மாநிலங்களவையில் ஒலிக்கவிருக்கும் பெண் கவிக்குரல்!

கவிஞர் சல்மா. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய உலகில் எழுச்சியோடு உச்சரிக்கப்படுகிற பெயர்.

அதேநேரத்தில், திராவிடச் சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பால் அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயலாற்றி வருபவர்.

அவரால் விளைந்த பணிகளின் பயன்கள் இம்மண்ணில் உரம் பெற்ற ஒவ்வொரு தருணத்திலும், அந்த உழைப்புக்கான அங்கீகாரம் அவரைத் தேடிச் சென்றடைந்துள்ளது.

இப்போது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அவரைத் திமுக அறிவித்திருப்பதும், அந்த வகையில் சேர்கிறது.

பெரும்பாலும் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்பு என்பதால், மாநிலங்களவையில் ஒரு பெண் கவியின் குரல் ஒலிப்பது உறுதியாகியிருக்கிறது.

விதை முளைத்தது..!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் சம்சுதீன் – சர்புன்னிசா தம்பதியின் மகளாகப் பிறந்தார் ரொக்கையா பேகம். உறவினர்கள் இவருக்கு வைத்த செல்லப்பெயர் ராஜாத்தி.

இவரது பெரியப்பா மகன் தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன் (அப்துல் ஹமீது).

சிறு வயது முதலே பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிப்பைத் தனதாக்கிக் கொண்டவர். அதனால், அப்போதே இலக்கிய உலகில் நுழைவதற்கான விதை அவரது வாழ்வில் முளைத்துவிட்டது.

தொடர் வாசிப்பின் ஒருகட்டத்தில் துணுக்குகள் எழுதத் தொடங்கினார். அது பிரசுரமானதைக் கண்டபிறகு வாசிப்பின் எல்லைகள் அவருக்குள் விரிவடைந்தன.

ரஷ்ய இலக்கியம் தொடங்கி சமகாலத் தமிழ் நூல்கள் வரை மெல்ல வாசிக்கத் தொடங்கினார்.

பதினேழாம் வயதில் அப்துல் மாலிக் உடன் இவருக்குத் திருமணம் ஆனது. கணவர், குழந்தைகள் என்றானபிறகும் எழுத்து ஆர்வம் அப்படியே அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் அது எழுத்து வடிவம் பெறத் தொடங்கியது.

அப்போது, ரொக்கையா பேகம் தனக்கு வைத்துக்கொண்ட புனைப் பெயரே ‘சல்மா’. அந்தப் பெயரில் வெளிவந்த கவிதைகள் காலச்சுவடு முதலான இதழ்களில் இடம்பெற்றன.

அதன் வழியே இலக்கிய அன்பர்களின் அறிமுகம் கிடைத்தது. அந்த பெயரும் புகழும் பெருகப் பெருக, எழுத்துகளின் அளவும் வீச்சும் அதிகமானது. அதுவே அவரது கவிதைகள் தொகுப்பாக வெளிவரக் காரணமானது.

2000-வது ஆண்டு ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ நூல் வெளியானது. பிறகு ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ எனும் நாவலை எழுதினார் சல்மா. அது பெண்களின் மனதில் புதைந்திருந்த எண்ணங்களின் ஒரு துளியாக அமைந்தது.

ஆனால், அதுவே எழுத்துலகில் பிரளயத்தைக் கிளப்புவதாகவும் இருந்தது. பிறகு சல்மாவின் பெயர் இலக்கிய உலகில் பரிச்சயமாகிப் போனது.

தொடர்ந்து ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு, ‘மானாமியங்கள்’ நாவலை வெளியிட்டார் சல்மா.

அப்படைப்புகள் வாசகர்களிடத்தில் உருவாக்கிய தாக்கமும், பெற்ற விருதுகளின் எண்ணிக்கையும் அவர் மீதான இலக்கியவாதி அடையாளம் எத்தனை விசாலமானது என்பதைச் சொல்லும்.

அரசியல் களத்தில்..!

பொன்னாம்பட்டி பேரூராட்சி மகளிருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, அங்கு வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றார் சல்மா. அப்போது, அவர் சுயேச்சையாகத்தான் போட்டியிட்டார்.

2004-ம் ஆண்டு அவர் திமுகவில் இணைந்தார். 2006-ம் ஆண்டு மருங்காபுரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

பிறகு, முன்பை விடவும் தீவிரமாகக் கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் சல்மா. தொகுதி சார்ந்து, கட்சி சார்ந்து, மாநில அரசியல் சார்ந்து இயங்கினார்.

அந்த உழைப்பும் முனைப்பும் அவரை அடையாளப்படுத்தின. அதன் வழியே சமூகநல வாரியத்தில் தலைவர் ஆக்கப்பட்டார்.

அங்கு கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டம், திருநங்கையருக்கான ஆலோசனை மையங்கள், ஆதரவற்ற மகளிருக்கான கணினி மையங்கள், மாணவர் ஆலோசனை மையங்கள் வெற்றிகரமாகச் செயல்படத் துணை நின்றார்.

ஒரே நேரத்தில் எழுத்தாளராகவும் அரசியல்வாதியாகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தது, தொடர்ச்சியாக ஏதோ ஒரு பணியில் அவரைப் பிணைத்து வைத்தது. ஒரு சுற்று போல, ஒவ்வொன்றிலும் அவருக்கான பங்களிப்பை வழங்கத் துணை நின்றது.

திமுகவில் மகளிர் அணி பிரச்சாரக் குழுச் செயலாளர், செய்தித் தொடர்பு பிரிவு இணைச் செயலாளர் பதவிகளை வகித்தவர், இப்போது மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக சார்பில் களம் காண்கிறார்.

தனது படைப்புகளுக்கான விருதுகள், அரசியல் கருத்துகளைப் பகிர்கிற மேடைகள், எளிய மக்கள் மேம்பாட்டுக்கான பணிகள் என்று இயங்கி வரும் இவருக்கு இது கூடுதல் பொறுப்பல்ல. ஏற்கனவே கொட்டிய உழைப்புக்கான ஒரு வகை பரிசு.

ஆனால், இதையும் அவர் தன்னியல்புடன் கையாண்டு மேலும் பல மக்களுக்குச் சேவையாற்றுவார்; அதன் வழியே அரசியல் களத்தில் தன் இருப்பை இன்னும் ஆழமாகப் பதிவு செய்வார் என்று நம்பலாம்!

  • மாபா
Comments (0)
Add Comment