட்டார்.

பயன்கிடைக்கும் என்பதற்காக ஒரு சேர முற்றுமாக எதையும் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் பொன் முட்டையிடும் வாத்து கதை மூலம் நாம் இதைத்தானே அறிகிறோம்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா?

இப்பாடலில் வரும் உவமைகள் மூலம் தலைவி, தன் தலைவன், தன்னுடன் வாழாமல் பொருளீட்டச் செல்வது முறைதானா எனக் கேட்கிறாள். அவர் பிரிந்தால் தன் உயிரும் பிரியும் அன்றோ எனக் கேட்கிறாள்.

பாண்டியன் அறிவுடை நம்பியிடம் புலவர் பிசிராந்தையார்

“காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே”

எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் (எண்-184) அளவாக வரி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பார்.

மக்களிடம் அளவு கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கள்வன் கையில் வேல் வைத்துக் கொண்டு கைப்பொருள்களைக் கேட்பது போன்றது மன்னன் அளவு கடந்து வரி பெறுவது என்கிறார் திருவள்ளுவர்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு. (௫௱௫௰௨ – 552)

என்னும் திருக்குறளே அது.

வரியாயினும் வேறு பயன்பொருள் எதுவாயினும்

அளவுக்கு மீறிக் கொள்ளாதே

என்னும் சங்கப் புலவர்கள் பொன்னுரைக்கிணங்க நாமும் நடப்போம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

Comments (0)
Add Comment