எண்பதுகளை நினைவுகூரும் திரைப்பாடல்களும் படங்களும்
கண்ணதாசனும், வாலியும்!
எண்பதுகளில் பாடல்கள் எழுதுவதில் உச்சத்தில் இருந்தார்கள் கவிஞர் கண்ணதாசனும், வாலியும்.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் “தானத் தன்னா…’’ என்று மெட்டிசைக்க வைத்த கண்ணதாசன் ‘மூன்றாம் பிறை’ படத்திற்காக எழுதிக் கொடுத்த கடைசிப் பாடல் “கண்ணே கலைமானே’’.
“பழமுதிர்ச்சோலை’’ என்று ‘வருஷம் 16’ படத்திலும், “உன்னை நினைச்சேன்” என்று ரசிப்பவர்களின் தீனிக்கு விருந்திட்ட வாலிக்கு சிறந்த பாடலாசிரியர் என்ற மாநில அரசின் விருதுகள் கிடைத்தது இந்தக் காலகட்டத்தில் தான்.
இசைஞானியின் பின்னணி இசைத்தடங்கள்
நம் பண்ணைப்புரத்து மண்ணில் பிறந்த மகத்தான இசை வித்தகரான இளையராஜா தமிழிலும், தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் திரையிசையில் செய்த மாயஜாலங்கள் காலத்தின் அற்புதம்.
திரையில் கதைக்குக் கூடுதல் உயிரைத் தந்தது அவரது பின்னணி இசை.
புதிய வார்ப்புகளில் – தொடக்க இசை அவரால் கவிதைமயமானது. புன்னகை மன்னனில் துள்ளலாகத் தந்த தீம் மியூசிக் – நவீன இசையுடன் வழங்கிய பூங்கொத்து.
சிந்துபைரவி, ராஜபார்வை, ஜானி என்று இசைமொழியில் அவர் தொட்டிருக்கிற உச்சத்தை மறக்க முடியுமா?
கிராமிய இசையிலும், சிம்பொனி இசையிலும் சிகரம் தொட்ட அவருடைய விரலிசை வித்தையை மறக்க முடியுமா!
நிழல்கள் தந்த வைரம்
1981, 1988 இரண்டு ஆண்டுகளிலுமே சிறந்த பாடலாசிரியர் விருதுகளை வாங்கிய புலமைப்பித்தனுக்கு அடுத்து மெல்லிய இறகைப் போல ‘நிழல்கள்’ மூலம் நுழைந்த கவிதைக் காலடிக்குச் சொந்தக்காரர் பின்னாளில் கவிப்பேரரசாக அடையாளம் காணப்பட்டவரான வைரமுத்து.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக மாநில அரசின் விருதையும், ‘முதல் மரியாதை’ படத்திற்காக தேசிய விருதையும் பெற்ற மகத்தான கவிஞர்.
மோகனமான ஆண்டுகள்
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையோடு பொருந்திய முகமாகப் பலருடைய ஞாபகங்களில் மைக்கோடு தோற்றம் அளிப்பவர் பல வெள்ளிவிழாப் படங்களுக்குச் சொந்தக்காரரான நடிகர் மோகன்.
ஆர்.சுந்தரராஜனின் இயக்கத்தில் வெளியான ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் துவங்கிய பயணம், அடுத்து உதயகீதம்,
இதயக் கோவில், நான் பாடும் பாடல், மௌனராகம் என்று பல படங்களில் மெல்லிசையின் மென்மையான முகமாகத் திகழ்ந்த மோகன் எண்பதுகளில் மிக முக்கியமான திரை நட்சத்திரம்.
எண்பதுகளை நினைவுகூரும்போது நடிகர் மோகனையும் நினைவு கூர்வோம்.
மலேசியாவிலிருந்து வந்த பூங்காற்று
மலேசியாவிலிருந்து சென்னைக்கு நடிக்கும் ஆசையில் வந்த கலைஞர் வாசுதேவன். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் முதலில் பாடிய இவருடைய இரண்டாவது ஓட்டத்தைத் துவக்கி வைத்தவர் இசைஞானி இளையராஜா.
‘பதினாறு வயதினிலே’ துவங்கி அடுத்தடுத்து என்னவொரு அபாரமான முன்னேற்றம்! ‘கிழக்கே போகும் ரயி’லில் “கோயில் மணி ஓசையைக்’’ கேட்க வைத்தார்.
‘புதிய வார்ப்பு’களில் “வான்மேகங்க”ளை அழைத்தார். சகலகலா வல்லவனில் “கட்டை வண்டி”யைக் குரலால் இழுத்து வந்தார். ‘முரட்டுக்காளை’யில் “பொதுவாக என் மனசு தங்கம்’’ என்று மெருகேற்றினார்.
எண்பதுகளில் திரையிசையில் ஓங்கி ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர், சொந்த நாட்டைத் தன் பெயரிலேயே சுமந்தவரான மலேசியா வாசுதேவன்.
நூற்றுக் கணக்கான படங்களில் பாடி, 85 படங்களில் நடித்த வாசுதேவனின் குரலில் வெளிவந்த அருமையான அந்தப் “பூங்காற்று திரும்புமா?’’
– மணாவின் குறிப்புகளில் இருந்து…!