குயிலனின் ‘காக்கையும் மனிதனும்’ எனும் முதல் கவிதை, அவரது பதினைந்தாவது வயதில், வ.ரா. ஆசிரியராக இருந்த ‘பாரத தேவி’ இதழில் வெளியானது.
தொடர்ந்து ‘சுதேசமித்திரன்’, ‘திருமகள்’, ‘இந்திரா’, ‘மாலதி’, ‘ஹிந்துஸ்தான்’, ‘கல்வி’, ‘ஜனசக்தி’, ‘தொழிலாளர் உலகம்’, ‘முத்தமிழ் மலர்’, ‘தியாகி’, ‘சக்தி’, ‘நவயுவன்’, ‘தென்றல்’, ‘திராவிடநாடு’ உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதினார்.
சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல்வேறு நூல்களை எழுதினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார் குயிலன். மனைவி சீதாலக்ஷ்மியுடன் இணைந்து ‘சீதாலக்ஷ்மி குயிலன்’ என்ற பெயரில் பல படைப்புகளை எழுதினார்.
குயிலன், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, வடமொழியிலிருந்து தமிழுக்கு எனப் பல நூல்களை மொழிபெயர்த்தார். வடமொழி நூலான விவேக சூடாமணியைத் தமிழில் கவிதை நடையில் தந்தார்.
குயிலனின் மொழிபெயர்ப்பில் வெளியான எமிலி ஜோலோவின் ‘தெரசா’ குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பு நூலாக அறியப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் குயிலனின் படைப்புகள் வெளியாகின.
திரைப்படம்
குயிலன் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான படங்களின் தமிழ் வடிவத்திற்கு வசன ஆசிரியராகப் பணியாற்றினார். ஏ.எல். நாராயணனால் ‘உலகம்’ என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.
மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய தஞ்சை ராமையாதாஸ், கம்பதாசன், புரட்சிதாசனுக்குப் பின் அதிகப் படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியவர் குயிலன்.
அரபு நாட்டு அழகி, அருமைத் தங்கை அபிராமி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆசை மகன் ஆகிய படங்கள் உள்பட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
இலக்கியப் பணி
ஒரு கிராமம் விழித்துக்கொள்கிறது, பெண்களுக்கு உதவி உள்ளிட்ட பல நூல்களையும், பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் உள்ளிட்ட நாவல்களையும் பல கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
குயிலன் எழுதிய திரைப்பாடல்களை, திருப்பூர் அகிலா விஜயகுமார் மற்றும் புதுவை ஜெ. அபுபக்கர் ஹனிபா இருவரும் இணைந்து ‘கவிஞர் குயிலன் திரை இசைப் பாடல்கள்’ என்ற தலைப்பில் தொகுத்தனர். மணிவாசகர் பதிப்பகம், 2015-ல் அதனை நூலாக வெளியிட்டது.
மரபுக் கவிதையில் தேர்ந்தவராக விளங்கிய குயிலன், தமிழின் குறிப்பிடத்தகுந்த திரைப்பாடல்களைத் தந்த பாடலாசிரியராக அறியப்படுகிறார்.
குயிலனின் படைப்புகள் பற்றி நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, “குயிலன் அவர்களின் கவிகளில் நல்ல சொல்லாட்சியும், கற்பனை ஆர்வமும் நிறைந்திருக்கின்றன” என்று மதிப்பிட்டார்.
இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக குயிலன் மதிப்பிடப்படுகிறார்.