‘அன்பே வா’ படத்தின் கிளைமாக்ஸுக்கான சண்டைக் காட்சி படமாக்கும் வேலை தொடங்கியது. வில்லன் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட பயில்வான். அவரிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டை போட்டு ஜெயிப்பதுதான் கிளைமாக்ஸின் உச்சகட்டம்.
‘‘பொதுவாக வில்லனை கீழே போட்டு மிதிப்பதைத்தான் படங்களில் பார்த்திருப்போம். இந்தக் காட்சியில் நீங்க, அந்த பயில்வானைத் தலைக்கு மேல் தூக்கி, கொஞ்ச நேரம் வெச்சிருந்து கீழே போட்டு மிதிக்க வேண்டும். அப்படி செய்தால் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும்…’’ என்று இயக்குநர் திருலோகசந்தர் விளக்கினார்.
டேக்கில் எம்.ஜி.ஆர் அந்த பயில்வானைத் தலைக்கு மேல் தூக்கி கொஞ்ச நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கீழே போட்டு அமுக்கினார். அந்தக் காட்சி படத்தின் ஹைலைட் காட்சிகளில் ஒன்றாக அமைந்தது. எம்.ஜி.ஆர் தினமும் உடற்பயிற்சி செய்பவர். கர்லாக் கட்டையை அவ்வளவு லாவகமாக சுழற்றுவார்.
‘அன்பே வா’ 100 நாட்கள் ஓடியது. ‘கேஸினோ’ திரையரங்கில் 100-வது நாள் விழா நடந்தது.
கதை கேட்டபோது எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘இது என்னோட படம் இல்லை; இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் படம்’’ என்று சொல்லியிருந்தார். அதையே 100-வது நாள் விழாவிலும் சொல்லி, ‘‘இது திருலோகசந்தரின் வெற்றி. ஏ.வி.எம்மின் வெற்றி…’’ என்று பாராட்டினார்.
ஏ.வி.எம் நிறுவனத்தில் இருந்து 160-க்கும் மேலான படங்கள் வந்திருந்தாலும், அவர்களின் சரித்திரத்தில் முக்கியமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றியதைப் பெருமையாக நினைக்கிறேன்.
– எஸ்.பி.முத்துராமன்
நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்
குறிப்பு : அன்பே வா படப்பிடிப்பின்போது ஏவிஎம் ஸ்டுடியோக்கு வருகை தந்த நேபாள மன்னர் குடும்பத்தினருடன், இயக்குனர் திருலோகசந்தர், ஏ.வி.எம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி மற்றும் பலர்