ஜெய்சங்கர் என்ற நடிகரை திரையுலகம் கொண்டாடி மகிழக் காரணம் அவரால் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டனர் என்பதுதான்.
‘தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்’ என்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
நீதிபதியின் மகனாக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய். சுப்பிரமணியம் சங்கர் என்ற பெயரைத் திரைப்படத்துக்காக ஜெய்சங்கர் என்று மாற்றிக் கொண்டார்.
இயக்குநரும் நடிகருமாக இருந்த சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவில் பணியாற்றிவந்தவர், ‘இரவும் பகலும்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’ என்ற பாடலால் பட்டி தொட்டியெல்லாம் ஜெய்சங்கர் பிரபலமானார்.
அதே படத்தில் ஆலங்குடி சோமு எழுதிய ‘இரவும் வரும் பகலும் வரும்’ என்ற பாடலும் ஜெய்சங்கர் என்ற நடிகரை வாழ வைத்தது.
‘தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்’ என்று பாடியபோது எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு அடுத்த இடத்தை எளிதாகப் பெற்றுவிட்டார் ஜெய்சங்கர்.
‘பொம்மலாட்டம்’, ‘யார் நீ’, ‘பூவா தலையா’, ‘நீ’, ‘வைரம்’, ‘செல்வமகள்’, ‘டீச்சரம்மா’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘கண்ணன் வருவான்’, ‘மன்னிப்பு’, ‘அவசர கல்யாணம்’, ‘பட்டணத்தில் பூதம்’ போன்ற படங்களில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் மென்மையான காதல் உணர்வுகளை ஜெய்சங்கர் அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
ஆனாலும் சண்டைக் காட்சிகள் மிக்க அந்தக் காலத்து ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் ஜெய்சங்கருக்குத் தனி அந்தஸ்து பெற்றுத் தந்தன.
‘சிஐடி சங்கர்’, ‘வல்லவன் ஒருவன்’, ‘கருந்தேள் கண்ணாயிரம்’, ‘கங்கா, ஜக்கம்மா’, ‘ஜம்பு’, ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஒரே தந்தை’, ‘காலம் வெல்லும்’ போன்ற படங்கள் ஜெய்சங்கரை ஆக்ஷன் ஹீரோவாக்கின.
நூறு படங்களைக் கடந்தபோதும் அவர் நடித்த வண்ணத்தில் வெளியான படங்கள் மூன்றோ நான்கோ என்று இருந்த நிலை. காரணம் அவர் படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தன.
தயாரிப்பாளர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளலாக விளங்கினார் ஜெய்சங்கர். கருப்பு வெள்ளைப் படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பிறகு இத்தனை வெற்றிப் படங்களைக் கொடுத்த சாதனையாளர் ஜெய்சங்கர்தான்.
குள்ளமணியாக இருந்தாலும் சரி, குண்டு கல்யாணமாக என்றாலும் சரி எந்த ஒரு துணை நடிகருக்கும் கஷ்டம் என்றால் ஓடோடிப் போய் உதவும் மனப்போக்கு ஜெய்சங்கருக்கு இறுதிவரை இருந்திருக்கிறது.
தான் உதவி செய்தவர்களைத் தான் இறந்த பிறகு தொந்தரவு செய்யக்கூடாது என தன் மகன்களிடம் அன்புக்கட்டளையிட்டிருந்தாராம் ஜெய்சங்கர்.
– நன்றி: முகநூல் பதிவு