‘பாட்னர்’ – லாஜிக் இல்லாத காமெடி படம்!

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’.

ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குநர் சற்குணம், “இந்தக் கதை எனக்கு ஏற்கனவே தெரியும். இதில் என்ன பிளஸ் என்றால்.. ஒரு மாறுபட்ட கதைகளத்திலிருந்து ஒரு கதையை சொல்லி, இயக்குநர் அறிமுகம் ஆகும்போது  அந்தப் படைப்பை ரசிகர்கள் கொண்டாட தயங்கியதில்லை. அவர்களை ரசிகர்களும், ஊடகங்களும் வரவேற்பு அளிக்கிறது.

அந்த வகையில் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட களம். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மனோஜுக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய இடத்தை வழங்கி, அங்கீகரிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் ஆதி பேசும்போது, “பாட்னர் படத்தின் கதையை இயக்குநர் மனோஜ் எனக்கு முதலில் போனில் தான் சொன்னார்.‌

‘ஐந்து நிமிடத்தில் படத்தின் ஒன்லைனை சொல்லிவிடுகிறேன். பிடித்திருந்தால் கதையாக விவரிக்கிறேன்’ என்றார்.

‘பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.. ரூம் மேட்ஸ்… மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக் கொள்வார்கள். குட் நைட். சொல்லி தூங்குகிறார்கள்.

மறுநாள் காலையில் பார்த்தால் பெஸ்ட் பிரண்ட்… அழகான ஃபிகராக மாறிவிடுகிறார்.’ இதை கேட்டதும் சுவாரசியமாக இருக்கிறது என சொல்லி முழு கதையும் கேட்டேன்.

ஆனால் பிரண்டு ஃபிகராக மாறுவது எப்படி? பின் விளைவு என்ன? என்பது குறித்தும் விளக்கமளித்தார்.

ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து சுற்றுலா செல்வது போல் ஜாலியாக இருக்க வேண்டும் என சொன்னதும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிக்கத் தொடங்கிவிட்டேன்.

சக கலைஞர்களுடன் ரசிகர்களை எப்படி சிரிக்கவைக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்து நடித்தோம். ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்கிறோம்” என்றார்.

“இந்தப் படத்தில் நீங்கள் வித்தியாசமான ஹன்சிகாவை காணலாம்.” என்றார் நடிகை ஹன்சிகா

இயக்குநர் மனோஜ் தாமோதரன், “எனக்கு தொழிலை கற்றுக் கொடுத்த குருக்களான இயக்குநர்கள் தங்கம் சரவணன், சற்குணம், தாஸ் ராமசாமி ஆகியோர்களுக்கு நன்றி.

முதலில் ஹைதராபாத்திற்கு சென்று ஆதியிடமும், பிறகு மும்பைக்குச் சென்று ஹன்சிகாவிடமும் கதையை சொல்லி சம்மதம் வாங்கினேன்.

அதன் பிறகு யோகிபாபுவிடமும் சொன்னேன். பிறகு பாண்டியராஜன், முனீஸ்காந்த், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், பாலக் லால்வானி என அனைவரிடமும் சொன்னேன். இது ஒரு காமெடி படம். லாஜிக் இல்லாமல் சிரிக்க வைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

Comments (0)
Add Comment