மழையினூடாக ஒரு நிறைவான பயணம்!

எழுத்தாளர் லதா அருணாசலம்

நகரை விட்டுத் தள்ளியிருக்கும் புறவழி நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை விட உயிரோட்டமான நகரங்கள், கிராமங்களினூடாகச் செல்லும் சாலைகளே எனக்குப் பிரியமானவை.

இப்போதெல்லாம் அனைத்துச் சாலைகளுமே நல்ல முறையில் இருக்கின்றன. ஆனால் நேரமும் வசதியும் கருதி நீண்ட பயணங்களில் வாய்ப்பது நெடுஞ்சாலைகள் மட்டுமே.

ஒரு விசேஷத்தில் கலந்துகொள்ள நல்வாய்ப்பாக உடுமலையிலிருந்து தாராபுரம் வழியாக கரூர் சென்று கொண்டிருந்தேன்.

தாராபுரம், கன்னிவாடி போன்ற ஊர்களைக் கடந்து சென்ற போது ஊரின் அழகோடு அம்மண்ணைச் சார்ந்த சில படைப்பாளிகளும் நினைவுக்கு வந்தார்கள்.

அதுவும் கன்னிவாடியில் சாலையை ஒட்டி அமைந்திருந்த அரசுப் பள்ளியைப் பார்த்தபோது இதுதான் மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் அடிக்கடி எழுதும் பள்ளியோ என்று கூடத் தோன்றியது.

உடன், அமராவதி, நொய்யல் ஆறுகள் நுரைத்துப் பொங்கும் படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள் தேவி பாரதி, என்.ஸ்ரீராம் மற்றும் அண்மையில் தன் நிலம் மட்டுமல்லாது தென் அமெரிக்காவின் கடல் வாசத்தையும் தன் எழுத்தில் வடித்திருந்த எழுத்தாளர் குணா கந்தசாமி ஆகியோரது படைப்புகளும் நினைவில் மோதின.

இவர்களுடைய சில படைப்புகளையாவது வாசித்திருக்கிறேன் என்ற மெல்லிய திருப்தியும் ஏற்பட்டது.

குறிப்பிட்ட நிலம், வட்டாரம் சார்ந்த படைப்புகளில் நாம் காணும் இடங்களை நேரில் பார்க்கையில் குழந்தைத்தனமான எளிய மகிழ்ச்சி தோன்றுகிறது.

அடித்துப் பெய்து கொண்டிருந்த மழையினூடாக நிறைவான ஒரு பயணம்.

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment