நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வாகைசூடி அருந்திறல் புரிந்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசய்.
அவருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அகரமுதல மின்னிதழ் சார்பாகவும் தமிழ்க் காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பர்களால் தளபதி என அழைக்கப்பெறும் விசய், கட்சி தொடங்கிய ஈராண்டுகள் இரு திங்களிலேயே ஆட்சிக் கட்டிலில் ஏறும் அருவினை புரிந்துள்ளார்.
பெரும்பாலும் புதிய வேட்பாளர்களையே நிற்க வைத்து, வெற்றி கண்டுள்ளார். பண வலிமை, சாதி வலிமை முதலியவற்றை முறியடித்து வாகை சூடியுள்ளார்.
தமிழ்நாடு முழுமையும் பரப்புரை மேற்கொள்ளாமை, முதன்மைச் சிக்கல்கள் குறித்து வாய் திறவாமை முதலான குறைகளை அவர்மீது சுமத்தினர். இருந்தும் அமைதியாக அதனைப் புறந்தள்ளி விட்டார்.
இதனால் அவரது ஆதரவு குறையும் என்று தேர்தல் ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தன்னம்பிகையை மட்டும் கைக்கொண்டு தன்பாணியில் செயற்பட்டார்; தன்னம்பிக்கை அவருக்கு வெற்றி மாலை சூட்டியுள்ளது.
த.வெ.க. தேர்தல் அறிக்கை திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக விசய் குறிப்பிட்டார்.
திருக்குறள் அடியான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை முழக்கமாக வைத்துள்ள அவர் தமிழ் நலன் சார்ந்தே செயற்படுவார் என எதிர்பார்க்கலாம்.
கொள்கைப் பாடல், கொடிப் பாடல், உறுதிமொழி என எதுவாக இருந்தாலும் தமிழ் உணர்வைத்தான் மையமாக வைத்துள்ளார்.
கட்சிப்பெயரில் திராவிடத்தை இல்லாமல் ஆக்கித் தமிழகத்தை முதன்மையப்படுத்தியது உண்மையிலேயே தமிழ் முனைப்பு நோக்கத்தால்தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் குமுகாய நீதி போன்றவற்றில் ஆரியத்திற்கு எதிரான திராவிடமே தேவை என்பதைத் தீண்டாமை, பகுத்தறிவு தொடர்பான தீர்மானங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி, வழிபாட்டு மொழி என்பது உறுதி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க, உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்;
தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சிக் கல்வி வரை கற்கலாம் என்பதும், தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும்;
உலகத் தொடர்பிற்காக ஆங்கிலத்தை இரண்டாவதாக ஏற்கும் தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழியாக இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் ஒன்றிய பா.ச.க. அரசின் சூழ்ச்சியைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஏற்காது; எனவும் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் சிக்கலுக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு எல்லாவகையிலும் தமிழ்மொழி, தமிழ் இன, தமிழ்நலச் சிந்தனையே த.வெ.கழகத்தின் வெளிப்பாடாக உள்ளது.
இவற்றைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டவற்றைத் தொய்வின்றி மக்கள் பயனுறும் வண்ணம் செயற்பட வேண்டும்.
தமிழுக்குச் செய்யவேண்டியவை பல உள்ளன. தமிழ் தொடர்பான எந்த அமைப்பைத் தோற்றுவித்தாலும் தமிழர் அல்லாதவரை அமர்த்துவது அல்லது தமிழுணர்வற்றவர் பொறுப்பில் ஒப்படைப்பது அல்லது தமிழறிவில்லாதவருக்கு வாய்ப்பளிப்பது என்பதே அரசின் கொள்கையாக இருந்துள்ளது. இதனை மாற்ற வேண்டும்.
மு.க.தாலின் ஆட்சியும் நிறைகளும் குறைகளும் கொண்டதுதான்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
(திருக்குறள், ௫௱௪ – 504) என்கிறார் திருவள்ளுவர்.
அவ்வாறு பார்த்தால் மக்கள் பாராட்டும்படிதான் ஆட்சி நடத்தினார். எனினும் அரசிற்கு நெருக்கமாகவும் மக்களுக்குத் தொலைவாகவும் உள்ள அதிகாரிகளால் மக்கள் ஆளுங்கட்சியிடமிருந்து விலகினர்.
செயலில் மந்தம் போன்றவற்றால் மக்களுக்கு ஆட்சியாளர் மீது வெறுப்பும் வரலாயிற்று. பொதுவாக ஒருவர் தி.மு.க. ஆதரவாளராக இருந்தால் அவர் குடும்பத்தினரும் அவ்வாறுதான் இருப்பர்.
ஆனால், இப்போது உதயசூரியனை ஆதரிப்பவர் உதயசூரியனுக்கு வாக்களித்தாலும் அவர் குடும்பத்தினர் ஊதலுக்கு வாக்கு பதியும் நிலை ஏற்பட்டது.
எனவேதான், தி.மு.க. தோல்வியுறும் என்று கருதியவர்களும் அதிர்ச்சியாகும் வகையில் பெரும் தோல்வியைக் கண்டது.
தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான பா.ச.க. வரக்கூடாது எனத் தி.மு.க. கருதியவாறே பாசக மாபெரும் தோல்வியடைந்து ஒரே ஒரு தொகுதியில்மட்டும் வெற்றி பெற்றது.
ஆனால் முதல்வர் மு.க.தாலினே வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை வந்து விட்டது. பெருந்தலைவர்களுக் கெல்லாம் தோல்வியையும் பரிசாக அளிப்பது மக்கள் வழக்கம் என்பதால் அவர் இதனை இயல்பாக எடுத்துக் கொண்டு தம் பணியைத் தொடர்வது பாராட்டிற்குரியது.
இப்பொழுது நாம் த.வெ.க. ஆட்சியமைப்பது குறித்தும் பார்க்க வேண்டும்.
த.வெ.க.விற்கு 108 ச.ம.உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதன் தலைவர் தாம் வென்ற இரு தொகுதிகளில் ஒன்றிலிருந்து பதவி விலகும் பொழுது ஆட்சியமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கை 11 ஆகிவிடும்.
இப்பொழுது பேராயக் கட்சி (காங்கிரஸ்) ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. காரணம் என்னவாக இருந்தபோதிலும் பா.ச.க. படுகுழியில் த.வெ.க.விழாமல் காக்கும் அரணாக இதை எண்ண வேண்டும்.
இதேபோல் தி.மு.க.வின் பிற தோழமைக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க, தி.மு.க. கூட்டணித் தலைவர் தாலின் இசைய வேண்டும். இல்லையேல், போதிய எண்ணிக்கை இல்லை எனச் சொல்லிக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுத்து விட்டுப் பின்னர் ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லி நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் நடத்தலாம் எனப் பாசக திட்டமிடலாம்.
எப்பொழுதும் திராவிடக் கட்சிதான் தமிழ்நாட்டை ஆளும் என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சொல்லி வந்துள்ளனர்.
எனவே, இவ்விரு கட்சிகளுமே இணைந்து ஆட்சியை அமைக்கலாம். இதற்கு எதிராக யார் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல் பாசகவிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க இம்முடிவிற்கு வருவது நல்லது எனத் தெரிவிக்கின்றோம்.
இப்போக்கு எவ்வாறு இருப்பினும் குறைந்த காலத்தில் நிறைந்த வெற்றி பெற்றுள்ள த.வெ.க.தலைவர் விசய்க்குப் பாராடடுகளையும் ஆட்சியமைக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சித்திரை 23, 2057 / 06.05.2026