தமிழை விற்க நான் சம்மதிக்க மாட்டேன்!

- தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்

பரண்:

“தமிழறிஞர்களையும், புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளைக் காண விரும்பினார்.

மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவரும் இல்லையே! சுவாமிகள் மட்டும் ஏன் இன்னும் மன்னர் மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினால் உங்களுக்கு ‘கனகாபிஷேகம்’ செய்வாரே மன்னர்’’ என்றார்.

சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதில்லை என்று நோன்பு கொண்டவர். ஆதலால் மன்னர் மீது புகழ் மாலை பாட மறுத்துவிட்டார்.

மீண்டும் மீண்டும் பலர் வந்து இது பற்றி வற்புறுத்தியபோது சினங்கொண்டு “என்னை விட மன்னன் எந்த விதத்திலும் உயர்ந்தவன் அல்லன். எதற்காக நான் அவனைப் புகழ வேண்டும்? மன்னன் மீது பாடினால் தான் எனது புலமை மன்னனுக்குப் புரியுமோ?’’ என்று கூறி விட்டார்.

சுவாமிகள் இறுதி வரையில் ‘நரஸ்துதி’ பாடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமிகள் அவ்வப்போது எழுதிய பக்தி ரசப் பாடல்களை எல்லாம் திரட்டி ஒரு சிறு நூலாக வெளியிடச் சில அச்சகத்தார் முயன்றனர்.

சுவாமிகளிடம் அதற்கான அனுமதியைக் கேட்டனர்.

“இலவசமாக வாங்கிக் கொள்வது என்றால் அச்சிட்டுக் கொள்ளுங்கள். தமிழை விலைக்கு விற்கச் சம்மதிக்க மாட்டேன்’’ – என்று கூறி மறுத்துவிட்டார் சுவாமிகள்.

  • அவ்வை சண்முகம் எழுதிய ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என்ற தலைப்பிட்ட சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிய நூலில் இருந்து ஒரு பகுதி.
Comments (0)
Add Comment