‘சகோதரி’ – சந்திரபாபு நடிப்புக்குக் கிடைத்த வெற்றி!

சினிமா துவங்கியது முதலே நகைச்சுவை காட்சி அதாவது காமெடி என்பது சினிமாவில் முக்கிய பங்கை வகித்து வருகிறது.

1930-களுக்கு முன்பு வெளியான சில படங்களிலேயே காமெடி என்பது இருந்தது. 1930, 40-களில் கூட காமெடி காட்சிகளை மையப்படுத்தி நகரும் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியானது.

1940, 50, 60-களில் என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, வி.கே.ராமசாமி, சந்திரபாபு, நாகேஷ் என பல நடிகர்கள் தங்களின் காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

இதில், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. இதில், சந்திரபாபு நடிப்பு, நடனம், இயக்கம், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர்.

வித்தியாசமான உடல் மொழியில் ரசிகர்களை கவர்ந்தவர். புத்தியுள்ள மனிதரெல்லாம், குங்குமப்பூவே கொஞ்சிப்புறாவே என இவர் பாடி நடித்த பல பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட்.

இப்போதும் அந்தப் பாடலை ரசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி காட்சிகளாலேயே பல திரைப்படங்கள் ஓடியிருக்கிறது.

அதனால்தான் நாகேஷ் பீக்கில் இருந்தபோது அவரின் கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கூட காத்திருப்பார்கள்.

ஏனெனில், படத்தின் வெற்றிக்கு நாகேஷ் தேவைப்பட்ட காலம் அது. அதுபோலத்தான் சந்திரபாபுவும். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘சகோதரி’.

பீம்சிங் இயக்கிய இந்தப் படத்தில் பிரேம் நசீர், முத்துராமன், தேவிகா, அசோகன் என பலரும் நடித்திருந்தனர்.

ஆனால், இந்தப் படத்தை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் “இந்தப் படம் 2 காட்சி கூட ஓடாது. சந்திரபாபுவை வைத்து எதாவது செய்யுங்கள்” என சொல்லிவிட்டார்.

இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதிய முரசொலி மாறன் பால்காரன் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் சந்திரபாபுவை நடிக்க வைத்தார்.

இந்தப் படம் 1959-ம் வருடம் வெளியானது. பால்காரன் கதாபாத்திரத்தில் சந்திரபாபு செய்த அட்டகாசத்தில் தியேட்டரே அதிர்ந்தது.

இந்தப் படத்தில் அவர் பாடி நடித்த ‘நானொரு முட்டாளுங்க’ பாடல் அதிரிபுதிரி ஹிட் ஆனது.

மொத்தத்தில், அவரின் காமெடியாலேயே தோல்வி அடையவேண்டிய ‘சகோதரி’ படம் சூப்பர் ஹிட் படமாக மாறியது.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் சகோதரி கதாபாத்திரத்தை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர் சொல்லுவார்.

இந்தப் படம் வெளியானபோது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை ‘டாக்டரால் காப்பாற்ற முடியாத சகோதரியை பால்காரன் காப்பாற்றிவிட்டான்’ என எழுதியது. அதுதான் சந்திரபாபுவின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி.

  • நன்றி: சினி ரிப்போர்ட்டர்ஸ்
Comments (0)
Add Comment