‘பாடும் நிலா’ என்று சொன்னவுடனேயே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முகம் நினைவுக்கு வருவது ஒரு அசாதாரணமான விஷயம் தான். திரையிசை மீது ஈர்ப்பில்லாதவர்களும் அதனைத் தெரியாதவர்களும் கூட, அவரது குரலைக் கேட்டால் அதனுடன் ஒன்றிப்போவார்கள்.
அதற்குக் காரணம், அந்தக் குரலில் கலந்திருந்த எஸ்.பி.பியின் உழைப்பும் சிரத்தையும் இன்னபிற அம்சங்களும் தான். அந்த அம்சங்களுக்குத் திறமை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு, கவனக் குவிப்பு என்று பல பெயர்களைச் சொன்னாலும், எந்தச் செயலிலும் மனமொன்றி ஈடுபடுகிற குணமே அனைத்தையும் உடன் அழைத்து வரும் என்று காட்டியவர் நம் ‘பாடும் நிலா’.
தாழ்த்திக் கொண்ட தன்மை!
‘தெரியாது’ என்று சொல்வதற்குப் பதிலாக, அதனைக் கற்றுக்கொண்டு தெளிதலே நம்மை நமக்கே அடையாளம் காட்டும். திரையிசை பாட வந்த நாள் முதல் இறுதி வரை அதனைக் கடைப்பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் தமிழுக்கு வந்து, ஒரு பின்னணிப் பாடகராக வெற்றி பெறப் போராடி, அந்த போராட்டத்தைக் கடந்து வேறொரு இடத்திற்கு வந்தபிறகும் அதனைத் தக்கவைக்கும் வகையில் தொடர்ந்து உழைப்பில் ஈடுபாடு காட்டியவர் எஸ்.பி.பி.
எழுபதுகளில் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் சகோதரர்களோடு கொண்டிருந்த நட்பு பிணைப்பினை அதன் பின் வந்த நாட்களிலும் பேணினார். அவர்கள் புகழ் வெளிச்சத்தைக் கண்டபிறகு, இதர இசையமைப்பாளர்களோடு கைகோர்த்துப் பணியாற்றினார்.
எண்பதுகளில் ‘ஏக் துஜே கேலியே’ வழியாக இந்தி திரையுலகில் நுழைந்தவர், பின்னர் தொடர்ந்து அங்கும் தனது புகழ்கொடியைப் பறக்கவிட்டார்.
தொண்ணூறுகளில் நடிப்பு, டப்பிங், இசையமைப்பு, தயாரிப்பு என்று பல துறைகளில் தனது முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
எண்பதுகளிலும் சரி, தொண்ணூறுகளுக்குப் பிறகும் சரி, புதிய இசையமைப்பாளர்கள் தாங்கள் அறிமுகமாகிற படங்களுக்குப் பாடக் கேட்கும் சந்தர்ப்பங்களில், அவர் ‘நோ’ சொன்னதே கிடையாது. அதனாலேயே பல இசையமைப்பாளர்களின் முதல் படங்களில் அவரது குரலைக் கேட்கலாம். ஏ.ஆர்.ரஹ்மான், சௌந்தர்யன் உட்பட நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களை அதற்கு உதாரணம் காட்டலாம்.
’உங்களுக்குப் பிடித்தமான பாடல் எது’ என்று யாரையாவது கேட்டு, அவர்கள் தருகிற பிளே லிஸ்டில் எஸ்.பி.பியின் பாடலைக் கண்டெடுக்க முடியும். அந்தளவுக்கு ‘ஹிட்’ பாடல்களை பாடியிருக்கிறார். பிற மொழி ரசிகர்களும் கூட இதற்கு விதிவிலக்கில்லை.
குறைந்தபட்சம் ரிக்கார்டிங் தியேட்டர்களில் ஒரு நாளைக்கு இரண்டு பாடல்களைப் பாடுவது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கொரோனா காலகட்டத்தில் அவர் மறையும்வரை, அந்த வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தார்.
இது போக வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள், இதர நிகழ்வுகள், படப்பிடிப்புகள் தவிர்த்த நாட்களில் அவர் இசையின் அருகாமையை விட்டு விலகியிருந்த தருணங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு இசையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்த கலைஞர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.பி.பி.
திரையில் தெரியும் நடிகரின் முகத்தோடு பொருந்துகிற வகையில் குரலை வெளிப்படுத்துவது, எத்தகைய உணர்வை வெளிக்காட்டுகிற பாடல்களையும் பாடுவது, பாடல்களின் இடையே ‘மிமிக்ரி’ செய்வது, உண்மையான ரசிகனின் குதூகலத்தைப் பாடும்போது வெளிப்படுத்துவது, தன்னுடன் இணைந்து செயலாற்றுகிறவர்களுக்கும் இடமளிப்பது என்று அவரது திரையிசையில் நாம் காண்கிற ஆச்சர்யங்கள் நிறைய.
யதார்த்த வாழ்விலும் அவரது குணாதிசயங்கள் கண்டு வியந்த அனுபவங்கள் பலருக்கு உண்டு. திரை பிரபலங்கள் மட்டுமல்லாது சாதாரண மனிதர்களையும் அதனை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இப்படி எஸ்.பி.பி பற்றிப் பேசப் பேச ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கின்றன. அவருடன் பழகிய தருணங்களை யாராவது பகிர்ந்தால், அதில் புதிதாக ஒன்று கற்றுக்கொள்ளக் கிடைக்கிறது.
இதற்கிடையே திரையிலும் காற்றிலும் தெரிகிற அவரது ஆன்மா நம்மைப் பல திசைகளில் இழுத்துச் செல்கிறது. அதற்கான வழிகாட்டியாக அவரது குரல் விளங்குகிறது. திரையிசைப் பாடல்கள் மட்டுமல்லாமல் பக்தி உள்ளிட்ட இதர துறைகள் சார்ந்த தனிப்பாடல்கள் வழியாகவும் அதனைச் சாதித்திருக்கிறார் எஸ்.பி.பி. அதன் வழியே, என்றும் தான் ரசிகர்களோடு என்றென்றைக்குமாக ஜீவித்திருப்பதை உணர்த்துகிறார்.
இன்று அவரது பிறந்தநாள். அது தெரியாமல் கூட, இந்நேரம் அவரது பாடல்களை எங்கோ, யாரோ கேட்டு ரசித்து சிலிர்த்துக் கொண்டிருக்கலாம். அதனை நினைவுகூர்ந்து அதனைச் செய்கையில் அந்த ரசிப்பு பன்மடங்காகிறது. அந்த ரசிப்பினை இன்று நமதாக்குவோம்..!
- மாபா