நீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள். இன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு.
இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசா ‘உலகின் சாதனைப் பெண்‘களில் இன்று இடம்பெறுகின்றார்.
1910 ஆகஸ்ட் 26 மெஸிடோனியாவில் பிறந்த அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும்.
அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும்.
சிறுவயது முதல் ஆழ்ந்த இறை பக்தியும் பொதுத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்ட இவர்,
18 ஆவது வயதில் ஐரிஷ் கன்னிகாஸ்திரிகளைக் கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினரானார்.
கல்கத்தாவில் இந்திய மிஷனரிகள் செய்துவந்த சமூகத் தொண்டுகளின் பால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
எனவே, டுப்ளினில் சில மாதங்கள் பயிற்சி பெற்றபின் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
அதன்பின் ஆன்மீகக் கற்கையைத் தொடருமுகமாக அயர்லாந்து சென்றார். 1931 ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார்.
1948-ம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத் தாதிப் பயிற்சியைப் பெற்றார்.
1949-ல் மோதிஜில் என்ற சேரிப்பகுதியை அடைந்து, “உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீர்களா?” என்று கேட்டவாறு சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யத் தொடங்குகின்றார்.
1950 அக்டோபர் 7-ல் அன்னை தெரசாவின் தலைமையில், மிஷனரிஸ் ஒஃப் சாரிட்டி இல்லம் (Missionaries of Charity) தொடங்கப்பட்டது. 1965-ல் இந்த அமைப்பு சர்வதேச அளவில் வியாபகம் பெற்றது.
சேரிவாழ் ஏழை மக்களுக்கும் அநாதைகளுக்கும் தொழு நோயாளர்களுக்கும் அவர் செய்துவந்த தொண்டுகள் அளப்பரியன.
“ஏழை நோயாளர்களுக்கு வெறுமனே உபதேசம் செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை.
மாறாக, அவர்களுடன் இணைந்து தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர்.
தமக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல், எளிய வாழ்க்கை நடத்தியவர்” என்று பத்திரிகையாளரான குஷ்வந்த்சிங், அன்னை தெரசாவின் தொண்டு பற்றிப் புகழ்ந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1962-ம் ஆண்டு பொதுச் சேவைக்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, 1979 அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.
அவரின் இடையுறாத சமூகத் தொண்டை கௌரவிக்கும் விதமாக 1980-ல் இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா விருதும், 1983-ல் பிரிட்டிஷ் மகாராணி 2-ம் எலிசபெத் மகாராணியின் கௌரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தன.
1997-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அமெரிக்காவின் கௌரவ பிரஜை உரிமை அந்தஸ்தை வழங்கி அன்னை தெரசாவைக் கௌரவித்தார்.
சுமார் 45 வருடகாலம் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவந்த அன்னை தெரசா 1983 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார்.
1997 செப்டெம்பர் 05-ம் திகதி கல்கத்தாவில் உயிர் நீத்தார்.
பொதுத் தொண்டுக்காகவே தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணியான அன்னை தெரசா உலகின் சாதனைப் பெண்களில் ஒருவர் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.
– நன்றி: உடையநாடு வலைதளம்