ஆர்.சி.பி. அணிக்குத் தடை வருமா?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குத் தடை விதிக்கப்படுமா என்பதுதான் கிரிக்கெட் உலகில் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் அகமதாபாத்தில் நிறைவடைந்தது.

18 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு இந்த முறை ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இது அந்த அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆர்சிபி அணியின் வெற்றியை பெங்களூரு நகரில் கொண்டாட, அடுத்த நாளே பிரம்மாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை வெற்றிப் பேரணி நடத்தி, பின்னர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்றதால் எதிர்பார்த்ததற்கும் மாறாக பெரும் கூட்டம் பெங்களூருவில் கூடியது.

மைதானத்தின் கொள்ளளவு 30 ஆயிரமாக இருந்த நிலையில் சுமார் 3 லட்சம் பேர் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சின்னசாமி மைதானத்தின் அருகில் ஒன்று கூடினர்.

இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 11 பேர் வரை அதில் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.

இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக கர்நாடக அரசு 25 லட்ச ரூபாயும், ஆர்சிபி நிர்வாகம் 10 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது.

இந்த துயரச் சம்பவத்துக்கு கர்நாடக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்கட்சியான பாஜக கூறியுள்ளது.

டந்த சம்பவத்துக்கு கர்நாடக அரசும், அம்மாநில கிரிக்கெட் வாரியமும், போலீஸாரும், ஆர்சிபி நிர்வாகமும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நெரிசலுக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பெங்களூரு கிரிக்கெட் சங்க நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி, பெங்களூரு நகரின் மத்திய பகுதியில் இருக்கும் சின்னசாமி மைதானத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் கூறியிருக்கிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ஆட ஆர்சிபி அணிக்கு அனுமதி வழங்கப்படுமா, அல்லது அந்த அணி தடை செய்யப்படுமா என்ற கேள்வியும் பெரிய அளவில் எழுந்துள்ளது.

பெங்களூரு நெரிசல் சம்பவத்தால் தங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்க ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ தடை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக இதே போன்று கிரிக்கெட் பெட்டிங் விவகாரம் பெரிய அளவில் எழுந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பிசிசிஐ 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்திருந்தது.

அதேபோல் இப்போது ஆர்சிபி அணிக்கும் ஓராண்டாவது தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஐபிஎல் நிர்வாகம் அன்ஃபாலோ செய்ததாக ஒரு தகவல் வெளியானது. அதை ஐபிஎல் வட்டாரம் மறுத்துள்ளது.

– பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment