கூகி வா தியாங்கோ: சிந்திக்கும்போது எழுதவிடவில்லை!

எழுத்தாளர் அழகியபெரியவன்

இரண்டாயிரத்துக்கு முன்பு தாமரைச் செல்வி, நிழல் பதிப்பகங்களின் ஆசிரியர் ப.திருநாவுக்கரசுவை சந்திக்கச் சென்றிருந்தபோது, ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் காட்டி ,

“கென்ய எழுத்தாளர் கூகி அவர்களின் ‘Devil on the Cross” நாவலை தமிழில் கொண்டுவரப் போகிறேன். அமரந்தா மொழிபெயர்க்கிறார்.

டெல்லியில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கூகியை சந்தித்தேன். அவரே கைப்பட எழுதி மொழியாக்க ஒப்புதலைத் தந்துவிட்டார்!” என்றார்.

கூகி ஜேம்ஸ் வா தியாங்கோ என்ற பெரும் இலக்கிய போராளியின் பெயரை நான் முதலில் அறிந்தது அப்போது தான்.

மாவ் மாவ் இயக்கத்தின் தீவிர போராட்டங்களால், கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து 1963 ஆம் ஆண்டு விடுதலைப் பெற்றது.

காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்றாலும் தொடர்ந்து கென்யாவின் மறுசீரமைப்புக்கான போராட்டங்கள் அங்கு நடைபெற்று வந்தன.

அந்தச் சமயத்தில், அரசியல் மயப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவரான கூகி கட்டுரைகளையும் நாவல்களையும் – காலனியாதிக்க கல்வியின் விளைவான ஆங்கிலத்தில் – எழுதி வந்தார்.

I will Marry when I want என்ற நாடகத்தை அரங்கேற்றியதற்காக 1977 ஆம் ஆண்டு கூகி, காமிட்டி என்ற இடத்தில் தனிமைச் சிறையில் ஒரு வருட காலம் அடைக்கப்பட்டார்.

தனிமைச் சிறையில் இருந்த காலங்களில் காலனியாதிக்க எச்சங்களை துறப்பது குறித்து சிந்தித்த கூகி, Devil on the Cross நாவலை தன்னுடைய தாய்மொழியான கிக்கூயூ வில் எழுதினார்.

கடுமையான காவல் கண்காணிப்பு இருந்ததால் இந்த நாவலை கழிவறையில் மலம் துடைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த தாளில் எழுதினார் கூகி!

கிக்கூயூ மொழியில் வெளிவரும் முதல் நாவல் என்ற பெருமிதத்துடன் 1979 ல் வெளியான இந்த நாவல், 1981 ல் ஆங்கிலத்திலும், 2000 ல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

1977 க்குப் பிறகு ஆங்கிலத்தில் எழுதுவதை கைவிட்ட கூகி, அதன் பிறகு காலனியாதிக்க எதிர்ப்பை காட்டுகிற வகையில் இறுதிவரை கிக்கூயூ மற்றும் கிஸ்வாஹிலி மொழிகளிலேயே எழுதினார்.

தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கின்ற கூகியினுடைய சில நூல்களில், சிலுவையில் தொங்கும் சாத்தான், தேம்பி அழாதே பாப்பா, அடையாளங்களைத் துறத்தல்: காலனியாதிக்க ஓர்மையை அழித்தல் ஆகியவற்றை படித்தாலேயே போதும், பெரும் உணர்வைப் பெற்றுவிடலாம்.

குறிப்பாக அ.மங்கை அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்த, அடையாளங்களைத் துறத்தல்: காலனியாதிக்க ஓர்மையை அழித்தல் எனும் நூல் ஏற்படுத்தும் அதிர்வுகளும் தாக்கங்களும் அதிகம்.

சிலுவையில் தொங்கும் சாத்தான் நாவலை எழுதிய அனுபவத்தை பற்றி கூகி சொல்லும்போது, “அவர்கள் என்னை சிந்திக்கும்போது எழுதவிடவில்லை. கழிவறையிலேயே எழுதவிட்டார்கள்! போராட்டவாதிகளுக்கு எல்லா இடமும் சிந்தனைக்குரிய இடங்களே!” என்கிறார்.

எந்த அரசு கூகியை கடுங்காவல் சிறையில் வைத்ததோ அந்த கென்ய அரசின் தற்போதைய அதிபர் வில்லியம் ரூடோ மிகப் பொருத்தமான ஓர் இரங்கல் குறிப்பை கூகியின் மரணத்திற்கு தெரிவித்திருக்கிறார்: “The towering giant of Kenyan letters has put down his pen for the final time” – William Ruto, President of Kenya.

கூகி கீழே வைத்த பேனாவை உலகெங்கிலும் ஒடுக்கப்படும் மக்கள் திரளின் எழுத்தாளர்கள் எடுப்பார்கள்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment