அன்பும் பாசமும் அரவணைத்த காலம் பளிங்கு மண்டபத்தில் பன்னீர்ப் பூக்கள் குவிந்து ஒரு குன்றம்போல் காட்சி அளித்ததைக் கண்டு சுழல் காற்றுக்கு பொறாமை.
அதனால் அது சுழன்று அடித்தது! அந்த வேகத்தில் அந்தப் பூக்கள் மூலைக்கொன்றாகச் சிதறின!
வெண் புறாக்களின் கூட்டம் ஒரே மரத்தில் அமர்ந்திருந்ததைக் கண்ட வேடன் ஒருவன், வில்லை வளைத்தான் நாண் ஏற்றுவதற்காக!
மரத்திற்கு ஒன்றாக அந்தப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து சென்று, தனது கூட்டம் சிதறிவிட்டதை உணர்ந்து கண் கலங்கின!
ஆமாம், இந்த இரு உவமைகளும் 1972-ல் கழகத்திற்கு ஏற்பட்ட சோதனைக்கும் அதனால் விளைந்த பிளவுக்கும் பிரிவுக்கும் மிகவும் பொருத்தமானவை!
திட்டமிட்டு என்னையும், நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களையும் பிரித்தார்கள்! பிரித்தவர்கள் பின்னர் அவருடன் ஒட்டிக் கொண்டார்கள். பாவம், பிழைக்க தெரியாதவர்கள்.
அரசியல் மாச்சர்யங்களால் ஏற்பட்ட பிரிவு, என்னைக் குலுக்கியதைவிட அவரை வென்றுவிட்ட மரணத்தால், எமக்கிடையே ஏற்பட்ட பிரிவு, ஆழம் காண முடியாத சோக அகழ்!
“அவர் நினைவாக எதற்காக திரையுலக மேதைகட்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார்?
எதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் திறப்பு விழா நடத்தினாய்?
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை இத்தனை லட்சம் செலவில் அமைத்தது தேவைதானா?
எம்.ஜி.ஆர். நினைவாக அஞ்சல் தலை வெளியீட்டு விழா ஏன்? அதில் உனது உருக்க உரை ஏன்?”
– இப்படிக் கேட்கும் சில நண்பர்கள், எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பூத்துக் குலுங்கி மணம் கமழ்ந்த நட்பின் மகிமையைச் சரிவர உணராதவர்கள்!
நான் அவர்பால் கொண்டிருந்த நட்பின் சிறப்பையும் அவர் என்மீது வைத்திருந்த பாசத்தின் சிறப்பையும் இதோ அவரே எழுதியுள்ள கட்டுரையில் காண்க!
‘பொம்மை’ எனும் கலையுலக இதழில் 1971 ஜூலை மாதம் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தீட்டியுள்ள வாசகங்களை இப்போது படித்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது!
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்காக அவர் வெளிநாடு சென்றபோது முதலமைச்சராக இருந்த நான், அவரை வழியனுப்ப விமான நிலையத்திற்குச் சென்றதை எம்.ஜி.ஆர் எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா?
*
“அண்ணா அவர்கள் வந்திருந்து முன்பு மாலை அணிவித்த அதே விமானக் கூடத்தில் அண்ணாவைத் தேடினேன்.
அண்ணா இல்லை என்பது எனக்கு தெரியாதா? நன்கு தெரியும். ஆனாலும் உள்ளத்திலிருந்த எண்ணம், அண்ணா வந்து என்னை வாழ்த்தி வழி அனுப்ப வேண்டுமே என்பது. நான் அந்தப் பேராசையோடு சுற்றிலும் பார்த்தேன்.
சுற்றி அலைந்த கண்களுக்கு முன் அதோ வருகிறார்! அருகில் வந்து விட்டார்! போலீஸ் அதிகாரிகள் அவரை என் அருகில் அழைத்து வர உதவினார்கள்.
ஆமாம்.
கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா என்னைத் தேடி வந்தார்!
கலைஞர் வந்தார்!
அண்ணாவைப் போல் என்னைவிட வயதில் மூத்தவர் இல்லாவிடினும் அண்ணாவிற்கு உரிய தகுதியைப் பெற்ற கலைஞர் மாலையை என் கழுத்தில் அணிவித்தார்.
நான் உணர்ச்சிவசப்பட்டிருந்தபோதே அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார். வண்டியை நேராக விமானத்திற்கு அருகில் கொண்டு செல்லும்படி.
நான் வேனில் ஏற்றப்பட்டேன். வண்டி நகர்ந்தது.
கலைஞரிடம் (அண்ணாவிடம்) ஏதேதோ பேச வேண்டுமென்று விரும்பினேன். இயலவில்லை. பெருத்த ஏமாற்றத்தோடும், வேதனையோடும் விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன்.
தூரத்தில் அண்ணன் திரு எம்.ஜி.சக்கரபாணி மற்றும் பல பெரியவர்கள், அன்பர்கள், தோழர்கள் இருந்தனர். எல்லாரிடமும் சென்று என் வணக்கத்தைச் சொல்ல ஆசைப்பட்டேன். இயலவில்லை. விமானத்தின் உள்ளே சென்று அயர்ந்து உட்கார்ந்தேன்.
பெருத்த ஏமாற்றம்!
திடீரென வெளியே இருந்து போலீஸ் அதிகாரிகள் சிலர் விமானத்திற்குள் வந்தனர். கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா மீண்டும் என்னைத் தேடி வந்தார்.
மறுபடியும் என் கழுத்தில் அவரது கரம் மாலையைச் சூட்டிற்று. என்னை ஆரத் தழுவினார்.
எங்கள் இருவர் கண்களிலும் நீர் மல்கின.
நான் புறப்படுவதைப் பற்றி அவரிடம் பேசியதுண்டு. ஆனால் குறிப்பிட்ட தேதியில் நான் புறப்பட இருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லவே இல்லை.
முன்பு பேரறிஞரிடமும் இப்படித்தான் செய்தேன், அவரும் வந்தார். இப்பொழுது இவரும் வந்தார்.
இவர் ஒரு படி மேலே சென்று, விமானத்திற்குள்ளேயே வந்து இரண்டாவது முறையும் மாலை அணிவித்து எனக்கு வாழ்த்துக் கூறினார்.
நான் சுமார் ஏழு வயது பையனாக இருக்கும்போது, என் தாயிடமிருந்து முதன் முதலாகப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்வதற்காகப் புறப்பட்ட நாளன்று, வாயிற்படிவரை நாங்கள் (நானும், என் சகோதரரும்) வருவதும் உடனே ஓடிக் கூடத்தில் அழுதபடி உட்கார்ந்திருந்த தாயைக் கட்டி அணைத்து அழுவதும்,
எங்களைப் பெரியவர்கள் ஆறுதல் கூறி அழைத்துச் செல்வதும், வாயிற்படியைத் தாண்டும்போது மீண்டும் ஓடித் தாயைக் கட்டிக் கொண்டு ஓவெனக் கதறி அழுவதுமாய் இருந்த அந்தக் காட்சியை இது இப்போது நினைவுறுத்தியது.
இன்று அதேபோல் தாயன்போடு என்னை மீண்டும் ஆரத்தழுவி ஆசி கூறியதை எண்ணுந்தோறும் வேதனையும் அதே நேரத்தில் மனதிலே ஒரு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படுவதை உணர்ந்தேன்.
மனதில் இருந்த பெரும் பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்ற உணர்வு. கடைசியில் என் அண்ணா நான் இருக்கும் இடத்திற்கே கலைஞரின் உருவில் தேடிவந்து ஆசி கூறி விட்டார் என்ற
பெரும் ஆறுதல்…
ஒரு பெருமூச்சு.
அது எத்தனை பேர் என்னை கவனிக்குமாறு செய்துவிட்டது.”
– இப்படி எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.
அன்பும் பாசமும் அரவணைத்துக் கொண்ட அந்தக் காலத்தை இருளுக்கு இடையே மின்னலின் ஒளி கீற்று போல இன்றைக்கும் எண்ணி மகிழ முடிகிறதே!
– மு.கருணாநிதி
– 1990-ல் வார இதழ் ஒன்றுக்காக கலைஞர் கருணாநிதி எழுதிய கட்டுரை.