ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இன்றும் பழங்கால முறைப்படி பளிங்கு கற்களைக் கொண்டு தேர்தல் நடப்பதை பார்த்தோம்.
இதற்கு நேர் எதிராக, உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாக்களித்து, தங்கள் நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள் ஒரு நாட்டின் மக்கள்!
நம் தேசத்திலேயே பார்க்கிறோம்… பல கி.மீ. தூரம் நடந்து சென்று, நீண்ட வரிசையில் தவம் இருந்து வாக்களிக்கும் மக்கள், ஆள் அரவமில்லாத காடுகளில் ஓரிருவருக்காக வாக்குச்சாவடி அமைப்பது, கழுதைகளில் வாக்குப்பெட்டிகள் பயணிப்பது.. இப்படி!
ஆனால், அந்த நாட்டின் குடிமக்கள் வீட்டில் சோஃபாவில் அமர்ந்து, ஒரு கையில் காபி கோப்பையுடன் மறு கையில் ஸ்மார்ட்போனைத் தட்டி நாட்டின் தலைவரையே தீர்மானிக்கிறார்கள்!
இந்த எட்டாவது (டிஜிட்டல்) அதிசயத்தை செய்து காட்டியிருக்கும் நாடு – எஸ்டோனியா!
டைகர் லீப்: குட்டி நாட்டின் பெரும் பாய்ச்சல்!
வடக்கு ஐரோப்பாவின் பால்டிக் கடலோரம், பின்லாந்து மற்றும் ரஷ்யாவை அண்டை நாடுகளாகக் கொண்டுள்ளது எஸ்டோனியா.
பரப்பளவில் நம் தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு.. மக்கள் தொகையோ வெறும் 13.6 லட்சம் தான்.
1991-இல் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்தபோது, இந்த நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்தது.
ஆனால், “தொழில்நுட்பம் மட்டுமே நம்மைக் காப்பாற்றும்” என்று நம்பிய அந்நாட்டு அரசு, 1996-இல் ‘டைகர் லீப்’ என்ற அதிரடித் திட்டத்தைத் தொடங்கியது.
அதாவது, நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் – ஆரம்பப் பள்ளிகள் உட்பட – கம்ப்யூட்டரை கொண்டுவந்து இறக்கியது.
‘அ, ஆ’ கற்கும் ஐந்து வயதிலேயே அங்கிருக்கும் மழலைகள் ஜாலியாக ‘கோடிங்’ எழுதத் தொடங்கினார்கள்.
ஸ்கைப் பிறந்த மண்ணில் டேட்டா தான் தர்மம்!
உணவு, தண்ணீர் போல இன்டர்நெட்டும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்று அறிவித்து, நாடு முழுக்க இலவச வைஃபை வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் படித்து வளர்ந்த இளைஞர்கள்தான், இன்று உலகமே பயன்படுத்தும் ‘ஸ்கைப்’ மென்பொருளை உருவாக்கி உலகை மிரள வைத்தார்கள்.
இன்று உலகிலேயே அதிக ‘யூனிகார்ன்’ ஸ்டார்ட்அப்களைக் கொண்ட நாடாக எஸ்டோனியா திகழ்கிறது.
அதாவது, இவர்கள் அரிசியையோ பருப்பையோ ஏற்றுமதி செய்யவில்லை;
மாறாக, உலக நாடுகளுக்குத் தேவையான ‘டிஜிட்டல் அறிவை’ ஏற்றுமதி செய்து கோடி கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.
கல்யாணம் முதல் ஓட்டு வரை… எல்லாம் ஒரு ‘கிளிக்’தான்!
நாடே கணினி மயமானதால், அரசு அலுவலக வாசலில் காத்து நிற்கும் அவசியமே இல்லாமல் போனது. 99% அரசு சேவைகளை மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமலேயே பெற முடிந்தது.
ஆமாம். திருமணம் முதல் விவாகரத்து வரை எதற்கும் அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை.
எல்லா பதிவுகளையும் ஒரு போன் மூலம் செய்து முடித்துவிடலாம்.
இந்த டிஜிட்டல் நிர்வாகத்தால் காகிதங்கள் மிச்சமானது ஒருபுறம் என்றால், வருடத்திற்கு நாட்டின் ஜிடிபியில் 2% சேமிக்கப்பட்டது.
இது அந்த நாட்டு ராணுவ பட்ஜெட்டுக்கு இணையான தொகை!
நமக்குபுரியும்படி சொன்னால், சுமார் ₹3.6 லட்சம் கோடி ரூபாய்!
“இவ்ளோ பண்ணிட்டோம்.. தேர்தலையும் டிஜிட்டல் முறையில் நடத்தினால் என்ன” என்று யோசித்தார்கள்.
விளைவு, 2005-ஆம் ஆண்டு இணைய வழி வாக்குப்பதிவை அறிமுகப்படுத்தியது எஸ்டோனியா. உலகிலேயே முதல்முறையாக!
அன்று இந்த டிஜிட்டல் முறையில் – அதாவது, வீட்டிலிருந்தபடியே செல்போன், லேப்டாப் மூலம் – வாக்களித்தவர்கள் 2 சதவீதம்தான்.
மற்றவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்துதான் வாக்களிக்கார்கள்.
ஆனால், 2023 தேர்தலில் 51 சதவீதம் பேர், டிஜிட்டல் முறையில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
அதுமட்டுல்ல, உலகெங்கிலும் சுமார் 140 நாடுகளிலிருந்து எஸ்டோனிய குடிமக்கள் ஆன்லைனில் வாக்களித்தனர்.
மிரட்டல் ஹேக்கர்களுக்கு இங்கே வேலையில்லை!
உங்களுக்குத் தோன்றலாம்.. ஒரு வாக்காளருக்குப் பின்னால் யாராவது நின்று “இவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று மிரட்டினால்?
பயப்படவே தேவையில்லை. மிரட்டுபவர் முன்னால் அவருக்குப் பிடித்த வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு, அவர் சென்ற பிறகு மீண்டும் லாகின் செய்து தனது உண்மையான விருப்பப்படி வாக்கை மாற்றிக்கொள்ளலாம்.
அதாவது வாக்குப்பதிவு தினத்துக்கு முன் ஒரு வாரம் வரை இப்படி டிஜிட்டலில் எத்தனை முறை வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.
வாக்குப் பதிவு அன்று, வாக்குச் சாவடிக்கு சென்று மட்டும் வாக்களிக்க முடியும்.
அப்போதும் போய் நீங்கள் வாக்களித்தால், முந்தைய உங்களது டிஜிட்டல் வாக்குகள் நீக்கப்பட்டு, கடைசியாக நீங்கள் அளித்த வாக்கு, கணக்கில் கொள்ளப்படும்.
இன்னொரு முக்கிய விசயம், நேரடி வாக்குப்பதிவு என்பது, இந்தியா போல இ.வி.எம். மிசன் அல்ல… வாக்குச் சீட்டு முறைதான்!
உடைக்க முடியாத டிஜிட்டல் கண்ணாடிப் பெட்டி!
இவ்வளவு டிஜிட்டல் மயம் என்றாலும், ஹேக்கர்களால் சர்வரைத் தாக்க முடியுமா? என்ற கேள்விக்கு எஸ்டோனியா வைத்திருக்கும் விடை ‘பிளாக் செயின்’. இது மிக நவீன தொழில்நுட்பம்!
ஒருமுறை உங்கள் வாக்கு பதிவாகிவிட்டால், அதை அரசாங்கத்தால் கூட அழிக்கவோ மாற்றவோ முடியாது.
ஒவ்வொரு குடிமகனும் தனது தரவை யாராவது பார்த்தார்களா என்பதை ஆன்லைனில் கண்காணிக்க முடியும்.
ஒரு மையமான சர்வரில் தகவல்களைச் சேமிக்காமல், பல இடங்களில் பிரித்துச் சேமிக்கிறார்கள்.
இதனால் ஹேக்கர்களால் ஒட்டுமொத்தத் தரவையும் முடக்க முடியாது.
சுருக்கமாகச் சொன்னால், எஸ்டோனியாவின் டிஜிட்டல் அரசு என்பது ஒரு “கண்ணாடிப் பெட்டி” போன்றது.
எல்லாம் வெளிப்படையாக இருக்கும், ஆனால் யாராலும் உடைக்க முடியாது!
காம்பிய நாட்டின் பழமையான பளிங்குக்கல் தேர்தல், எஸ்டோனியாவின் டிஜிட்டல் தேர்தல் இரண்டும் இந்த உலகத்தின் நேரெதிர் அதிசயங்கள்.
ஆனால், இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.
அது – மக்களின் உண்மையான குரல் பதிவாவது!