’படத்துல பஞ்ச்னா எப்படி இருக்கணும் தெரியுமா’ என்று சொல்லிவிட்டு ‘நச்’ என்று குத்துவிட்டாற்போல வார்த்தைகளை நேராக நம் மூளைக்குள் இறக்குவது ஒரு வகை. சில பஞ்ச் வசனங்கள் மிகச்சாதாரணமாக, ஈர்ப்பற்றதாக, சில நேரங்களில் ‘சப்பையானதாக’த் தெரியும்.
ஆனால், படம் பார்த்து சில மணி நேரம் கழித்து, சில நாட்கள் கழித்து, அது நினைவில் மேலெழுந்து தொடர்ந்து நம்மோடு பயணிக்கும். அப்படிப்பட்ட வசனங்களை மட்டுமல்லாமல், திரையனுபவத்தையும் சுமந்து நிற்கிறது ‘மெட்ராஸ் மேட்னி’.
கார்த்திகேயன் மணி இயக்கியிருக்கிற இப்படத்திற்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார்.
காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்ரியன், விஸ்வா, ஜார்ஜ் மரியான், சாம்ஸ், சுனில் சுகாதா, மதுமதி, விஜய் டிவி ராமர், கீதா கைலாசம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
மேற்சொன்னவாறு பாராட்டுகளைப் பெறும் அளவுக்கு ‘மெட்ராஸ் மேட்னி’யில் என்ன இருக்கிறது?
’மெ.மே.’ கதை!
அந்த இல்லத்தில் பராமரிப்பாளராகப் பணியாற்றும் லில்லியிடம் தன் கதைகளை வாசிக்குமாறு கூறுகிறார். அவரும் படித்துப் பார்த்துவிட்டு, ‘இதையெல்லாம் விட்டுட்டு சாதாரண மனுஷங்களைப் பத்தி நீங்க கதை எழுத மாட்டீங்களா’ என்று கேட்கிறார்.
’சாதாரண மிடில் கிளாஸ் லைஃப்ல ஏது அட்வெஞ்சர், ஆக்ஷன் எங்க இருக்கும்’ என்ற சலிப்போடு தான் பார்க்கிற மனிதர்களிடம் கதைகளைத் தேடத் தொடங்குகிறார்.
அந்த முயற்சியில், ஒரு பாரில் கண்ணனை (காளி வெங்கட்) காண்கிறார். அவரது வாழ்க்கையனுபவங்கள் நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று ஜோதி ராமையாவுக்குத் தோன்றுகிறது.
பிறகு, கண்ணனின் வாழ்வை முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் விவரிக்கத் தொடங்குகிறார்.
கண்ணன் ஆட்டோ ஓட்டிப் பிழைப்பு நடத்துகிறார். தாய், மனைவி கமலம் (ஷெல்லி), மகள் தீபிகா (ரோஷினி ஹரிப்ரியன்) உடன் வாழ்ந்து வருகிறார்.
தீபிகாவுக்குத் தனது தந்தை ஒரு நாயகன் தான். சிறு வயதில் தோன்றிய அந்த உணர்வு, வயதாகும்போது கூடுகிறதே தவிரக் குறைவதில்லை. அதேநேரத்தில், தந்தையையும் தாயையும் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்.
குழந்தைப் பருவத்தில் பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது தீபிகாவுக்குத் தேங்காய் பன் வாங்கித் தருவது தந்தை வழிப் பாட்டியின் வழக்கம். ‘ஆயா கதை சொல்லு’ என்று பல கதைகளைக் கேட்டிருக்கிறார். ஒருநாள் அவர் இறந்து போகிறார்.
பிறகு, அந்த குடும்பத்தில் இன்னொரு வரவு. கண்ணன் – கமலா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
தினேஷ் (விஸ்வா) வளர வளர, ‘அப்பா தான் கெத்து’ என்ற பிம்பம் அவரது மனதில் உடையத் தொடங்குகிறது. குழந்தைப் பருவத்து சகாக்களோடு ஜாலியாக இருக்க நினைக்கிறார். தான் விரும்பியதைப் பெற்றோர் வாங்கித் தர வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார். அது எப்போதும் நிகழாது என்பதை அறிகிறபோது மனதளவில் உடைந்து போகிறார்.
மளமளவென காலம் உருண்டோடுகிறது.
கல்லூரி செல்லத் தயாராகும் தினேஷ், வங்கிக் கடனுக்காகத் தன் தந்தை யார் யாரையோ தேடிச் செல்வதைக் கண்டு அருவெருப்படைகிறார்.
தான் விரும்பிய பையனுடன் திருமணம் செய்ய மறுத்த தந்தை, இன்று ‘சீக்கிரம் கல்யாணம் பண்ண வேண்டாமா’ என்று சொல்வதைக் கேட்டு எரிச்சலும் ஆத்திரமும் கொள்கிறார் தீபிகா. சென்னையில் இருக்கும் பெற்றோரைப் பிரிந்து, பெங்களூருவில் தனியாகத் தங்கி ஐடி நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருகிறார்.
தன் கணவனையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதே தன் கடமை என்றிருக்கிறார் கமலத்திற்கு, இந்த பிரச்சனைகள் வேதனையைத் தருகின்றன.
‘நான் ஒரு சாதாரண ஆட்டோகாரன்’ என்ற எண்ணத்துடன், தெரிந்தவர்களிடம் உதவிகளைக் கேட்டுப் பெறுகிற நிலையிலேயே தான் இருப்பதாக நினைக்கிறார் கண்ணன். சுற்றியுள்ளவர்களைப் போலவே மகனும் மகளும் தன்னைத் துச்சமாக எண்ணுவதாக உணரும்போது, அவருக்குள் சொல்லவியலா உணர்வொன்று பொங்குகிறது.
இப்படியொரு சூழலில், ஒரு விபத்து நிகழ்கிறது. அடுத்தடுத்து நடக்கிற வார்த்தை மோதல்கள் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறுகிறது. அப்போது, தன் வாழ்நாளில் முதன்முறையாக ஒருவரை நோக்கி கைநீட்டுகிறார் கண்ணன்.
அதன்பின் என்ன ஆனது என்பதே ‘மெட்ராஸ் மேட்னி’யின் மீதி. இறுதியாக, ‘மிடில் கிளாஸ் லைஃப்ல சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டா’ என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறது இப்படம்.
மேற்சொன்ன கதையில் உணர்வோட்டம் இருந்தாலும், முழுமையற்ற சித்தரிப்பு இருப்பதாகத் தோன்றும். கிட்டத்தட்ட திரைக்கதை ட்ரீட்மெண்டிலும் அதையே பின்பற்றியிருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன் மணி.
சில இடங்களில் எழுத்தாக்கத்தில் ‘வாவ்’ சொல்ல வைப்பார், சில இடங்களை ‘ப்ச்’ என்றவாறே கடக்கத் தூண்டுகிறார்.
இந்த படத்தின் பலமும் பலவீனமும் அதுவே.
வேறுபட்ட திரையனுபவம்!
திரையில் காட்சிகள் சாதாரணமாக நகர்கின்றன. அவை சில மனிதர்களின் வாழ்வனுபவங்களாகத் தோற்றம் தருகின்றன. அவற்றை ஒருவர் கதையாகச் சொல்கிறார் என்கிற வகையில், இப்படம் தொகுக்கப்பட்டிருக்கிறது.
அதற்கேற்ற வகையில் யதார்த்தமான சூழலைத் திரையில் உருவாக்கித் தந்திருக்கிறார் கலை இயக்குனர் ஜாக்கி.
அந்தச் சூழலில் இருக்கிற மனிதர்களின் வாழ்வை இயல்புடன் பதிவு செய்வது போல, ‘ஹேண்டிகேம்’ பாணி ஒளிப்பதிவைப் பல இடங்களில் கையாண்டிருக்கிறார் ஆனந்த் ஜி.கே. உணர்வுகளைக் காட்டுகிற இடங்களில் அதீத ‘குளோஸ் அப்’ ஷாட்களை பயன்படுத்தியிருக்கிறார்.
கதை சொல்லி சொல்வதற்கேற்ப, சட்டென்று வெவ்வேறு காலம், களம், மனிதர்களை நோக்கித் தாவுகிற வகையில் படத்தொகுப்பினைக் கையாண்டிருக்கிறார் சதீஷ் குமார் சமுஸ்கி. கார்த்திகேயன் மணியின் திரைக்கதையும் அதையொட்டித் தான் எழுதப்பட்டிருக்கிறது.
இருந்தாலும், பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி தம்பதி இப்படத்தைப் பார்க்கையில் அந்த ‘நான்லீனியர்’ கதை சொல்லலை எதிர்கொள்ளச் சிரமப்படுவதை தியேட்டரில் காண முடிந்தது.
இசையைப் பொறுத்தவரை, கே.சி.பாலசாரங்கன் ஒரு ‘ரெட்ரோ’ அனுபவத்தைத் தருகிறார். எம்.எஸ்.விஸ்வநாதனின் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல் தந்த சுகானுபவத்தைப் பின்னணி இசையில் பல இடங்களில் கிடைக்கச் செய்திருக்கிறார்.
திரையில் ஓடும் காட்சிகளுக்கு முரணாக அவ்விசை அமைந்தபோதும், அது பார்க்கச் சுவாரஸ்யமாக உள்ளது. வடிவேலு பாடிய ‘என்னடா பொழப்பு இது’ பாடல் பாதியிலேயே முடிவடைந்தாலும் ஈர்க்கிறது. ’உசுரே உன்னை தானே’ நெஞ்சைத் தைக்கிறது.
ஒலிப்பதிவு வடிவமைப்பாளர் ஆண்டனி ரூபன், ஆடை வடிவமைப்பாளர் நந்தினி நெடுமாறன், ஒப்பனையாளர் காளிமுத்து மற்றும் டிஐ, விஎஃப்எக்ஸ் குழுவினர் உட்படப் பலர் திரையில் யதார்த்தம் மிளிரத் துணை நின்றிருக்கின்றனர்.
‘நான் ஒரு கதை சொல்வேன். சில இடங்கள்ல நேரடியா சொல்லாம சில விஷயங்களை தவிர்த்திருவேன். நீங்களா புரிஞ்சுக்கோங்க’ என்கிற வகையில் இதில் காட்சிகளை அமைத்திருக்கிறார்.
தீபிகாவாக ரோஷினியைக் காட்டியபிறகு, அப்பாத்திரத்தின் குழந்தைப் பருவத்திற்குத் தாவுகிறார். அதன் ஆயா பாத்திரத்தின் வாழ்வை முன்வைக்கிறார்.
’தம்பி பிறந்தபிறகு அப்பாவை காலை வேளைகளில் வீட்டில் பார்த்ததே இல்லை’ என்று தீபிகா பாத்திரத்தின் எண்ணவோட்டம் இருப்பதைக் காட்டுகிறார்.
இத்தனைக்கும் நடுவே, இக்கதையை ஜோதிராமையா பாத்திரத்தை ஏற்ற சத்யராஜ் வழியே சொல்ல முற்பட்டிருக்கிறார். அதற்குப் பதிலாக, இயக்குனர் குரலே வாய்ஸ் ஓவரில் உழைத்திருக்கலாம். நடுநடுவே தலைகாட்டுகிற குழப்பத்தை அது தவிர்த்திருக்கும்.
அப்பா, அம்மா, மகள், குழந்தைப் பருவம் என்று வருகிற எழுத்துகள் மற்றும் பாத்திரப் பெயர்கள் படத்தோடு ஒன்ற வைப்பதில் தடையாக இருக்கின்றன. இந்த கதைக்கு அந்த உத்தி தேவையற்றதாக உள்ளது என்பதே நம் கருத்து.
தொடக்கத்திலேயே சொன்னது போல, வசனங்கள் மற்றும் காட்சிகளில் நாம் எதிர்பார்க்கிற ‘பஞ்ச்’ கிடைக்கவில்லை.
உதாரணமாக, ஜார்ஜ் மரியானிடம் டிரைவிங் கற்றுக்கொள்ள வந்த பெண் அவரை அடி வெளுத்தெடுக்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டி ஆடியன்ஸ் சிரிப்பை அதிகப்படுத்தியிருக்கலாம். இயக்குனர் அதனைத் தவிர்த்திருக்கிறார்.
ஒரு காட்சியில், ‘நீ பேசுனது போதும்’ என்று காளி வெங்கட்டிடம் சொல்லும் வகையில் ‘சாத்து’ என்பார் ஜார்ஜ்.
உடனே, அவர் கார் கதவைச் சாத்துவார். ‘அதையும்தான்’ என்பார் ஜார்ஜ். வேறொரு இயக்குனராக இருந்தால் இந்த இடத்தில் வெடிச்சிரிப்பை உண்டுபண்ணியிருப்பார். அதற்கான வாய்ப்புகளை கார்த்திகேயன் மணி எடுத்துக்கொள்ளவே இல்லை.
ஆக, அதுவே அவரது பாணி என்று நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. சில இடங்களில் அது குறைகளாகவே வெளிப்பட்டுகிறது.
அதனை முடிவு செய்துவிட்டுப் படம் பார்த்தால், ‘மெட்ராஸ் மேட்னி’ கதை சொல்லல் நிச்சயம் இனிக்கும். ‘அப்போ முதல் தடவை படம் பிடிக்காதா? இதுக்காக ரெண்டு தடவை பார்க்கணுமா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதனைச் செயல்படுத்துகிற வகையில் இந்த படத்தில் ஒரு விஷயம் இருக்கிறது.
சொல்லாமல் தவிர்த்திருக்கிற சில குறைகளையும் புறந்தள்ளுகிற வகையில் இதில் நடிகர்களின் பெர்பார்மன்ஸ் அமைந்திருக்கிறது. அதுவே, ‘மெட்ராஸ் மேட்னி’யின் பலம்.
காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி, விஸ்வா மட்டுமல்லாமல் சாம்ஸ், ஜார்ஜ், விஜய் டிவி ராமர், கீதா கைலாசம், சுனில் சுகாதா, மதுமிதா, அர்ச்சனா மற்றும் வினோத், கெய்ல் அங்கிள் பாத்திரங்களில் நடித்தவர்கள் உட்படப் பலர் இதில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கதையை உணர்ந்து, அதன் ஒவ்வொரு அசைவிலும் தங்கள் ஈடுபாட்டைச் செலுத்தியிருக்கின்றனர்.
தியேட்டரில் சரியான கவனத்தைப் பெறாமல் போனாலும் ஓடிடி வெளியீட்டில் பாராட்டுகளை நிச்சயம் அள்ளும் இந்த ‘மெட்ராஸ் மேட்னி’.
- உதயசங்கரன் பாடகலிங்கம்