30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் சிறை!

ஞானசேகரன் வழக்கில் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு 29 சாட்சியங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.

தொடர்ந்து, இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகளின் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.

விசாரணையின் முடிவில், மே மாதம் 28-ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்தார் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி. அதோடு, ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தனக்கு தந்தை இல்லை, தாய் மட்டுமே இருக்கிறார், அவருக்கும் உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு 8-வது படிக்கும் பெண் குழந்தை உள்ளார், எனவே தனக்குக் குறைந்தபட்ச தண்டனைக் கொடுக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் கோரிக்கை வைத்தார்.

இதனால், ஜூன் 2ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்தார்.

இந்த நிலையில், ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனையும் ரூ.90,000 அபராதம் விதித்தும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதோடு, அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கை சிறப்பாக நடத்திய காவல்துறைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த வழக்கில் மிக விரைவாக நீதியை நிலைநாட்டியதற்காக காவல்துறையையும் நீதித்துறையையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 

இந்தச் சம்பவம் நடந்த 5 மாதங்களில் வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment