ஒரு நடிகரைக் குறிப்பிட்ட காலகட்டத்தில் திரைப்படங்களில் காண முடியவில்லை எனில், ‘அவர் சும்மாதான் இருப்பார்’ என்பதே வெளிப்பார்வையாக நோக்குபவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால், அந்த மனிதரைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே ‘என்ன செய்கிறார்’, ‘எதிர்காலத்தில் அது எப்படிக் கவனிக்கப்படும்’ என்கிற விஷயங்கள் தெரியும். திரையுலகில் வெற்றிநடை போட்டுவிட்டு, பிறகு அவ்வப்போது தலைகாட்டினால் போதுமென்கிற பலருக்கு இது பொருந்தும். என்றாலும், நடிகர் ராஜேஷைப் பற்றிக் குறிப்பிடும்போது இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
வெறுமனே நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராக, எழுத்தாளராக, தொழில் முனைவோராக, ஜோதிடம் பார்ப்பவராக, தொகுப்பாளராகப் பல முகங்களைக் கொண்டவர் ராஜேஷ். ஏற்கனவே சொன்னது போலத் திரையுலகில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரது பங்களிப்பு குறைந்த காலத்தில் இதர துறைகளில் அவர் மும்முரம் காட்டி உயர்ந்தது அவரைச் சார்ந்தவர்களுக்கே தெரியும்.
எளிய பின்புலம்!
இன்றைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர் ராஜேஷ். இவரது தந்தை, தாய் இருவருமே கல்வித்துறையில் பணியாற்றியவர்கள். அதனால் சிறு வயது முதலே சீரிய ஒழுக்கத்துடன் வளர்ந்தார். பாடல், நாடகம் போன்றவற்றில் இவருக்கு ஆர்வம் இருந்தபோதும், சிறு வயதில் இவர் அதிகமாகத் திரைப்படங்கள் பார்த்ததில்லை. தாய்க்குப் பின் தாரம், மதுரை வீரன் என்று ஓரிரு படங்களையே இவர் கண்டிருக்கிறார்.
ஆனாலும், சினிமா மீதான மோகம் மெல்ல ராஜேஷைப் பீடிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக, ‘எப்படியாவது நாயகன் ஆகிவிட வேண்டும்’ என்ற எண்ணமும் வளர்ந்தது.
இருபதுகளில் பள்ளிப்படிப்பு, ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு வேலை தேடத் தொடங்கினார் ராஜேஷ். சென்னையில் அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து புரசைவாக்கம், ராயபுரம் பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார். அதேநேரத்தில், தனது சினிமா கனவை நோக்கி நடைபோடும் வகையில் தன்னுடைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டு தயாரிப்பு நிறுவனங்கள் பல ஏறி இறங்கியிருக்கிறார்.
அந்த வகையில், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின்போது இயக்குனர் கே.பாலசந்தரைப் பார்த்திருக்கிறார் ராஜேஷ். அதில், கமல்ஹாசன் நடித்த விகடகவி வேடத்தில் முதலில் அவரைத்தான் நடிக்க வைக்கும் எண்ணத்தில் இருந்திருக்கிறார் பாலசந்தர். பிறகு, ஏனோ அந்த யோசனையைக் கைவிட்டிருக்கிறார். ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
அந்த ஏமாற்றம் ராஜேஷைத் திரைப்படங்களில் உதவி இயக்குனராகச் சேர உந்தியிருக்கிறது. அந்த காலகட்டத்தில் மகேந்திரன், பாரதிராஜா என்று பல இயக்குனர்களைச் சந்தித்திருக்கிறார். திரைப்பட உருவாக்கம் குறித்த புத்தகங்களை வாசித்திருக்கிறார். அது, ஒரு திரைப்படத்தின் கதை மற்றும் உருவாக்கம் குறித்த சூட்சமங்களைப் புரிய வைத்திருக்கிறது. பின்னர் அதுவே அவர் நடிகராக மிளிரவும் காரணமானது.
தொடர்ந்து பாரதிராஜாவைச் சந்தித்து வந்த ராஜேஷ், அவரது சிபாரிசின் பேரில் ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் நாயகன் ஆனார். அந்த படத்தை இயக்கிய பாலகுரு மற்றும் அதில் வில்லனாக நடித்த பாக்யராஜின் விருப்பமாக விஜயகாந்த் இருந்திருக்கிறார். ஆனாலும், பாரதிராஜா சொல்லியிருந்த காரணத்தால் நாயகன் ஆனார் ராஜேஷ். அந்தப் படம் நடிகர் ராஜேஷ் என்பவரைத் திரையுலகில் வலுவாகக் காலூன்றச் செய்தது.
நினைவிலிருத்தும் படங்கள்!
காளையை அடக்குகிற முயற்சியில் தனது ஆண்மையை இழந்த ஒரு மனிதனாக நடிக்க வேண்டிய வாய்ப்பு. நாயகனாக அறிமுகமாகும் எவரும் இப்படியொரு பாத்திரத்தை விரும்ப மாட்டார்கள். திரையில் தான் ஆண்மையின் அடையாளமாகத் திகழவே விரும்புவார்கள். ஆனால், ’எதுவானாலும் ஒரு கதையிலுள்ள பாத்திரமே’ என்றெண்ணி துணிந்து நடித்தார் ராஜேஷ். அதன் பலனாக, ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார்.
எண்பதுகளில் தனி மரம், தைப்பொங்கல், நான் நானேதான் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார் ராஜேஷ். அவை பெரிய கவனிப்பைப் பெறாத நிலையில், மீண்டும் பாக்யராஜ் அவருக்குக் கைகொடுத்தார். ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் நாயகி அம்பிகாவிற்கு கணவராக நடித்திருப்பார்.
பாக்யராஜும் காஜாவும் அம்பிகாவும் கல்லாப்பெட்டி சிங்காரமும் தூள் கிளப்புகிற காட்சிகள் படம் முழுக்க இருந்தன. ஆனால், அவர்களது பாத்திரங்களை விலக்கிவிட்டு ‘டாக்டராக’ வந்த ராஜேஷ் ரசிகர்களின் மனதை நிறைத்தார்.
இத்தனைக்கும் அதிலும் அவருக்கு வித்தியாசமான பாத்திரம் தான். மனைவியாக வந்தவர் இன்னொருவரைக் காதலித்திருக்கிறார் என்பதை அறிந்து அவருடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிற மனிதராக நடித்திருந்தார். இது போன்ற வாய்ப்புகளே ராஜேஷ் திரையுலகில் தடம் பதிக்க அடித்தளம் இட்டன.
’அந்த 7 நாட்கள்’ படத்திற்குப் பிறகு நாயகனாக மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும் வில்லனாகவும் கூட நடிக்கத் தயாரானார் ராஜேஷ்.
பயணங்கள் முடிவதில்லை, மெட்டி, தாய் வீடு, ஒரு இந்திய கனவு என்று நடித்து வந்தவரை ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் எதையும் செய்யத் துணிகிற ஒரு அரசியல்வாதியாகத் தோன்றச் செய்தார் பாலசந்தர்.
அதுவரை திரைப்படங்களில் அரசியல்வாதிகள் அப்படிச் சித்தரிக்கப்பட்டதில்லை எனும் வகையில் அப்படத்தில் ராஜேஷின் நடிப்பு அமைந்தது. அதன்பிறகே தெலுங்கு படங்களில் இதுபோன்ற பாத்திரங்கள் பல படங்களில் இடம்பெற்றதாகத் திரையுலகில் சொல்லப்படுவதுண்டு.
ஆர்.சி.சக்தி இயக்கிய ‘சிறை’ திரைப்படம், நடிகர் ராஜேஷின் நடிப்பு வாழ்க்கையில் மிக முக்கியமானது. நாடு முழுவதும் இருந்த பிற மொழிக் கலைஞர்களுக்கு அவரைத் தெரிய வைத்த படமது.
அந்த காலகட்டத்தில் முடிவல்ல ஆரம்பம், செயின் ஜெயபால், ராஜாத்தி ரோஜாகிளி, நிலவே மலரே, யாரோ எழுதிய கவிதை, மண்ணுக்குள் வைரம், மக்கள் என் பக்கம் எனப் பல படங்களில் நடித்தார் ராஜேஷ். அவர் நாயகனாக நடித்த சில படங்கள் வெற்றி பெறவில்லை.
அதனைத் தொடர்ந்து தன்னைக் குணசித்திர நடிகராக மாற்றிக்கொள்ள முயற்சித்தார். பிற்பாடு அதில் வெற்றியும் அடைந்தார்.
பன்முக ஆளுமை!
1985 வாக்கில் திரைப்பட படப்பிடிப்புக்கு உதவுகிற வகையில் சென்னை கே.கே.நகரில் ஒரு பங்களாவை கட்டினார் ராஜேஷ். அதன்பின் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் படப்பிடிப்புக்காகவே சில கட்டடங்களைக் கட்டியபோதும், அவர்களது முன்மாதிரியாக அவரே இருந்தார்.
தொண்ணூறுகளில் ஜானகி அம்மையார் தலைமையிலான அதிமுக கட்சியில் தீவிரமாக இயங்கினார். அந்த காலகட்டத்தில் தொழிலதிபர் ஜேப்பியாரின் நட்பு அவருக்குக் கிடைத்தது.
ஜேப்பியார் தந்த யோசனையின்படி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். ஹோட்டல் கட்டுமானம் உள்ளிட்ட சில தொழில்களிலும் கால் பதித்தார். அதன் காரணமாக, திரைப்படங்களில் குறைவாக நடிக்க ஆரம்பித்தார். தன்னைத் திருப்தியுறச் செய்கிற பாத்திரங்களை மட்டுமே ஏற்பது என்ற முடிவுக்கு வந்தார்.
வானமே எல்லை, பொன்னுமணி, ஜெய்ஹிந்த், மகாநதி, அருவா வேலு, இருவர் என்று அந்த வரிசை பெரியது. 2000-வது ஆண்டுக்குப் பிறகும் அந்த அணுகுமுறையையே தொடர்ந்தார். அதேநேரத்தில், திரைத்துறையில் இருந்த நட்பு வளையத்தோடு தொடர்ந்து பிணைப்பைக் கொண்டிருந்தார். திரைப்பயணம் குறித்த சில புத்தகங்களை எழுதினார்.
அந்த காலகட்டத்தில், ஜோதிடத்தை விஞ்ஞானப்பூர்வமாக அணுகினார். அதன் நுணுக்கங்கள் குறித்து தேடித் தேடித் கற்கத் தொடங்கினார். அத்துறையில் இருக்கும் பலரோடு பழகி, அவர்களது நண்பர் ஆனார். ஜோதிட சூட்சமங்களைத் தேடி அறிவதில் நிறையவே ஆர்வம் காட்டினார். தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.
இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்த பலருக்கு ராஜேஷை ‘யூடியூப் ஆளுமை’யாகவே தெரியும். அந்த அளவுக்குச் சமீபகாலமாகப் பல வீடியோக்களில் அவர் இடம்பெற்றிருக்கிறார். ஜோதிடர்கள், மருத்துவர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். உடல்நலனைப் பேணிப் பராமரிப்பது குறித்த, இன்றைய நவீன சித்தாந்தங்களுக்கு மாறான விஷயங்களைப் பேசின ராஜேஷின் பேட்டிகள். அந்த வகையில், அவரைக் குறித்த தேடல்களும் அதிகமாயின.
கடந்த பத்தாண்டுகளில் தெனாலி ராமன், தர்மதுரை, சர்கார், மாஸ்டர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சில படங்களில் நடித்த ராஜேஷ், இறுதியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதியோடு தோன்றியிருந்தார்.
திரையாளுமை சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியொன்றில், தான் எப்படியெல்லாம் கடந்த காலத்தில் இருந்தேன் என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார். இயக்குனர் ஸ்ரீதர் போன்ற ஆளுமைகள் தன்னை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்திருந்தார். தான் ஒரு பன்முக ஆளுமை என்பதை மறந்து எளிமையானவராகத் தன்னை வெளிப்படுத்தியிருந்தார்.
‘இந்த மனிதர் மிகச்சில நிமிடங்களில் விவரித்த நிகழ்வுகளே இப்படியொரு அனுபவமாக இருக்கின்றனவே. இன்னும் எத்தனை எத்தனை நினைவுகள் இவருக்குள் புதைந்திருக்கும்’ என்று ரசிகர்கள் அவற்றை அவரிடம் இருந்து பெறத் துடித்த தருணத்தில் இவ்வுலகை விட்டு மறைந்திருக்கிறார்.
திரையுலகில் முத்திரை பதிக்கிற கலைஞர்கள் தங்களது சொந்த வாழ்விலும் வெற்றியாளராகத் திகழ்ந்தால் மட்டுமே உலகம் என்றென்றும் நினைவுகூரும் என்பதனைச் சொல்லிவிட்டுச் சென்ற சிலரில் ஒருவராகியிருக்கிறார் ராஜேஷ். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை முழுவதுமாக அறிந்தவராக, மனதின் அடியாழத்தில் நினைத்ததைச் சில காலம் கழித்து அடைந்தவராக, மொத்தத்தில் சுயமதிப்பீட்டின் அடையாளமாகத் திகழ்ந்திருக்கிறார்.
வாழ்நாள் முழுவதும் தன்னெதிரே வந்த அத்தனை மனிதர்களையும் நேசிப்போடு எதிர்கொண்ட ராஜேஷ் அவர்களது ஆன்மா, இந்த இயற்கையோடு இயைந்து இனி அந்த அன்பை வெளியில் பரவச் செய்யட்டும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்