ஜுன் 5 – உலக சுற்றுச் சூழல் தினம்!
சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சுற்றுச்சூழல் கட்டமைப்பு நாம் வாழ்கின்ற அதனைச் சுற்றியுள்ள சூழலும் மிகவும் அற்புதமானது மட்டுமல்ல அபூர்வமானதும் கூட.
இந்த பூமிப்பந்து, பல்வேறு வகையான நீர், நிலவளங்கள், மலைகள், மண்வளங்கள் போன்ற இயற்கை காரணிகளாலும், சிறு செடி முதல் படர்ந்த பசுமைக் காடுகள், பூச்சிகள், மீன்கள், பலவகைப்பட்ட விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற உயிருள்ள காரணிகளாலும் இணைந்து பல்வேறு சூழ்நிலை மண்டலங்களாக உருவாகி உள்ளது.
ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்தில் உள்ள உயிரற்ற மற்றும் உயிருள்ள காரணிகள் அனைத்தும், அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏதோ ஒருவகையில் கண்டிப்பாக இணைந்து செயல்பட்டாக வேண்டும். உதாரணமாக, அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ நீர் மிகவும் அவசியம்.
தண்ணீர், மழை மூலம் கிடைக்கிறது. தேவையான மழை பொழிவிற்கு அதிகப்படியான மரங்கள் அவசியமாகின்றன.
இப்படியாக ஒரு உயிருள்ள காரணி, ஒரு உயிரற்ற காரணி என ஒவ்வொன்றும் இணைந்து, சுற்றுச்சூழல் கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளன.
இந்த கட்டமைப்பின் ஓரிடத்தில் ஏதேனும் ஒரு இடர்பாடு ஏற்படுமானால், அங்குள்ள சுற்றுச்சூழல் வாழ்விடத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
அதாவது, மரங்களும், காடுகளும் அழிக்கப்பட்டால் மழைவளம் குறைகிறது. மழை இல்லையென்றால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
தண்ணீர் குறைபாட்டால் உயிரினங்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் சுற்றுச்சூழலும் அதன்தொடர் நிகழ்வுகளும் அமைகின்றன.
சுற்றுச் சூழல் பாதிப்பு
நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது.
ரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது மிக முக்கியமாகும்.
சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட தவறியதன் விளைவுகளை மனிதர்கள் தற்போது அனுபவிக்க தொடங்கி விட்டனர்.
மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும்.
மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் சுவாசிக்க காற்று கிடைக்காது.
வெப்பநிலை பல மடங்கு உயரும் அபாயமும் உள்ளது. எனவே காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் கடும் வெள்ளம், சூறாவளி இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
உலகச் சுற்றுச்சூழல் தினம் இந்த பரந்துபட்ட பூமியையும், அதன் மீதுள்ள இயற்கை வளங்களையும் காப்பாற்றத் தேவைப்படும் அனைத்து சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்வுகளையும் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கொண்டாடப்படுகிறது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
1972-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்,
இயற்கை வளங்கள், அதன் பயன்கள் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு
விழிப்புணர்வு உலக சுற்றுச்சூழல் தினத்தின் வாயிலாக மீதமுள்ள காடுகளையும், இயற்கை வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மட்டும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் அல்ல. அனைவரது மனதிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அக்கறை ஏற்பட்ட போதிலும், பெருமளவு முன்னேற்றம் ஏற்படவில்லை.
சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது அவசியம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச்சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மரங்கள், ஆரோக்கியமான மண் மற்றும் சுத்தமான நீர் ஆகியவை ஆரோக்கியமான கிரகத்திற்கு இன்றியமையாதவை.
இயற்கையும், சுற்றுச்சூழலும் தன்னைத் தானே கட்டமைத்துக் கொண்டு, தனது பருவகால நிலைகளை சரியாக கணித்துக்கொண்டு, மனித குலத்திற்கு மகத்தான நன்மைகளை செய்து வருகிறது.
அந்த இயற்கைக்கும் அதன் வளங்களுக்கும் தீமை ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை காக்க உறுதி ஏற்போம்.
- நன்றி : தினத்தந்தி