மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால் அத்தகைய இடங்களில் சில ஊர்களில் கடைகள் அமைக்கப்படுகின்றன.
இதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனையடுத்து சில நாள்கள் கடைகள் அடைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் அதே இடத்தில் கடைகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதைத் தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
அதன்படி மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரீசிலிக்க வேண்டும் என்றும், மக்கள் எதிர்ப்பை மீறி கடைகள் திறக்க அனுமதியளித்தால் 30 நாள்களுக்குள் ஆட்சியரின் முடிவை எதிர்த்து மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்ய சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
03.03.2022 12 : 30 P.M