சங்கப் புலவர்கள் பொன்னுரை – 9
******
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பா லான “
(தொல்காப்பியம், பொருளதிகாரம், பொருளியல், நூற்பா 15)
“செறிவு என்பது அடக்கம்; நிறைவு என்பது அமைதி; செம்மை என்பது மனங்கோடாமை; செப்பு என்பது சொல்லுதல்; அறிவு என்பது நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் துணிதல்; அருமை என்பது உள்ளக் கருத்து அறிதலருமை” என்று இளம்பூரணர் உரை வகுத்துள்ளார்.
செப்பும் என்பதற்குக் கூறத் தகுவன கூறலும் என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி).
இவற்றையே நாம் கட்டுப்பாடு, மன ஒருமை, நேர்மை, வெளிப்படையாகப் பேசுதல், நன்மை தீமை அறியும் திறன், உள்ளக் கருத்தறிதல் என விளக்கலாம்.
இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களைத் தமிழர்கள் போற்றி இருந்தனர் என்றும் அடிமையாக அல்லது தரக்குறைவாக நடத்துவது பின்னர் ஏற்பட்ட பிற்போக்கு என்றும் சொல்லலாம்.
ஆனால், தொல்காப்பியத்தை நன்கு படிக்காமல் தொல்காப்பியர் பெண்களை இழிவாகச் சொல்லியிருபபதாகச் சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
‘நிறை’யானது பெண்களுக்கு அடிப்படையான ஒன்றெனத் திருவள்ளுவர்.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. (திருக்குறள், ௫௰௭ – 57)
என்னும் திருக்குறள் மூலம் கூறுகிறார்.
மனம் ஒருபக்கம் சாயாமல் நிற்கச் சொற்கோணல் இன்றி நேர்மையாகப் பேசுவது நடுநிலைமையாகும் என,
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். (குறள், ௱௰௯ – 119)
என்னும் திருக்கறளுக்கு அறிஞர் இரா சாரங்கபாணி விளக்கம் அளித்துள்ளார்.
இவைபோல் செறிவு, செம்மை, அறிவு, அருமை முதலிய பண்புகள் குறித்தும் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
பெண்களைச் சிறப்பிக்கும் தொல்காப்பியப் பொன்னுரைகளை ஏற்று நாம் பெண்களைப் போற்றி வாழ்வோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்.