தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்றார்.
கனிமொழி, தனது வேட்பு மனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 24-ம் தேதி விசாரித்தது.
அப்போது, கனிமொழியின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதால் வேட்பு மனுவில் கணவரது வருமானத்தை தெரிவிக்கும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில், கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.