தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

ஜுன் 15 – உலக தந்தையர் தினம்

’தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்குப் பரிச்சயம் என்று தெரியவில்லை.

பாடப்புத்தகத்தில் இல்லாதபோதும், அது பள்ளிகளில் எதிரொலித்த காலமொன்று உண்டு.

குடும்ப அமைப்பு குறித்து விமர்சிப்பவர்கள் கூட, ஒரு குழந்தை சிறப்பான மனிதராக உருவாவதில் தாய், தந்தையின் பங்கைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

தாயைக் கொண்டாடுகிற விதமாகவே ஓவியம், சிற்பம், கதை, கவிதை உள்ளிட்ட பெரும்பாலான படைப்புகள் இருந்திருக்கின்றன.

அவற்றைக் காணும்போதெல்லாம் ‘தந்தைமையைக் கொண்டாடுகிறோமா’ எனும் கருத்துகளும் பெருகுகின்றன.

என்ன செய்தாலும், எத்தனை வளர்ந்தாலும், எப்படிப்பட்ட மனிதராகத் திகழ்ந்தாலும், ஒரு தாய் அவர்களைக் குழந்தையாகக் கருதி அரவணைப்பார் என்றென்றும்..

அதே நேரத்தில், எல்லா காலத்திலும் கண்டிப்பும் பொறுப்பும் தொலைவில் நின்று நோக்குகிற பாங்கும் கொண்டவராகவே தந்தை விளங்குகிறார்.

தாயைப் போலத் தந்தை தனது பாசத்தைக் குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்துவதில்லை என்ற எண்ணமும் காலம்காலமாக நிலவி வருகிறது.

தந்தை குறித்த பொதுச்சித்திரமாக இது போன்ற பல வரையறைகள் இருக்கின்றன.

தந்தை என்பவர்..!
’தந்தை என்பவர் நூறு ஆசிரியர்களுக்குச் சமம்’ என்று ஆங்கிலக் கவி ஜார்ஜ் ஹெர்பர்ட் சொல்லியிருக்கிறார்.

பாலூட்டி, சீராட்டி, மொழியறிவு தந்து ஒரு குழந்தையைத் தாய் வளர்க்கிறார் என்றால், ‘இதைச் செய்யாதே’, ‘அதைச் செய்’ என்று அறிவுறுத்துகிறவராகத் தந்தை இருக்கிறார்.

இந்த உலகில் வாழ்வதற்கான ‘நடை பயில’ச் சொல்லித் தருபவராக அவரே விளங்குகிறார். அதுவே பொது இயல்பாக உள்ளது.

குழந்தைப் பருவம் தொடங்கி பதின் பருவம், வாலிபப் பருவம், திருமணப் பருவம் என்று ஒவ்வொரு தருணத்திலும் மகன், மகள்களின் வாழ்வில் துணை நிற்பவர் தந்தை. அவர்களுக்கான சரி, தவறுகளை ஏதோ ஒருவகையில் எடுத்துரைத்துக்கொண்டே இருப்பவர்.

அவர்களது நல்வாழ்வு குறித்த விருப்பங்களைப் பெரும்பாலும் ‘கடுங்குரலில்’ வெளிப்படுத்துவதே தந்தையர்களின் பழக்கம். எல்லாவற்றையும் போலவே, தந்தைமை குறித்த இச்சித்தரிப்பிலும் சில விதிவிலக்குகள் உண்டு.

தாயைப் போலவே தந்தையும் ‘நம் குழந்தைகள் நம்மைப் போலக் கஷ்டப்படக்கூடாது’ என்றெண்ணுவார்.

ஒருபடி மேலே போய், தன் தோள் மீது ஏற்றி இந்த உலகம் காட்டுவார். இந்த உவமையில் சிற்சில வித்தியாசங்கள் இருந்தாலும், எல்லா குழந்தைகளும் அந்த அனுபவத்தைப் பெற்றுத்தான் தீர வேண்டும்.

தந்தையரைக் கொண்டாடுவோம்!

திரைப்படம் முதலான கலைகளில் தந்தையரைக் கொண்டாடுவதென்பது அவ்வப்போது நிகழும்.

தமிழ் திரையுலகில் ‘தவமாய் தவமிருந்து’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்கள் அதனை நிகழ்த்தியிருக்கின்றன. அதற்கு முன்னர் அப்படிப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் கூட, இப்படங்களின் சாராம்சமே தந்தை பாசமாக இருந்தது.

இது போன்ற படைப்புகள் தந்தையரின் சிறப்புகளை முன்வைக்கும்போது, நமது தந்தையரை நாம் திரும்பிப் பார்க்க மறந்தது உறைக்கிறது. அன்னையர் தினத்தில் தாய்க்கு வாழ்த்து சொல்வது போன்று தந்தையர் தினத்தை அணுகியிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

உலகமெங்கும் ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் புனித ஜோசப்பின் பெருமையைச் சிறப்பிக்கும் வகையில், சில நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் 1900-கள் வரை அந்த வழக்கம் இல்லை.

1907-ல் அங்குள்ள வர்ஜினியா மாகாணத்தில் நடந்த மோனான்காஹ் சுரங்க விபத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அவர்களது நினைவைப் போற்றும்விதமாக ‘தந்தையர் தினம்’ அனுசரிக்க வேண்டும் என்று கிரேஸ் கோல்டன் க்ளெய்ட்டன் என்பவர் முயற்சித்தார். அதற்கடுத்த ஆண்டு அது தொடரவில்லை.

1910-ல் சொனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண்மணி, ‘அன்னையர் தினம் போலத் தந்தையரின் சிறப்பையும் ஒரு தினமாகக் கொண்டாடலாமே’ என்ற கருத்தைப் பகிர்ந்தார். அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது ஞாயிறு அன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வமற்று நிகழ்ந்த அந்தக் கொண்டாட்டம், மெல்லப் பரவலானது. அமெரிக்க அதிபர் பதவியை வகித்த லிண்டன் ஜான்சன், ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரால் உரம் பெற்றது. பிறகு, அத்தினம் தேசிய விடுமுறை ஆனது.

அமெரிக்காவைப் பின்பற்றி இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்று இது கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு ஜுன் 15-ம் தேதியன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.

தம்மோடு வாழ்கிற தந்தைகளுக்கு சிவப்பு ரோஜாவைத் தந்தும், இந்த உலகை விட்டுச் சென்றவர்களுக்கு வெள்ளை ரோஜாவைச் சமர்ப்பித்தும் இதனைக் கொண்டாடுவது மேற்கத்திய வழக்கம்.

தந்தையின் இடத்தில் நின்று ஒரு மனிதரின் வாழ்வில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியவர்களைச் சிறப்பிக்கவும் இந்நாள் உதவுகிறது.

சில நாடுகள் இதே மாதத்தில் வேறு தினங்களில் அதனைப் பின்பற்றுகின்றனர். வேறு மாதங்களில் கொண்டாடும் நாடுகளும் உண்டு.

அன்பை வெளிப்படுத்துவோம்..!

சிறு வயதில் ஒரு குழந்தைக்குத் தந்தையே முதல் நாயகனாகத் தெரிவார். வளர வளர அந்த பிம்பம் மங்கி, சுருங்கி மறைந்து போகும். பிறகு, அதே குழந்தை தந்தையாகும்போதே அந்த பிம்பம் மீண்டும் உயிர் பெறும்.

இது ஒரு சுழற்சி என்றறிந்த தந்தைகள், தங்களது குழந்தைகள் பாசத்தைத் தம் மீது கொட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதே இல்லை.

மாறாக, தந்தையராக, தாயாகத் தமது பங்களிப்பைக் குழந்தைகள் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்றே விரும்புவார்கள். அதனைக் காணும்போது உள்ளம் குளிர்வார்கள்.

கிண்டலாகச் சொன்னாலும், தாய் தன் வயிற்றில் குழந்தையை ஒன்பது மாதங்கள் சுமப்பதற்கு ஈடாக மனதில் அந்த சுமையை ஏந்தி நிற்பவர் தந்தை என்பதே உண்மை.

ஒரு குழந்தை வளர வளர, தாயின் அருகாமையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை. அதனால், தாய்மையின் சிறப்புகள் மங்குவதில்லை. இன்றைய வேக யுகத்தில் இதிலும் மாற்றம் நிகழ்ந்து வருவது தனிக்கதை.

ஆனால், தந்தையோ அக்குழந்தைகளை விட்டுக் காத தூரம் விலகி நிற்பார். வழிகாட்டுதலை கறாராகச் செய்ய அதுவே வழி என்பதாகப் பல தந்தையரின் நினைப்பு இருக்கிறது.

அதேநேரத்தில் சுட்டெரிக்கும் வெயில், அடங்காத மழை, ஆளைத் தள்ளும் புயல் என்று எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தமது குழந்தைகளுக்கு அரணாக விளங்குவதே தந்தையரின் இயல்பு. ஒவ்வொரு நாளும் தங்களது உயிரின் ஒரு துளியை அதற்காகச் செலவிட அவர்கள் தயங்கியதே இல்லை.

அப்படிப்பட்ட தந்தையரை ஒரு கணம் மனதில் நினைத்துப் போற்றுவதே அவர்களுக்கான சிறப்பாக இருக்கும். முதுமையில் தவழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைக் கட்டிப்பிடித்து பாசமழையைப் பொழியத் தேவையில்லை; தோள் பற்றித் தோழமை காட்டினால் போதும்.

‘சாப்பிட்டீங்களா, ப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்கிட்ட பேசினீங்களா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க’ என்று அடிக்கடி கேட்டால் போதும்.

அவை சம்பிரதாய வார்த்தைகள் என்று தெரிந்தும், ‘அப்படிக் கேட்பதே போதும்’ என்று ஆறுதல்பட்டுக் கொள்வார்கள் தந்தையர்கள். பிள்ளைகளின் புன்னகையைக் கண்டு திருப்தி கொள்வார்கள்.

அவர்களாக உருவாக்கிக் கொண்ட பிம்பத்தைச் சுமந்துகொண்டே, உள்ளுக்குள் அந்த கணங்களை அசைபோடுவார்கள்.

தாம் காட்டிய வழியைத் தாண்டியும் வாரிசுகள் இந்த உலகில் தொடர்ந்து பயணிக்கிறார்கள் என்பதை உணர்கிறபோதெல்லாம் பெருமிதத்தில் அவர்கள் முகம் பிரகாசிக்கும்.

தந்தையர் நமக்குத் தந்ததை நம்மால் ஒருபோதும் திருப்பித்தர இயலாது.

அவர்கள் அதனை விரும்பவும் மாட்டார்கள். வாழ்நாள் முழுக்கத் தாம் விரும்பித் தொலைத்த அருகாமையைக் குடும்பப் பரப்பில் மீண்டும் கைக்கொள்வது மட்டுமே முதுமைப் பருவத்தில் தந்தையர்களின் ஒரே விருப்பமாக இருக்கிறது.

அவ்வப்போது வெளிப்படுத்துகிற சில வார்த்தைகளின் மூலமாக, தோழமையோடு தோள்களை இறுக அணைப்பதன் மூலமாக, இயல்பாக அவர்களை நம்மோடு உலாவச் செய்வதன் வாயிலாக அதனை நிறைவேற்றித் தருவோம். தந்தைமையைத் தினம் தினம் கொண்டாடுவோம்..!

  • மாபா
Comments (0)
Add Comment