பெங்களூரு vs பஞ்சாப்: முதல் IPL கோப்பை யாருக்கு?

ஐபிஎல் கோப்பைக்காக இன்று (ஜூன் – 3) நடக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகிறது. 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடக்கும் நிலையில், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி இதுவரை 18 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை ஒரு முறைகூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை.

இந்தச் சூழலில் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் இரு அணிகளும் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே, அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆர்சிபி அணிக்காக பல ஆண்டுகளாக விராட் கோலி விளையாடுகிறார். இந்திய அணிக்காகவும் பல வெற்றிகளை விராட் கோலி பெற்று கொடுத்திருக்கிறார்.

அவருக்காக இந்த முறை கோப்பையை வெல்ல போராடுவோம். இறுதிப் போட்டியில் நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்றார்.

ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் விராட் கோலி ஒருவரையே பேட்டிங்கில் அந்த அணி அதிகமாக சார்ந்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் அந்த நிலை மாறியிருக்கிறது.

பேட்டிங், பந்துவீச்சு ஆகிய 2 துறைகளிலும் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது.

விராட் கோலியுடன், பட்டிதார், பில் சால்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட அதிரடியான வீரர்கள் அந்த அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார்கள்.

டிம் டேவிட்டும் காயத்தில் இருந்து மீண்டு வந்தால், அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவது பஞ்சாப்புக்கு சிரமமான விஷயமாக இருக்கும்.

பேட்டிங்கைப் போலவே ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார், சாயுஷ் சர்மா, யஷ் தயாள் என மிக நீண்ட பந்துவீச்சு வரிசையும் பெங்களூரு அணிக்கு வலிமை சேர்க்கிறது.

கடந்த வாரம் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பஞ்சாப்பை மிக எளிதாக வென்ற பெங்களூரு அணி, அது தந்த நம்பிக்கையுடன் இன்றைய இறுதிப் போட்டியை எதிர்கொள்கிறது.

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை, அது கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை அதிகமாக சார்ந்து இருக்கிறது. அவர் கடந்த 16 போட்டிகளில் மொத்தம் 603 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிகளுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

கடந்த ஆண்டில் அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆனால், அந்த வெற்றிக்கான முழு பெருமையும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைக்கவில்லை. மாறாக அணியின் பயிற்சியாளராக இருந்த கவுதம் காம்பீருக்கு கிடைத்தது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார். மறுபக்கம் இந்திய அணியில் இருந்து ஏனோ ஸ்ரேயஸ் ஐயர் ஒதுக்கப்பட்டார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆணிகூட அவரை தொடர்ந்து ஆணியில் வைத்திருக்க ஆர்வம் காட்டவில்லை. இந்தச் சூழலில் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், தன்னால்தான் கடந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இளம் இந்திய வீரர்களான பிரபுசிம்ரன் சிங், நேஹல் வதேரா, பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் ஸ்ரேயஸ் ஐயருக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.

இந்திய அணிக்காக அவர்கள் ஆடாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் யாருக்கும் பயப்படாத ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே அதிரடியை அவர்கள் தங்களின் முதல் இறுதிப் போட்டியிலும் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தியுள்ள சஹல், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சும் பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் அனுபவம் வாய்ந்த ஆர்சிபி அணி என்றால், மறுபக்கம் அதிக அனுபவம் இல்லாத இளம் கன்றுகளைக் கொண்ட அணியாக பஞ்சாப் இருக்கிறது.

இதில் யாருக்கு இறுதி வெற்றி என்பது இன்று இரவில் தெரிந்துவிடும்.

 – பிரணதி

Comments (0)
Add Comment