தந்தையின் கனவுகளுக்கு சிறகுகள் தந்த மகன்!

“என் மகனை சர்க்கஸுக்கு அனுப்ப மாட்டேன்; அவனைப் படிக்க வைத்து மருத்துவராக்குவேன்!” – என்று நம்பிக்கையோடு சொன்னவர் கணேஷ் பாரையாவின் தந்தை.

3 அடி உயரமும் 20 கிலோ எடையும் கொண்ட இளைஞர். இன்று இவரது பெயர் பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் சிறுவனாக இருந்தபோது, அவரது உடல் தோற்றத்தைக் கண்டு சர்க்கஸ் நடத்துபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.

கணேஷை தங்களிடம் ஒப்படைத்தால், அவரது தந்தைக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினர். அக்காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்திற்கு அது மிகப்பெரிய தொகை.

ஆனால், அந்தத் தந்தை உறுதியாகச் சொன்னார்:

“என் மகனை நான் படிக்க வைப்பேன். சர்க்கஸுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க மாட்டேன்!”

தந்தை கண்ட அந்தக் கனவுக்கு சிறகுகள் கொடுக்க, கணேஷ் தனது முழு முயற்சியுடன் படித்தார்.

2018-ம் ஆண்டு NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், அவரது உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி மருத்துவக் கல்லூரியில் MBBS சேர்க்கை மறுக்கப்பட்டது.

ஆனால், கணேஷ் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

உயர்நீதிமன்றத்திலும், தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி, தனது மருத்துவக் கல்விக்கான உரிமையைப் பெற்றார்.

இன்று, MBBS படிப்பையும் இன்டர்ன்ஷிப்பையும் நிறைவு செய்து, டாக்டர் கணேஷ் பாரையா ஆகியிருக்கிறார்!

சமீபத்தில் கௌன் பனேகா குரோர்பதி (KBC) நிகழ்ச்சியில் தனது வாழ்க்கைப் பயணத்தை கணேஷ் பகிர்ந்தபோது, அதை கேட்ட அமிதாப் பச்சனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

வரம்புகள் உடலுக்குத்தான்; மனதிற்கு அல்ல என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்த கணேஷுக்கும், தனது மகனின் திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்த அந்தத் தந்தைக்கும் ஒரு பெரிய சல்யூட்.

  • நன்றி : விஜித் குமார் முகநூல் பதிவு 
Comments (0)
Add Comment