தமிழ் எழுத்தாளர்களில் மிகச் சிறந்த படைப்புகளைக் கொடுத்து தனது தனித்துவமான கருத்துக்களால் மக்களின் மனதில் இடம்பிடித்தவர், ஜெயகாந்தன். பொதுவுடமைச் சிந்தனையும், தேசச் சிந்தனையும் ஜெயகாந்தனிடம் நிறைவாகவே இருந்தது.
அவரது நினைவுநாளையொட்டி (ஏப்ரல்-8) அவரது சிந்தனையில் உதித்த கருத்துக்களில் இருந்து சிறு நினைவுகூரல்:
1. நீங்கள் அழகு என்று எதை நினைக்கிறீர்களோ தெரியாது. யாரைப் பற்றி நினைக்கும்போது மனதிற்கு இன்பமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள்.
2. ஆதிக்கம்தான் எதிரியே தவிர, யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வரும்.
3. நான் ஒருபோதும் எதையும் அவமானமாகக் கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்.
4. சரி, தவறு என்பதெல்லாம், அவரவர் வாழும் சூழ்நிலையும், வளர்ந்தவிதமும், கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்கு தவறு!
5. வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி, பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை.
6. ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்.
7. மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் செய்யாமல் – திறந்த மனசோட பார்த்தால் எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்.
8. ஒரு செடியைப் பாதுகாக்குறதும் தண்ணி ஊத்தறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே.
9. வாழ்க்கை சொர்க்கமா ஆகுறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான். ஆனால், நரகமா வாழ்க்கை ஆகுறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.
10. பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் என்ற நம்பிக்கை தான் அவசியம்.
11. வாழ்வும் தாழ்வும், பெருமையும் வீழ்ச்சியும், மகிழ்ச்சியும் துயரமும் நாயின் வாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும் போலும்!
12. சுயவிமர்சனம் உடையோரை, பிற விமர்சனங்கள் பாதிப்பதில்லை.
13. தன்னைவிட தன் திறமை மதிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது கர்வம் அல்ல, சுயமரியாதை.
14. குற்றங்களுக்காக தண்டிப்பது வேறு, அவமதிப்பது வேறு. தண்டிக்கும்போது குற்றவாளி மட்டுமே தண்டிக்கப்படுகிறான். அவமதிக்கும்போது மனிதமே அவமதிக்கப்படுகிறது.
15. “மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள், ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்” என்பது எவ்வளவு பெரிய அநீதி.
இந்த 15 மேற்கோள்களும் ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற அவருடைய புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.