உழவர் சந்தைகளை நவீனப்படுத்தும் தவெக அரசு!

தமிழ்நாடு அரசின் 2026-27 வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) தொடங்கிய நிலையில், தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, இன்று காலை 9:30 மணிக்கு, வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

அந்த வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிறிய தளிர் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகள் ரூ.41 கோடியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இதில் சாமந்தி, ரோஜா, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களுக்கு நிழல்வலை கூடம், பசுமைக் குடில், நீர்த்தாரைப் பந்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

நன்னெறி சாகுபடி மற்றும் நவீன அறுவடைக்கு பிந்தைய உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.8.43 கோடியில் மேம்படுத்தப்படும்.

இதில் தரத்திற்கான உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் குளிர்பதன வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மாடித்தோட்டம், காய்கறி, பழச்செடி வளர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.

பனை பாதுகாப்பு இயக்கம் ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும். பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம் மற்றும் பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.9 கோடியில் கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

17,315 ஏக்கரில் விதைக் கரும்பு மானியம் ரூ.9.36 கோடி செலவில் வழங்கப்படும்.

உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பு மேம்பாடு ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

விதைச் சான்றிதழ் மற்றும் விதைச் சுத்திகரிப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.7.10 கோடியில் மூன்று புதிய விதைச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் நிறைவேற்றும் வகையில் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மொத்தம் 90 பரிசுகள் ரூ.67.50 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளன.

5 விவசாயிகளுக்கு “நம்மாழ்வார் விருது” ரூ.11 லட்சம் செலவில் வழங்கப்படும்.

மாநில அளவிலான சிறந்த விவசாயிகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் என மொத்தம் 30 பரிசுகள் ரூ.50 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.

மழை, வெயில் உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளில் இருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க 43,500 தார்ப்பாய்கள் ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் ரூ.56.72 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படுவதுடன், 300 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 100 சூரிய சக்தி பம்பு செட்கள் அமைக்க மானியம் வழங்கப்படும்.

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டம் ரூ.7.35 கோடியில் செயல்படுத்தப்படும்.

விவசாய நிலங்களில் நீர்நிழல் மற்றும் பசுமையை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் திட்டம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் ரூ.36 கோடியில் செயல்படுத்தப்படும்.

பருத்தி உற்பத்தியை பெருக்க “பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்” ரூ.27.21 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

சிறுதானிய சாகுபடி பரப்பை விரிவுபடுத்தவும், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் “தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்” ரூ.63.81 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளுக்கு உடனடி ஆலோசனைகள் வழங்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான உழவர் செயலி ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்படும்.

அதிக ஊட்டச்சத்து கொண்ட குவினோவா (Quinoa), பக் வீட் (Buckwheat), பிரவுன் டாப் மில்லெட் (Brown Top Millet) உள்ளிட்ட மாற்றுப் பயிர்களின் செயல்விளக்கத் திட்டம் ரூ.30 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிர்களின் தன்னிறைவை மேம்படுத்த ரூ.203.64 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பணிவரகு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க “தமிழ்நாடு குறுந்தானிய இயக்கம்” ரூ.7.61 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

நெல் விதை உற்பத்தி மற்றும் தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய ரூ.34.72 கோடி மதிப்பீட்டில் நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக திட்டம் செயல்படுத்தப்படும்.

மண்ணின் வளத்தை பாதுகாத்து இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் “தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்” ரூ.122.51 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தென்னை சார்ந்த பொருட்களுக்கு உலகளாவிய சந்தையை உருவாக்க ரூ.5.30 கோடி செலவில் தமிழ்நாடு தென்னைப் பத்தப்படுத்தும் கழகம் அமைக்கப்படும்.

வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

தென்னை சிறப்புத் திட்டம் ரூ.41 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல், தரமான நாற்றுகள் வழங்குதல், கொப்பரைக்கு விலை ஆதரவு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வெளிப்படையான விற்பனை விலையை உறுதி செய்ய 50 உழவர் சந்தைகளில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் மின்னணு விலைப்பட்டியல்கள் அமைக்கப்படவுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வினோத் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment