மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமே இந்த வெற்றி!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். பதிவான 1,74,192 வாக்குகளில் 1,10,156 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 10,827 வாக்குகளும், தேமுதிக 1, 432 வாக்குகளும் பெற்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தவிர எஞ்சிய வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது.

எனது மகன் இருந்து செய்ய வேண்டிய பணிகளை தொகுதி மக்களுக்காக நான் செய்வேன். இந்த வெற்றி மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது” என்றும் குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment