தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. பகுத்தறிவுக் கவிராயர், சீர்திருத்தக் கவிஞர், தமிழக பாவலர் என்ற சிறப்புகளைப் பெற்ற உடுமலை நாராயண கவியின் நினைவு நாள் இன்று (1899-1981).
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றார். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார்.
கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில் கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார்.
உடுமலை சரபமுத்து சாமி கவிராயரிடம் மாணவராக அறிமுகமாகி நாடகத்தில் நடித்தும் எழுதியும் பாடி அதன் நுட்பங்களை கற்றுத் தேர்ந்தார். பின்னர் முத்துச்சாமி அவர்களின் பரிந்துரையால் சங்கரதாஸ் சாமியிடம் நாடக கலையை கற்றுத் தேர்ந்தார்.
இவருடைய பாடல்கள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கிய செழுமையையும் கொண்டு இருந்தன. 1933 முதல் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர்.
நாராயணகவி என்று பெயர் சூடிக் கொண்டு கவிஞர் இனம் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர்.
அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா, திரைப்படங்களுக்கும் பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல் தூக்குத் தூக்கி, தெய்வப் பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள்வீட்டு மகாலட்சுமி, ரத்தகண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர்.
ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதி உள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும் சொல்திறமையும் மிக்கவர். எவர்களிடமும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரைஉலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
தன் பாடல்கள் மூலம் சமூகத்தில் புரையோடிப் போய் இருந்த மூடப்பழக்கவழக்கங்களைக் களையெடுக்கும் வேலையை சத்தமில்லாமல் செய்து வந்தார் உடுமலை நாராயண கவி. அந்த நாட்களில் சுமார் 10 ஆயிரம் பாடல்களை எழுதினார்.
தமிழும் இசையும் உள்ளவரை நிலை பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82-வது வயதில், 23.5.1981-ல் மறைந்தார். இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008-ல் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் ஒன்றை அமைத்துள்ளது.
இங்கு உடுமலை நாராயண கவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான ஒளிப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரிடத்திலும் தன்மானக் கொள்கையிலும் ஆழ்ந்தப் பற்றுள்ளவர். கழகத்தலைவர் ஒரு முறை அங்கு சென்றபோது, மூப்படைந்த அவரை – சந்தித்து நலம் விசாரித்து சால்வை போர்த்தி சிறப்பு செய்தார்.
- நன்றி – விடுதலை இதழ்
அண்ணா உடுமலைநாராயணகவி என்எஸ்கே கலைவாணர் தந்தைபெரியார் பகுத்தறிவு சீர்திருத்தம் பகுத்தறிவுகவிராயர் சீர்திருத்தக்கவிஞர் Anna UdumalaiNarayanakavi NSK Kalaivanar Periyar
#அண்ணா #உடுமலைநாராயணகவி #என்எஸ்கே #கலைவாணர் #தந்தைபெரியார் #பகுத்தறிவு #சீர்திருத்தம் #பகுத்தறிவுகவிராயர் #சீர்திருத்தக்கவிஞர் #தமிழகபாவலர் #Anna #UdumalaiNarayanakavi #NSK #Kalaivanar #Periyar #Rationalism #SocialReform #RationalistPoet #ReformistPoet #TamilPoet