அறிஞர் அண்ணாவைப் பற்றி அவரது அம்மா பங்காரு அம்மையார் மற்றும் சகோதரியும் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்.
கேள்வி: அண்ணா அரசியலில் ஈடுபட்டது குறித்து.?
பதில்: “நீ படிச்சிட்டு வேலைக்கு போவேன்னு நெனைச்சேண்டா. இப்படிப் போயிட்டயே என்று சொல்வோம். அதற்கு “எனக்கு பிடிச்சிருக்கு நான் போறேன்” என்று பதில் சொல்வார்.
கே: அண்ணா சின்னபிள்ளையிலே எப்படி இருப்பார்?
ப: சின்ன வயசிலே பள்ளிக்கூடத்திற்கு போகும்போது சடை போட்டு, வாத்தியார் திருஞானசம்பந்தம் சொன்னதாலே நாமம் போட்டுக் கொண்டு போகும். சில நாள்லே முஸ்லிம் போல தொப்பி போட்டு அனுப்பவோம். அஞ்சு ஆறு வயசிலே பெண் குழந்தை போல வேஷம் போட்டு அனுப்பவோம்.
கே: படிப்பு?
ப: ராத்திரி 2 மணி வரைக்கும் படிக்கும். போயி படுத்துக்கோ என்று தொத்தா சொன்னா போய் படுத்துக்கும்.
கே: படிச்சு முடிச்சபிறகு அண்ணா எப்படி வரணுமின்னு நினைச்சீங்க?
ப: அவுங்க தொத்தா தான் மாஜிஸ்திரேட், இல்லாட்டி கலெக்டரா வருணுமின்னு சொல்வாங்க. ஆனா, காலேஜ் முடிச்ச உடனே பாலசுப்ரமணியம் வந்து வேலை வேண்டாம் அவரு நாட்டையே காப்பாத்தர தலைவர் ஆவருன்னு சொல்லி, தொத்தாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டாரு. ஆனா இவரு ஈரோட்டு பெரியார் கிட்ட போயிட்டாரு. ஆனா நாங்க பாத்த பொண்ணையே கட்டிக்கிட்டாரு.
கே: சின்னப்புள்ளையிலே வேறு எப்படி இருப்பார்?
ப: கோபம் வந்திச்சின்னா ஒன்னும் பேசாது. பெஞ்சுக்கு கீழே போய் படுத்துக்கும். அவ்வளவு தான் கோபம். எதையாவது படிச்சிக்கிட்டே இருக்கும். பக்கோடா, ஓமப்பொடி மடிச்ச பேப்பரைரெல்லாம் கூட படிக்கும்.
கே: அண்ணா சைவமா, அசைவமா?
ப: எங்க வீட்டிலே இருக்கறவரைக்கும் சைவம். ஆனா பெரியாரோட சேந்து அசைவம் சாப்பிட்டிருச்சு.
கே: மந்திரியானவுடன் உங்களை வந்து பார்த்தாரா?
ப: மறுநா சாயங்காலம் “உனக்கு சேதி தெரியுமாம்மா அப்படின்னு சொல்லிட்டு என் கால்லே விழுந்து கும்பிட்டிச்சு. தொத்தா 3 வருஷத்துக்கு முந்தி போயிடிச்சு அதுதான் வருத்தம் எங்களுக்கு. அது இருந்திருந்தா சந்தோஷப்பட்டிருக்கும். ஆனா மந்திரியான பிறகு தினசரி ஷேவிங் பண்ணிக்குது – என்று சொல்லிவிட்டு இருவரும் கலகலவென்று சிரிக்கிறார்கள்.
நன்றி: முகநூல் பதிவு.