புதிய படங்களுக்குப் பழைய பாடல்கள் ஏன்?

அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற “ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாட்டில் கவிஞர் வாலி “நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா… கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நீ ராஜா” என்று எழுதிருப்பார்.

இன்று பெரும்பாலான திரைப்படங்களில் இளையராஜாவின் பாடல்கள் வைக்கப்பட்டு, அதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பைப் பார்க்கும்போது வாலியின் வைர வரி தகுந்த வாழ்த்தாகத் தொனிக்கிறது.

இளையராஜாவின் வெற்றி ரகசியம்

பண்ணைபுரத்திலிருந்து வந்து, அன்னக்கிளி மூலம் தமிழ்த் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி, 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த அபூர்வ கலைஞராக வலம் வருகிறார் இளையராஜா.

மண்ணின் மனமான நாட்டுபுற இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை, செவ்விசை என இசையின் அனைத்து பரிமானங்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு, அவற்றைத் தனக்கே உரிய புதுபாணியில் கோத்து இசையமைப்பதில் வல்லமை அடைந்தார்.

கடும்தவம்போல் தினம் செய்யும் பயிற்சிகளின் மூலம் மெட்டமைத்தல் என்ற பணி மூச்சுவிடுவதுபோல் அவரால் செய்ய முடிகிறது. அதுதான் சிம்பொனி வரை அவரைக் கொண்டு சென்றிருக்கிறது.

இளையராஜா இசையமைத்தால் படம் ஹிட்டாகிவிடும். பாடல்களெல்லாம் பிரபலம் ஆகிவிடும் என்று திரைத்துறை கருதியதற்கும். 80களின் தொடக்கத்திலிருந்து 90களின் நிறைவு வரை தமிழ்த் திரையுலகை அவர் தனியாட்சி புரிந்ததற்கும் இதுதான் காரணம்.

புதிய படங்களுக்குப் பழைய பாடல்கள்

திரைப்படங்களில் எந்தவொரு காட்சிக்கும் அதன் பின்னணி இசை கொண்டுதரும் அழகு தனித்துவமானது.

அதைப் பார்த்து வளர்ந்த இன்றைய சமூகம், சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தால் கூட அதற்குத் தோதாக ஒலிக்கும் பழைய பாடலைப் பின்னணியில் ஓடவிடும் வழக்கம் அதிகமாகிவிட்டது.

இதில்தான் இளையராஜா நிலைத்து நின்றுவிட்டார்.

ராகங்களின் தன்மைகளை நன்கு உணர்ந்த இளையராஜா, அவற்றில் எதை எதை எவ்வளவு சேர்த்துக் கொடுத்தால் சுகமாய் இருக்கும் என்ற சூட்சுமத்தைக் கண்டறிந்துவிட்டார்.

அந்த ஞானத்தைக் கொண்டு அவர் அமைக்கும் மெட்டுகள், மனித வாழ்வின் அன்றாடத்தில் இயல்பாகக் கலந்து அலங்காரம் செய்கிறது. இதை இன்றைய தலைமுறை புரிந்துகொண்டதால்தான் புதிய படங்களிலும் அவரது பழைய பாடல்கள் ஒலிக்கின்றன.

புதிய சூழல்களுக்கும் அவரது பழைய பாடல்கள் கச்சிதமான உணர்வுக் கடத்தலை நிகழ்த்தி விடுகின்றன.

இளையராஜா பாடல்களை ஏன் வைக்கிறார்கள்?

இன்றைய வெற்றி இயக்குநர்கள் என்று நம்மால் பட்டியலிட முடிந்த பலரும் இளையராஜாவின் புகழும் பணிகளும் உச்சத்தில் இருந்தபோது அவரை அணு அணுவாக ரசித்தவர்களாய் இருக்கிறார்கள்.

திரைப்படம், கதாநாயகன், சூழல் என்பதையெல்லாம் கடந்து, நமக்குத் தோன்றியதை கற்பனை செய்துகொள்ளும் அளவு புதிய சிந்தனைகளைக் கிளப்பிவிடுகிறது அவரது இசை.

அதில் கரைந்து தோய்ந்தவர்கள் உருவாக்கும் காட்சியில் அவரது பாடல்களே ஒலித்தால் தாங்கள் மனத்திரையில் கண்ட உணர்வு, பெருந்திரையில் வெளிப்படும் என்று நம்புகிறார்கள்.

இதுதான் உண்மையில் இன்றைய புதுப் படங்களிலும் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெறக் காரணமாய் இருக்கிறது.

காய்த்த மரம் கல்லடி படும்

இது இளையராஜா என்று மட்டும் கிடையாது. எம்.எஸ்.வி, ஏ.ஆர் ரஹ்மான், வித்யாசாகர், தேவா என உச்ச ஹிட்டுகளைக் கொடுத்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நடப்பது.

ஆனால் இளையராஜா மட்டும்தான் காப்புரிமைச் சிக்கலில் இவ்வளவு சர்ச்சைக்கு உள்ளாகிறார்.

அதிகம் கேட்கப்படும், விரும்பப்படும் பாடல்களாய் அவரது படைப்புகள் உள்ளன.

அவை அவருக்கு நியாயமாகப் பெற்றுத் தரவேண்டிய புகழுக்கும் தொகைக்கும் ஓர் அளவு உண்டு. அந்த உரிமையைத் தான் இளையராஜா கேட்கிறார்.

பார்ப்பதற்கு வில்லன் போல் தெரிந்தாலும் உண்மையில் அவர் கேட்பதும் போராடுவதும் நியாமான ஒன்றுதான் என்கின்றனர் திரைத்துறையில் சிலர்.

எல்லா உணர்வுகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் பல பாடல்களைப் படைத்துக் காய்த்த மரம் இளையராஜா, கல்லடி பெறுகிறார்.

சண்டை… சர்ச்சை… செட்டில்மென்ட்!

2017-ம் ஆண்டு பாடகர்கள் எஸ்.பி.பி, சித்ரா போன்றோர் வெளிநாட்டுக் கச்சேரிகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடி அதிகமாகச் சம்பாதிப்பதை அறிந்ததும், பாடலின் முதல் உரிமையாளரான இளையராஜாவின் அனுமதியின்றி பாடல்களைப் பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி சர்ச்சையைக் கிளப்பினார்.

அங்கே ஆரம்பித்தது, மஞ்ஞுமெல் பாய்ஸில் பயன்படுத்தப்பட்ட கண்மணி அன்போடு காதலன், அகத்தியாவில் வந்த ‘என் இனிய பொன் நிலாவே’, குட் பேட் அக்லியில் வைக்கப்பட்ட ஒத்த ரூவா, இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி போல எண்ணற்ற படங்களுக்குக் காப்புரிமை கோரி வழக்குப் போட்டுச் சிலவற்றில் செட்டில்மென்ட்டும் கண்டிருக்கிறார்.

காப்புரிமைப் போராட்டத்தில் கோபப்படும் முகம், பத்திரிகையாளரிடம் கடுப்பாகும் முகம், கேள்வி கேட்பவரை அகங்காரமாய்ப் பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்லும் முகம் என அவரது பல முகங்கள் திரையில் காட்டப்பட்டாலும், நதிமூலம் ரிஷிமூலம் காணாது அவர் படைத்த பாடல்களுக்குள் புகுந்தால், காப்புரிமைகளைக் கடந்த கலையுரிமை இளையராஜா என்பது விளங்கும்.

– விவேக் பாரதி

நன்றி: டி.என் டாக்கீஸ்

Comments (0)
Add Comment