காளிதாசன் – வர்ணஜால வரிகளைத் தந்த கவிஞர்!

காரைக்குடி அடுத்த திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கவிஞர் காளிதாசன். பிரசாந்த் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் “தண்ணி குடம் எடுத்து” என்ற பாடல், ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் “தலை மகனே கலங்காதே” உட்பட பல பிரபல பாடல்களை எழுதியவர்.

இவர், ‘தாலாட்டு’ என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி ‘சட்டம் என் கையில்’ உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

பின்னர் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் காளிதாசன் என்ற பெயரில் பாடல் எழுதினார்.

அந்தப் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதால் சுமார் 150 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதினார்.

தொடர்ச்சியாக இசையமைப்பாளர் தேவா கூட்டணியில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

108 அம்மன் பெயர்களை வைத்து இவர் எழுதிய ஒரு தாலி வரம் பாடல் பிரபலமானது. இன்றும் அனைத்து கோயில் திருவிழாக்களில் இப்பாடல் ஒலிக்கும்.

திருப்பத்தூரான் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களை எழுதியிருக்கிறார்.

அதில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், “கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா” என்ற பிரபலமான பாடலை எழுதினார். எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய இப்பாடல் கோயில் விழாக்களில் அதிகம் ஒலிக்கிறது.

சுமார் 800 பாடல்கள் இதுவரை பல்வேறு இசையமைப்பாளர்களிடம் எழுதியிருக்கிறார். 1994-ம் ஆண்டு சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றிருக்கிறார்.

இவருடைய திரைப்பாடல்கள் புத்தகமாக வெளி வந்திருக்கின்றது. இவர் ‘நீங்க நல்லா இருக்கணும்’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றார்.

‘நட்புக்காக’ படத்தில் “மீசைக்கார நண்பா” என்ற பாடலையும், சட்டம் என் கையில், கரிமேடு கருவாயன், தாலாட்டு, ஓடி விளையாடு தாத்தா, சட்டம் என் கையில்தெற்கு தெரு மச்சான், வைகாசி பொறந்தாச்சு, வைதேகி கல்யாணம், கந்தா கடம்பா கதிர்வேலா, கண்ணுக்கு கண்ணாக, கலர் கனவுகள், பாட்டாளி, தை பொறந்தாச்சு, நாடு அதை நாடு, நம்ம ஊரு பூவாத்தா, பெரிய இடத்து மாப்பிள்ளை, சுந்தர புருஷன், தாலி காத்த காளியம்மன் ஆகிய பல படங்களுக்கும் இவர் பாடல்கள் எழுதியிருந்தார்.

காளிதாசன் வர்ணஜால வார்த்தைகளால் நமக்கு கொடுத்த அற்புத படைப்புகள் சில,

“நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிபுடு தாங்கல என் உசிரே”

“நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்து மனசும்
கனலாப்போச்சு ஆசை மச்சான்”

“கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்”

“ஆத்தா உன் கோவிலிலே!
அலங்கார வாசலிலே!
ஏற்ற வந்தோம் மாவிளக்கு
எங்க குறைய நீ விலக்கு “

– போன்ற பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

இவருக்கு மூளை நரம்பில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக, சொந்த ஊரான தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலன் அளிக்காமல் 2016ல் மே 29 அன்று மரணம் அடைந்தார்.

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர் காளிதாசன் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.

– நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

Comments (0)
Add Comment