அவள் பெயர் ஐடா ஸ்கேடர் (Dr.Ida Sophia Scudder): அமெரிக்கப் பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள். ஆனால் மிஷனரிகள்.
அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்த இருமாதங்களில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார்.
தந்தையுடன் வேலூரில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டிப் போட்டன
என்ன சம்பவம்?
அந்த நள்ளிரவில் அவர் வீட்டு கதவினைத் தட்டுகின்றான் ஒரு பிராமணன், அவனின் கண்கள் டாக்டரம்மாவினை தேடுகின்றன. ஐடாவின் தகப்பனார் என்ன என்கின்றார்? என் மனைவிக்கு பிரசவம் டாக்டரம்மாவினை அனுப்ப முடியுமா?
இல்லை, அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள். நான் வரட்டுமா என்கின்றார் அவர்.
இல்லை அய்யா, எங்கள் சமூகத்தில் பெண்ணுக்குப் பெண்ணே பிரசவம் பார்க்க வேண்டும், கட்டுப்பாடு அது என்னால் மீறமுடியாது என கண்களைத் துடைத்துக் கொண்டே செல்கின்றார்.
மறுநாள் அந்த கர்ப்பிணியின் இறந்த உடலை அந்த ஐடாவின் வீட்டு முன்னால் எடுத்து செல்கின்றார்கள். குற்ற உணர்வினால் அத்தந்தை அழ, தன்னையறியாமல் ஐடாவும் அழுகின்றாள்.
இருநாள் கழித்து ஒரு இஸ்லாமியருக்கு அதே தேவை. ஆனால் அதேக் கட்டுப்பாடு. டாக்டரம்மா இல்லாததால் கண்களைத் துடைத்துவிட்டுச் செல்கிறார். அந்த இஸ்லாமிய கணவன் மறுநாள் அதே ஊர்வலம்.
மனதால் வெடித்து அழுதாள் ஐடா, என்ன தேசமிது? பெண்களைப் படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்.
அவளுக்கு ஏதாவது அம்மக்களுக்கு செய்ய தோன்றிற்று, நிச்சயம் இங்கு மகளிரை படிக்க வைக்க முடியாது, நாமே மருத்துவராகி இவர்களோடு தங்கிவிட்டால்?
அந்த வைராக்கியம் அன்றே வந்தது, அமெரிக்கா சென்று படித்து மருத்துவரானாள், பெரும் வேலைவாய்ப்பு வந்தாலும் அவள் கண்களில் அந்த இரு ஊர்வலங்களும் வந்து அவள் வைராக்கியத்தை அதிகரித்துகொண்டே இருந்தன.
திரும்பி அதே வேலூருக்கு வந்தாள், இனி ஒரு கர்ப்பிணியையும் சாகவிடமாட்டேன் எனச் சொல்லி அந்த மருத்துவனையினைத் தொடங்கினாள்.
இந்தியாவில் மகளிருக்கான முதல் மருத்துமனையாக அதுதான் உதித்தது.
பெண்கள் தயக்கமின்றி அவளிடம் சிகிச்சைக்கு வந்தனர். எந்த மதக் கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாக இல்லை.
இந்நாட்டுப் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்து வந்து இப்பெண்களைக் காப்பாற்றுவேன் எனச் சூளுரைத்து அதை செய்தும் காட்டினாள் அவள்.
அவள் பெண்ணுரிமை பேசவில்லை, கொடி பிடிக்கவில்லை, புரட்சி செய்யவில்லை மாறாக, தன்னால் அந்தகால யதார்த்த வாழ்விற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்தாள்.
அதற்கு அவள் கொடுத்த விலை அவளின் வாழ்வு.
நிச்சயம் தனி ஆளாகத்தான் போராடினாள், பின்பே பல சேவை மருத்துவர்கள் அவரோடு இணைந்தனர்.
அவள் தனியே ஏற்றிய மெழுகுவர்த்திதான் இன்று மிகப் பிரகாசமாக ஒளிகொடுத்துக் கொண்டிருக்கின்றது.
அதுதான் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியாக இன்று வளர்ந்து நிற்கின்றது, உலகின் மிகத் தரமான மருத்துவமனை என அதற்கு இன்றும் பெயர்.
அப்பல்லோ, குளோபல், ராமசந்திரா எனப் பல வந்தாலும் இன்று மிகப் பெரியதும், மிக மிகத் தரமான சிகிச்சை கொடுப்பதும் அந்த வேலூரில் சிஎம்சி மருத்துவமனையே.
அவள் யார்? அவளுக்கும் இம்மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
ஆனால் நம் மக்களுக்காக அழுதிருக்கின்றாள். நம் மக்களின் சாவினைத் தடுக்க மருத்துவராகித் திரும்பி வந்து இங்கு தன் வாழ்வினை அர்பணித்திருக்கிறாள். அன்னை தெரசாவிற்கு அவள்தான் வழிகாட்டி.
அந்த வணங்கத்தக்க பெண்மணியின் உழைப்பில் உருவான அந்த மருத்துவமனைதான் இன்று 100-ம் ஆண்டு விழாவினைக் கொண்டாடுகின்றது.
ஜனாதிபதி அதற்குத்தான் வந்திருந்தார்.
அந்த வெளிநாட்டு தெய்வத்தைப் பற்றி ஒருவார்த்தை அவர் சொல்வார் என்றோ, இல்லை இந்த பத்திரிகைகள்தான் அந்தப் பெண்ணைச் சொல்லுமா என்றோ தேடிபார்த்தால் ஒன்றுமே இல்லை. அவளின் மகத்தான தொண்டிற்கு இத்தேசம் கொடுக்கும் அஞ்சலி இதுதானா?
அவளின் கல்லறை அதே வளாகத்தில்தான் இருக்கின்றது, நிச்சயம் இந்த நூற்றாண்டு விழாவில் அவள் கல்லறைக்கு அரசு மரியாதை செலுத்தபட்டிருக்க வேண்டும்.
இங்கு நாட்டினைச் சுருட்டி தனக்கு எஸ்டேட் கட்டிய நடிகைக்கு மணிமண்டபம் கட்டுபவர்களுக்கு தியாகத்தின் மகத்துவம் எப்படி தெரியும்?
ஒரு குற்றவாளிக்கு மணிமண்டபமாம், எங்கிருந்தோ வந்து இங்கு வந்து உழைத்து இன்றுவரை மக்கள் நலம்பெற பெருந்தொண்டாற்றியிருக்கும் அவருக்கு ஓன்றுமில்லையாம்.
இந்த தேசம் மிக மிக நன்றிகெட்ட தேசமாகச் சென்று கொண்டிருக்கின்றது.
நன்றி கெட்டவர்கள் செல்லட்டும்.
அந்த வேலூர் மருத்துவமனை ஐடா ஸ்கேடரின் கனவு, கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ லட்சம் மக்களை அது காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது, இன்றுவரை, இந்த நொடிவரை எத்தனையோ பேர் நலம்பெற்றுக் கொண்டிருக்கின்றனர்
அந்தப் பலன் பெற்றவர்கள் நிச்சயம் மனதில் வாழ்த்துவார்கள், அவர் தொண்டையும் அந்த மருத்துவமனை பற்றி அறிந்தவர்களும் இந்த 100-ம் நினைவு ஆண்டில் அவளுக்கு மாபெரும் அஞ்சலியினைச் செலுத்தலாம்.
இங்கு வந்தவர்கள் எல்லாம் மதம் பரப்ப வந்தவர் அல்ல, உண்மையிலே இம்மக்களுக்கு ஏதும் செய்ய வாழ்வினை அர்பணித்தவர்கள்.
அதில் பென்னி குயிக்கும், ஐடா ஸ்கேடரும் எந்நாளும் நினைவில் நிற்பார்கள்.
ஆனாலும், ஜனாதிபதி ஒருவார்த்தை அவரை குறிப்பிட்டிருக்கலாம், தமிழக அரசுப் பிரநிதிகளும் அவள் பெயரைச் சொல்லவில்லை. அப்படி அவள் இந்நாட்டு மக்களுக்கு என்ன துரோகம் செய்தாள்??
அவள் வெளிநாட்டுகாரியாகவும், கிறிஸ்தவராகவும் இருந்ததுதான் அவளின் தவறு.
இவர்கள் சொல்லித்தான் அவள் புகழ் தெரிய வேண்டுமா? நிச்சயம் இல்லை. தொண்டு என்பதும் சேவை என்பதும் அரசியலுக்கு அப்பாற்பட்டது
100 ஆண்டுகளை கடந்து இந்திய மக்களுக்கு பணி செய்யும் அந்த மருத்துவமனை நிற்கும் வரை ஐடா ஸ்கேடர் வாழ்வார்.
வாழ்வில் நாம் கண்டு கண்ணீர்விடும் அதிசய கிறிஸ்தவர்களில் அந்த ஐடாவும் ஒருவர்.
அந்த மருத்துவமனை 100 அல்ல, 1000 ஆண்டுகள் இம்மக்களுக்குத் தொண்டு செய்யும், காரணம் அதன் அடித்தளம் மிக மிக உன்னதமான மானிட நேயம் எனும் அஸ்திவாரத்தால் அமைக்கபட்டிருக்கின்றது.
ஜனாதிபதியும் பிரதமரும் முதல்வரும் 100-ம் ஆண்டில் ஐடா ஸ்கேடரை நினைவு கூறாதது அவளுக்கு பெருமையே.
அந்தக் கருணையின் தேவதையினை நினைத்து பார்க்காதது இவர்களுத்தான் அவமானம்.
– நன்றி : ஸ்டான்லி ராஜன்