1925-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார் ஐயா ஆர்.நல்லகண்ணு.
பள்ளி மாணவனாக விளங்கியபோதே ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற தேசியத் தலைவர்கள் பேசிய பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் உரைகளைக் கேட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தானும் ஒரு உணர்வாளராக உருவெடுத்தார்.
பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடுத்த கம்யூனிஸ நூல்களைப் படித்து அச்சிந்தனைக்கு ஆட்பட்டார்.
திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்து முடித்து பட்ட வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பொதுவாழ்வில் மூழ்கி படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார்.
1945-ல் மதுரையில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் ஜீவா ஆற்றிய உரை கேட்டு ஊக்கம் பெற்றார். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.
ஆதிக்கங்களுக்கு எதிராகவும், ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகவும் இளம்வயதிலேயே போராட்டக்களம் இறங்கினார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் கட்சித் தடை செய்யப்பட்டதால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்.
1949-ல் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பல துன்ப துயரங்களுக்கு ஆளானார்.
இளைஞர் நல்லகண்ணுவின் அடர்த்தியான மீசை மீது சிகரெட்டின் நெருப்புக்கங்கை வைத்து கொடுமைப்படுத்தினான் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ஏழாண்டுகள் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார்.
1958-ல் அவரது கட்சித் தோழரின் மகளாகிய ரஞ்சிதம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.
நீண்ட காலம் விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக விளங்கிய ஐயா நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக ஒன்பது ஆண்டுகள் செயலாற்றினார்.
தியாகம், அர்ப்பணிப்பு, எளிமை, நேர்மை, ஆகிய நற்பண்புகளின் இலக்கணமாகத் திகழும் அரசியல் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் எம்மைப் போன்றவர்களுக்கு பெருமகிழ்வைத் தந்தது.
பொதுவாழ்வின் குறியீடாக விளங்கிய நூற்றாண்டு நாயகர் ஐயா நல்லகண்ணு, தான் மறைந்த பின்பு தன் உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு தானமாக வழங்கியதன் மூலம் உயிரையும், உடலையும் உழைக்கும் வர்க்கத்திற்கே ஈந்த மாமனிதர் ஆகிறார்.
அவர் மறைவு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாதது. அவரை வணங்குவோம்.
– நன்றி: இன்று தமிழ்