தமிழ்த்தாய் – ஒரு மொழிக்கு சிலை வைக்கலாமா?

கலை விமர்சகர் இந்திரன்

1891இல் தமிழ் எனும் ஒரு மொழியை, ஒரு தமிழ்த் தாயாக முதல் முதலில் உருவகப்படுத்தியவர் மனோன்மணியம் சுந்தரனார் (1855 – 1897).

இவர் தனது மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதினார். இது எம்.எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டது.

1967 இல் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சரான பேரறிஞர் அண்ணாதுரை, “நீராரும் கடல் உடுத்த” எனும் இப்பாடலைச் சில திருத்தங்களோடு தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவித்தார்.

இதன் மூலம் தமிழ்த்தாய் எனும் பதப் பிரயோகம் பிரபலம் அடைந்தது.

“பிதா, சுதன் ஆவி“ என்பதில் தந்தையை முன்னிருத்தியதுபோல் அல்லாமல் மொஹெஞ்சதாரோ ஹரப்பா காலத்திலிருந்து தொடரும் தாய்த் தெய்வ வழிபாட்டை இது அடியொற்றியது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ்த்தாய் கோயில் காரைக்குடியில் அமைக்கப்பட்டு 16 ஏப்ரல் 1993 இல் அன்றைய தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

அதில் தமிழன்னைக்கு சிற்பி வை.கணபதி ஸ்தபதி வடிவம் கொடுத்தார். இதனை கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள சோழர் காலத்திய ஞான சரஸ்வதி வடிவத்தை அடியொற்றி படைத்ததை கணபதி ஸ்தபதி நானும், சோழமண்டல் ஓவியர் கிராமத்துச் சிற்பி கே.எம் .கோபாலும் நேரில் சந்தித்தபோது எங்களிடம் தெரிவித்தார்.

இதில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் வலக்கால் கீழே தொங்க இடக்கால் மடித்த நிலையிலும், தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு செதுக்கப்பட்டது.

நான்கு கைகளில் சுவடி, செங்கோட்டு யாழ், சுடர், உருத்திராட்ச மாலை ஆகியவை சித்தரிக்கப்பட்டன. கால்களில் சிலம்பும் தண்டையும் உள்ளன.

மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை பின்புறத்தில் திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்டமாக ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டுக்காக 1981 இல் மதுரையில் அமைக்கப்பட்ட சிலை தாமரையில் இரண்டு கைகளுடன் அபய முத்திரையுடன் அமர்ந்திருப்பது போன்று உருவாக்கப்பட்டது.

உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளான 10.01.1981-ம் நாள் அன்று இச்சிலையை அன்றைய முதல்வர் பாரதரத்னா எம்ஜிஆர் முன்னிலையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார்.

இன்றைக்கும் தமுக்கம் மைதான நுழைவுவாயிலில் தமிழன்னை தேரில் அமர்ந்திருப்பது போன்ற சிலையை நீங்கள் காணலாம்.

Comments (0)
Add Comment