தமிழ் – சிங்கள உறவுக்குப் பாலமாகும் ‘கோடிச்சேலை’! 

விருது பெற்ற எழுத்தாளரும் பாடலாசிரியருமான மாத்தளை மலரன்பனின் ‘கோடிச்சேலை’ சிறுகதைத் தொகுப்பை காலி பொத்தல பிரதேசத்தை சேர்ந்த சரத்குமார கமஎதிகே என்பவர் ‘மினீசலுவ’ எனும் பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

இது வரையறுக்கப்பட்ட எஸ். கொடகே பிரதர்ஸின் வெளியீடாகும். புத்தக வெளியீட்டு விழா அண்மையில் காலியில் உள்ள களுவெல்ல சர்வதேச பௌத்த மைய கேட்போர் கூடத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

‘கோடிச்சேலை’ புத்தகத்தின் ஆசிரியரான மாத்தளை மலரன்பன், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், இலக்கிய விமர்சகருமான திரு. பி. முத்துலிங்கம்,

பத்திரிகைத் துறையில் அரசியல் மற்றும் இலக்கிய விமர்சகர் திரு. எச்.எச். விக்கிரமசிங்க, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். சிவஞானம் மற்றும்

மலையக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்புரையாற்றிய டாக்டர் காமினி குமார விதான, கலாநிதி மகேஷ் கிருஷாந்தா மற்றும் பி. முத்துலிங்கம் ஆகியோர் அர்த்தமுள்ள சொற்பொழிவுகளை ஆற்றினர்.

சபையின் பிரதம விருந்தினராக மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கலந்து கொண்டார்

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, காலி மேயர் சுனில் கமகே, காலி மாவட்ட மகளிர் பொது ஒருங்கிணைப்பாளர் அனுஷா சருக்கலி, காலி கடவத்சதரவின் பிரதேச செயலாளர் திருமதி பியுமலி லியனகே,

அரச நிர்வாகத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. எச்.பி.ஜி. பிரகீத் ரசிக குமார,

காலி கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கலானி சதுரிகா, ஒலுகா பரணவிதான,

ஷிரோமி விக்ரமசிங்க, நெவில் குணதிலக, சிறிதர்ய சிறிசேன (ஓய்வு), எம். மாலா மங்களிகா (ஓய்வு), கோலிதா பொத்துப்பிட்டிய (ஓய்வு),

ஆசிரியர் ஆலோசகர்கள், திருமதி ரந்திகா சஞ்சீவனி – தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரி – பிரதேச காரியாலயம் காலி, ஹசந்தி கமகே – தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரி – பிரதேச காரியாலயம் கோனபீனுவல,

திருமதி லக்மினி கிருஷாந்தி – தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரி – பிரதேச காரியாலயம் பத்தேகம, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி,

மௌலவி முகமது அஜ்மல் (அதிபர் முஸ்லிம் மகளிர் கல்லூரி -காலி), காலி பிராந்தியத்தில் உள்ள பல பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்வில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை தொடர்பான பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திரு. என்.கே. ஜெயதிஸ்ஸ பாடல்களைப் பாடுவதில் பங்கேற்றார்.

அதே நேரத்தில் நடன ஆசிரியர் திருமதி தீபிகா அபேரத்னவின் மகள் பத்தேகம கல்விப் பிரிவைச் சேர்ந்த நடன ஆசிரியர்கள் மற்றும் மாத்தறை புனித சேர்வெஸ் கல்லூரியின் மாணவியும்

தெரண மற்றும் சிரச நடன சூப்பர் ஸ்டார் பினார நெத்சார ஆகியோர் பொருத்தமான நடனங்களுடன் சபையை உயிர்ப்பித்தனர்.

எழுபதுகள், எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் சுமார் முப்பது ஆண்டுகால காலப்பகுதியில் மலரன்பன் எழுதிய “கோடிச்சேலை” (மினீசலுவ) சிறுகதைத் தொகுப்பின் உள்ளடக்கம், தோட்டங்களில் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களின் துயரத்தையும்,

அந்தக் காலகட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே எரிந்து தீப்பிழம்புகளையும், ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களாக, இனப் பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் அவர்கள் எவ்வாறு அதனை அணைத்தார்கள் என்பதையும் வெளிப்படுத்தும் ஒரு கருப்பொருளாகும்.

எவ்வளவு தேவை இருந்தபோதிலும், இந்த இலக்கியத் தொடர்பு சமூகத்தில் குறைவாகவே உள்ளது. இந்தப் புத்தகம் அந்தக் குறைபாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.

ரஷ்யாவிற்கு ‘மார்க்சிம் கார்க்கி’ போன்று மலையகத்துக்கு மலரன்பன் என்று சிரேஷ்ட எழுத்தாளர் தெனகம சிறிவர்தன குறிப்பிடுகிறார்.

‘ஆறுமுகம் மலரன்பன் மாவத்தை’ என்று அவர் வாழும் போதே வீதிக்கு பெயர் சூட்டி பெரும் கௌரவம் பெற்ற மாத்தளை மலரன்பன் எழுதிய ‘கோடிச்சேலை’ என்ற

சிறுகதைத் தொகுப்பை தமிழ் மொழியில் புலமை மிக்க காலியைச் சேர்ந்த சரத்குமார ‘மினி சலுவ’ என்ற பெயரில் மொழிபெயர்த்து இருக்கின்றார்.

கொழும்பில் தமிழ்ச் சங்க புத்தக வெளியீட்டு விழா என்றால் 40 பேரைக் கூட தாண்டாத இன்றைய சூழலில் காலியில் நடைபெற்ற விழாவில் 200க்கும் மேற்பட்ட சிங்கள எழுத்தாளர்கள் அறிஞர்கள் அரசாங்க அதிகாரிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தது ஒரு மகிழ்வு தரும் செய்தியாகும்.

கலை ஒளி முத்தையா பிள்ளை அற்றக்கட்டளை 2023ம் ஆண்டு வெளியிட்ட கொலுஷா என்கிற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதிக்கு சிறந்த நூலுக்கான இலங்கை சாகித்ய மண்டல விருது பெற்றதோடு,

தமிழ்நாட்டில் சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் ஒரு லட்சம் பரிசு வழங்கி கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது.

_ மரதன் எஸ்.கிருஷ்ணன்

 

 

Comments (0)
Add Comment