தயிர்ப் பானையும் விளாம்பழமும்!

மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடிய உணவுகளில் சிறந்ததாகத் தயிர் என்பது அமைகிறது. அப்படியான தயிர் இன்று பல்வேறு வடிவங்களில் அனைவரது வீடுகளிலும் உலாவிக் கொண்டிருக்கின்றது.

பால் பெருகி தயிராகி; தயிர் மோராக, வெண்ணெய்யாக, பால் பொருட்களாக உருவம் மாறி நிற்கிறது.

அந்த வரிசையில், சங்க இலக்கிய மனிதர்களின் வாழ்வியலில் பெரும் பங்கு வகித்தவையாக தயிர் இருந்துள்ளது.

ஐவகை நில அமைப்பில் முல்லை (காடு) நில மக்களோடு அதிகம் தொடர்புடையதாக தயிர் விளங்குகிறது.

ஆயர் குல மக்கள் தங்கள் கால்நடைகளின் உபரியான பாலையும் தயிரையும் மருத (வயல்) நிலத்தில் விற்பனை செய்து, பண்டமாற்று வணிகம் நடைபெற்றுள்ளதைச் சங்க நூல்கள் சான்று பகர்கின்றன.

“முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்”

(குறுந்தொகை; 167)

கட்டித் தயிரினை மென்மையான காந்தள் மலர் போன்ற விரல்களால் பிசைந்து தலைவருக்கு உணவு பரிமாறுகின்றாள் என்று தலைவியின் இல்லறச் செயல்பாட்டினை எடுத்துரைக்கிறது.

தயிர் மருத்துவக் குணமுள்ள உணவாகும். செரிமானத்தை மேம்படுத்தியும் எலும்பினை வலுப்படுத்தியும் முகப்பொலிவு பெறவும் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் உதவுகிறது.

அதேபோல், விளாப்பழம் மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, சளி, வாயு, இருமல், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

தயிர்ப் பானையினை நன்கு கழுவி வெயிலில் காய வைத்தும் அதனுள் வீசுகின்ற முடை நாற்றம் நீங்காது. அதனைப் போக்க விளாப்பழத்தை உள்ளிட்டு வைக்கும் வழக்கம் சங்க கால மக்களிடம் இருந்துள்ளது.

இதனை, கயமனார் என்னும் புலவர் நற்றிணை வழி (பாடல் எண்: 12) உறுதிப்படுத்துகிறார்.

தலைவியைப் பிரிந்த சோகத்தினால் தயிர்க் கடையும் மத்து இயக்கப்படாமல் பூஞ்சை பிடித்துக் கிடக்கின்றது.

தயிர்ப் பானையில் விளாப்பழம் பழுத்து மணம் வீசுகின்றது. இப்படியாக, தயிர்ப் பானையும் விளாம்பழத்திற்குமான உறவினைத் தலைவியின் வாழ்வியலோடு இணைத்து பேசுகிறது சங்க மரபு.

இன்றும் மரபாக ஆடு, மாடுகளை வளர்ப்பவர்களின் வீடுகளில் தயிர், பால் என்பவை வைப்பதற்காக மண்பாண்டங்களோ அல்லது புதுவகையான பாத்திரங்களையோ வைத்திருப்பார்கள். சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக இன்றும் பால், தயிராக்கி விற்பனை செய்யும் முறை உள்ளது.

என்றாலும் விளாப்பழம் இட்டு முடை நாற்றத்தைப் போக்கும் வழிமுறைகளை நாம் இன்று கை நழுவி விட்டுவிட்டோம். விளாப்பழம் படையல்களுக்கு மட்டுமே காட்சி தரும் சூழலே உள்ளது.

  • முனைவர் ஜெ. மதிவேந்தன்.
Comments (0)
Add Comment