புளிய மரத்துடன் ஒரு பந்தம்!

  • ரெங்கையா முருகன்

தென்தமிழகத்தில் புளியமரத்தோடு ஒரு பந்தம் அனைவருக்குமே இருக்கும். சுளுந்தீ நாவலில் கூட புளியமரத்துக்கு பின்பான அரசியல் சமூகநிகழ்வை முத்துநாகு அட்டகாசமாக விவரித்திருப்பார்.

நானும் இளமைப் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்லும் சாலையின் இருபுறமும் புளியங்காயை உதிர்த்துவிட்டு சப்பிக்கொண்டே சென்ற நினைவுகள் மறக்க முடியவில்லை.

இறைவன் அருள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர்கள் ஆழ்வார் என்பார்கள்.

அந்த ஆழ்வார்கள் வரிசையில் புளியமரத்தடி மவுன சித்தன் நம்மாழ்வார் மீது எனக்கு தனித்த பேரன்பு உண்டு.

நம்மாழ்வார் ஒருவகையில் சாமுசித்தர் என்றுகூட அழைப்பார்கள்.

சாமுசித்தர் என்றால் முந்தைய பிறவிகளில் ஈட்டிய நற்தவப்பயனாக இப்பிறவியில் ஒரு விசயத்திற்காக வந்து அந்த விசயத்தை ஈடேற்றிவிட்டு சென்று விடுவார்கள்.

அந்த நல்ல விசயம் தமிழ்செய் நன் மாறனால் விளைந்த “திருவாய்மொழி” பாசுரம்.

ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்படும் வைணவ தலத்தில் புளியமரத்தடி அருகில் நீண்ட வருடங்களாகப் பேச்சுமூச்சற்று இருந்த நிலையில் அயோத்தியிலிருந்து தெற்கு நோக்கி புறப்பட்டு வந்த மதுரகவி ஆழ்வார் புளிய மரத்தடி அருகே உணர்வற்ற நிலையில் இருந்த நம்மாழ்வாரை சோதனை செய்ய ஒரு கல்லை எடுத்துப் போடுகிறார்.

நம்மாழ்வார் உணர்வு திரும்பி கண் விழிக்கிறார். நம்மாழ்வார் உயிருள்ளவர் என்று உணர்கிறார். மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை நோக்கி கேள்வி கேட்கிறார்.

“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்”.
முதன் முறையாக நம்மாழ்வார் வாய் திறந்து பதிலளிக்கிறார்.

“அத்தை தின்று அங்கே கிடக்கும்”.

மதுரகவி ஆழ்வார் அந்த நிமிடத்தில் இருந்து நம்மாழ்வாரின் சீடன் ஆகிறார்.
திருவாய்மொழி போன்ற உயர்மறைக் கருத்து புரிந்து கொள்ள நாம் எத்தனிக்கும் வேலையில்தான் தமிழ் மொழியின் உட்கிடை பொருள் ரகசியத்தின் ஆச்சரியத்தை அறிய முடியும். ஒவ்வொரு வரிகளும் வைரச் சொற்கள்.

திருமூலரின் திருமந்திர வரிகளுக்கு ஒப்பானது திருவாய்மொழி.

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனர்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே.
உலகியலில் சிறிது பற்று ஏற்பட்டாலே இறைவன் அவனிடமிருந்து விலகி தூர சென்று விடுவான்.

இந்த அழகான 18ம் நூற்றாண்டைச் சார்ந்த திருப்பதி பாணி ஓவியத்தை சுரேஷ் சுந்தர்ராஜன் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்த வேளையில் நான் இதனை எனது புலனத்தில் பதிவு செய்திருந்தேன்.

இந்த படம் பின்னணி குறித்து தொடர்ந்து மொபைலில் தொடர்பு கொண்டு கேட்டதற்காக இந்த எளிய பதிவை விளக்க வேண்டியதாயிற்று.

இந்த பாணியின் ஓவியங்களைப் பின்பற்றி பிற்காலங்களில் ஆந்திர பகுதிகளில் பொம்மலாட்ட தோல்பாவைக் கூத்து பொம்மைகளை இந்த வடிவில் ஒத்துப் போவதையும் அறிய முடிகிறது.

வைகாசி விசாகம் ஜென்மதினம்.

நன்றி: ரெங்கையா முருகன் எழுதிய முகநூல் பதிவு

Comments (0)
Add Comment