மு.நடேஷ் நினைவுகள்: பேரா. அ.ராமசாமி நெகிழ்ச்சிப் பதிவு!

இனி அவர் நினைவுகளாக இருக்கப்போகிறார். அவரைக் குறித்த நினைவுகள் பலவிதமானவை. மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி.

1987 இல் மதுரை குப்தா அரங்கில் ‘நிஜநாடக இயக்கம்’ நடத்திய மூன்று நாள் நாடகவிழாவில் பங்கெடுத்த கூத்துப்பட்டறை நாடகத்தின் பின்னரங்கச் செயல்பாட்டாளர்களில் ஒருவராக அவரும் வந்திருந்தார்.

அவரை ந.முத்துசாமியின் மகன் என்று அறிமுகம் செய்து வைத்தவர் ப்ரசன்னா ராமசுவாமி. நாடக விழாவின் பொறுப்பாளராக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவன் என்ற நிலையில் அவரையும் வரவேற்றுக் கையளித்தேன். பெரிதான உரையாடல் எதுவும் நடக்கவில்லை.

அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம்.

நினைவில் இருந்த கூத்துப்பட்டறை முகவரிக்குள் நுழைந்தபோது அங்கே ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யும் அமைப்புகளும் வண்ணக் குப்பிகளும் சிதறலாகக் கிடந்தன. சுவர்களில் அச்சடிக்கப்பட்ட கோட்டோவியங்கள் காய்ந்து கொண்டிருந்தன.

ஓவியங்கள் எல்லாம் நடேஷின் ஓவியங்கள் என்று சொன்னவர் சி. அண்ணாமலை.

அன்று மாலை அவரோடு தீவுத்திடல் சிற்றரங்கில் கூத்துப்பட்டறை நாடகம் ஒன்றை பார்க்கப் போனது உரையாடல் வாய்த்தது.

அப்போது நான் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளியின் விரிவுரையாளர்.

நாடகத்திற்கு முன்னால் தொடங்கிய உரையாடல், நாடகம் முடிந்த பின்னும் நீடித்தது. ஒரு கட்டத்தில் எனது நிலைபாட்டோடு முரண்பட்டு, எல்லாவற்றிலும் அரசியல் குறியீடுகளைத் தேடும் உங்கள் பார்வை கலைக்கு எதிரானது எனச் சொல்லிவிட்டார்.

அதன் பிறகு அவரோடு விவாதங்கள் குறைந்துவிட்டன. அதற்கு முன்பே ந.முத்துசாமியின் ‘கடவுள்’ என்ற நாடகத்தைக் கூத்துப்பட்டறைக்காக சங்கீத நாடக அகாதெமியின் இளம் இயக்குநர் திட்டத்தில் இயக்கியிருந்தார்.

ஆனால், அந்த நாடகம் திரும்பவும் தமிழ்நாட்டில் மேடையேற்றப்படவில்லை. அதுதான் பின்னர் நற்றுணையப்பன் என்ற பெயரிடப்பட்ட நாடகம் என்று நினைக்கிறேன்.

கூத்துப்பட்டறையின் நாடகங்களுக்கு ஒளியமைப்புச் செய்பவராக அவரைப் பல தடவை சென்னையிலும் புதுச்சேரியிலும் சந்தித்துள்ளேன்.

புதுவை கம்பன் கலையரங்கில் மேடையேற்றப்பட்ட ‘இங்கிலாந்து’ என்ற நாடக மேடையேற்றத்தில் அவரது ஒளியமைப்பு கவனிக்கத்தக்கதாகவும் எழுத்து மொழிக்குக் கூடுதல் அர்த்தங்களை உருவாக்குவதாகவும் இருந்தது.

அவரது ஒளியமைப்பில் முருகபூபதியின் ‘செம்மூதாய்’ பார்வையாளர்களுக்குப் பேரனுபவத்தைத் தந்த ஒன்று.

அதனைக் குறித்த எனது காலச்சுவடு கட்டுரையில் :

“இந்நிகழ்வைப் பார்த்த பார்வையாளர்கள் அந்த தேரிக்காட்டின் பின்புலத்தில் வீசியெறிந்த ஒளி வெள்ளத்தில் அசைந்து வந்த முகம் தெரியா நடிகர்களின் – கதாபாத்திரங்களின் – நகர்வுகளை ரசித்துப் பார்த்தார்கள்.

செக்கச் சிவந்த தேரிக்காட்டு மணல் மீது நீலம் பாரித்த ஒளிவௌ¢ளம் படுவதற்கு முன்பு வானம் நோக்கி விசிறியடித்த மஞ்சள் ஒளி நடிகர்களின் உடல் மொழிக்குப் பலவிதப் பரிமாணங்களை உருவாக்குவதற்கு உதவியது.

அந்தப் பரிமாணங்களே பார்வையாளனின் இருப்பைத் தக்க வைத்தது என்பதோடு, அவ்வப்போது அவர்களுக்கு ஆச்சரிய மனோபாவத்தையும் உண்டாக்கியது என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று.

அதற்குக் காரணமாக இருந்தது மு.நடேஷின் ஒளியமைப்பு. பாராட்டப்பட வேண்டிய ஒன்று”. என எழுதினேன்.

அப்போது நான் திருநெல்வேலியிலிருந்து கிழக்குக் கடற்கரையோரத்தில் தேரிக்காட்டிற்கு நாடகம் பார்க்கப் போனேன். கைகளைப் பற்றிப் பாராட்டிப் பேசினேன்.

ந.முத்துசாமியின் இன்மைக்குப் பிறகு கூத்துப்பட்டறை முதன்மையாக நடிகர்களுக்கான பயிற்சிக் கூடமாகவும், அதன் ஒரு பகுதியில் பயிற்சி நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றும் அமைப்பாகவும் மாறித் தொடர்ந்து இயங்கியது.

அப்படியானதொரு தனமைக்குப் பின்னால் நடேஷின் வழிகாட்டுதல் இருப்பதாக அறிய முடிந்தது.

அங்கே ப்ரசன்னா ராமசாமி, பிரளயன் ஆகியோர் இயக்கிய நாடகங்களைப் பார்க்கப் போனபோது பார்த்துச் சிரித்துக்கொண்டதுண்டு.

அந்தக் கால கட்டத்தில் அவரது உடல் இயக்கத்தில் முன்பிருந்த தீவிரம் தடைபட்டிருந்தது. அவரது உடல்நிலையை மற்றவர்களிடம் விசாரித்தேனே தவிர அவரிடம் எதுவும் கேட்டுக்கொண்டதில்லை.

மதுரைப் பகுதியில் போடப்படும் வீதி நாடகங்களையெல்லாம் ‘நிஜநாடகம்’ என்று சொல்வதைப்போலச் சென்னையில் தரப்படும் நடிப்புப் பயிற்சிக்கூடங்கள் எல்லாம் ‘கூத்துப் பட்டறை’ என்ற பெயரோடு அறியப்படுகின்றன.

இவ்விரண்டும் நாடகக் குழுக்கள் என்ற அடையாளத்தைத் தாண்டிய அடையாளமாக மாறியிருக்கின்றன. அப்படி மாற்றித் தொடர்ச்சியை உருவாக்கியர்களில் ஒருவராக மு.நடேஷும் இருந்துள்ளார்.

ந.முத்துசாமியின் நாடகப்பிரதிகளைத் தாண்டி அவரது மீசையும் பெருங்குரலும் நினைவில் இருப்பவை.

ந.முத்துசாமி

மாநில எல்லையைத் தாண்டி நடந்த தென்னிந்திய நாடக விழாக்களிலும் டெல்லியில் நடந்த தேசிய நாடக விழாவில் அடர்த்தியான தனது மீசையைத் தடவியபடி ந.முத்துசாமி தயங்காமல் தமிழில் பேசுவார்.

அமைப்பாளர்கள் உடனடியாக ஒரு மொழி பெயர்ப்பாளரைத் தேடுவார்கள்.

தாய்மொழியில் பேசுவதைத் தயக்கமில்லாமல் செய்யும் அவரது நம்பிக்கையான குரல் கணீரென்று ஒலிக்கும்.

அவரைப் போலவே பெரிய தொங்கு மீசையோடும் பெருங்குரலோடும் நடேஷ் பேசிய பேச்சுகள் காதில் ரீங்காரமிடக் கூடியவை. சென்னையில் இருந்தால் அவரது உடலைக் கடைசியாகப் போய்ப் பார்த்துவர வாய்ப்புண்டு.

தூரத்தில் இருப்பதால் அவற்றைத் தூரமாகவும் விலகலோடும் நினைத்துக் கொள்ளவே முடிகின்றது. இந்த நினைவுக் குறிப்பினால் தந்தையையும் தனயனையும் ஒருசேர நினைத்துக்கொள்ளும் நாளாயிற்று இன்று.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment