பன்முகக் கலைஞன் கிருஷ்ணராஜா!

ஓய்வறியா ஓவியர் கே.கிருஷ்ணராஜா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியும் லண்டன் மலையக இலக்கிய மாநாட்டை வெற்றிகரமாக செயற்படுத்தியமைக்கு பாராட்டுத் தெரிவித்தும் இலங்கையிலிருந்து பதிப்பாளர் எச்.எச்.விக்ரமசிங்க அவர்கள் மலையைக இலக்கிய மாநாட்டின் சார்பில் கே.கிருஷ்ணராஜாவிற்கு விருது வழங்கி கெளரவித்தார்.

ஷோபாசக்தியின் நூல் வெளியீட்டின்போது நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓவியர் ராஜாவின் ஓய்வறியா உழைப்பினைப் பாராட்டி விமர்சகர் மு.நித்தியானந்தன் உரையாற்றினார்.

இப்படி பல்வேறு பெருமைக்குரிய ஓவியர் கே.கே.ராஜாவைப் பற்றி ப.ஸ்ரீஸ்கந்தன் எழுதிய ‘பன்முகக் கலைஞன் கிருஷ்ணராஜா!’ என்ற தலைப்பிலான கட்டுரையை வாசித்து ரசிப்போம்.

***

1994இல் ரொறன்டோவில் நடைபெற்ற லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் நாடக விழாவில் இடம்பெற்ற ‘மன்னிக்கவும்!’ நாடகத்தை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

ஒரு பகட்டான தம்பதியினர் தமது நண்பர் ஒருவரை விருந்துக்கு அழைத்து அவரது வாழ்வைக் கிண்டல் செய்யும் நாடகம் அது.

ஒரே இடத்தில் இருந்தவாறும் பெரிதாக எந்த வசனமும் பேசாதும் தவிப்பு, வெறுப்பு, கோபம், ஆற்றாமை போன்ற பலவித குணாதிசயங்களை வெளிக்காட்டி பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்தை அள்ளிச் சென்றார் அந்த நண்பராக நடித்தவர். அந்த நடிப்புக்குச் சொந்தக்காரர்தான் ராஜா.

ராஜா, கே.கே. ராஜா என்று கலை இலக்கியப் பரப்பில் அறியப்பட்ட கனகசபை கிருஷ்ணராஜா, ஓவியம், நாடகம், புகைப்படம், நூல் வடிவமைப்பு போன்ற பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்.

உயர்ந்த தோற்றம், எப்போதும் முகத்தில் தவழும் புன்சிரிப்பு, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் சுருள் சுருளான தலைமுடி, கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும் இனிமையான பேச்சு, இவர் தான் ராஜா.

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜா தன் ஆரம்ப கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பட்டப்படிப்பை களனி வித்தியாலங்கார பல்கலைக் கழகத்திலும் மேற்கொண்டார்.

அங்கு சிங்கள மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த ஓவியமும் சிற்பமும் என்ற சிங்கள மொழி மூலமான கற்கை நெறியைப் பயின்ற முதல் மூன்று தமிழர்களில் ராஜாவும் ஒருவர். க. பவானி, சு. சிவகுமார் ஆகியோரே இவருடன் பயின்ற மற்றைய இருவருமாவர்.

ஓவியமும் சிற்பமும் ராஜாவுக்குக் கைவரப் பெற்ற கலையாக இருந்த போதும் அந்த ஆற்றலை இள வயதிலேயே இனம் கண்டு ஊக்கப்படுத்தியவர் ஹாட்லிக் கல்லூரியின் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்த மாற்கு மாஸ்டர் அவர்களே.

ஈழத் தமிழர்களிடையே நவீன ஓவியக்கலையின் முன்னோடியாகத் திகழ்ந்த ஓவியக் கலைஞரான அ. மாற்குவிடம் தனது நான்காம் வகுப்பிலிருந்தே ஓவியத்தைப் பயிலும் பாக்கியத்தை ராஜா பெற்றிருந்தார்.

பின்னாளில் மாற்கு மாஸ்டரின் முக்கிய மாணவர்களில் ஒருவராக இவர் அறியப்பட்டார்.

“ஓவியம் என்பது படிப்பு அல்ல அது ஒரு உணர்வு. மாற்கு மாஸ்டரிடம் நவீன ஓவியங்கள் பற்றிய கருத்துருவை உணர்ந்து கொண்டேன். மாற்கு மாஸ்டர் ஒரு மகான். அவர் ரசிப்பதை நானும் ரசிக்க ஆரம்பித்தேன்.

அவர் ஒவியம் வரைவதைப் பார்த்து பிரமித்துப்போ வேன். படைப்புலகில் அவரும் ஒரு பிரம்மா தான். பின்நாளில் அவர் என்னுடைய ஆசிரியரென்றில்லாமல் நல்லதொரு நண்பரானார்.

நான் அவருடன் இணைந்து வேலை செய்யும் காலப்பகுதியிலேயே ஓவியப் பரப்பில் எனக் கான வெளியை உணர்த்திச் சென்றவர் அவர்.” என்று மாற்கு மாஸ்டரின் ஆத்மார்த்த நினைவுகளில் அடிக்கடி மூழ்கிப் போவார் ராஜா.

யாழ் பல்கலைக் கழகத்தினருக்காக மௌனகுருவின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட மஹாகவியின் ‘புதியதொரு வீடு’ நாடகத்தின் மேடை அமைப்பு, ஒப்பனை போன்றவற்றின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

1979இல் அவைக்காற்று கலைக் கழகத்திற்காக பேராசிரியர் சி. மௌனகுரு நெறிப்படுத்திய ‘அதிமானிடன்’ நாடகத் தின் பின்னணியிலும் ராஜாவின் கைவண்ணம் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், பேராதனையிலும் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம் மேடையேற்றிய மழை, ஒரு பாலை வீடு, யுகதர்மம் போன்ற நாடகங்களுக்கு மேடையின் பின்னணியில் ராஜாவின் பங்களிப்பு பளிச்சிட்டு நின்றது.

அவர்களது கனடா நாடக விழாவின்போது கையில் கிடைக்கின்ற பொருட்களை வைத்துக்கொண்டு மேடைக்கு வேண்டிய உபகரணங்களை அவர் அழகாகச் செய்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

கலைஞர் வட்டத்தின் நாடகங்களுக்குப் பின்னர் 1979இல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் மேடையேற்றிய அயனஸ்கோவின் ‘இடைவெளி’ என்ற நவீன நாடகத்தில் நடித்ததன் மூலம் நடிப்பில் இவர் புதிய பரிமாணத்தைத் தொட்டார். இந்நாடகத்தில் நிர்மலா, ஜெரால்ட் ஆகியோரும் நடித்திருந்தனர்.

1988இல் இலண்டனுக்குக்குப் புலம்பெயர்ந்த பின்னர், இலண்டன் தமிழ் அவைக் காற்றுக் கலைக்கழகத்தினர் மேடையேற்றிய யுகதர்மம், சம்பந்தம், பாரத தர்மம், ஐயா எலெக்சன் கேட்கிறார், பலி, இரு துயரங்கள், பார்வைக் கோளாறு (தனி நபர் நடிப்பு), மழை, மன்னிக்கவும், முகமில்லாத மனிதர்கள், பெயர்வு, எரிகின்ற எங்கள் தேசம், இடைவெளி, தரிசனம், காத்திருப்பு ஆகிய நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.

-தொகுப்பு: எச்.எச்.விக்கிரமசிங்க, கொழும்பு

Comments (0)
Add Comment