இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்: காரணம் என்ன?

உலகில் மொத்தம் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த 4 வருடத்தில் 17.6 கோடியாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் 9 கோடி குழந்தைகள், தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதில், 3 கோடி குழந்தைகள் அபாயகரமான தொழிற்சாலைகளிலும், பாலியல் தொழிலும் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் 1.2 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அதில், 65 லட்சம் ஆண் குழந்தைகளும், 55 லட்சம் பெண் குழந்தைகள் அடங்குவர்.

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களில் 20% பேர் உத்தரப்பிரதேசத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 30 வருடங்களாக அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், சத்துணவு போன்ற திட்டங்கள் சிறப்பாக செயலாற்றியதால் வெகுவாகக் குறைந்து வந்த குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை கடந்த 3 வருடமாக அதிகரித்து வருவதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது.

குறிப்பாக, சென்னை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் பீடி, தீப்பெட்டி, பட்டாசு தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்த படுவதாகவும், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் குவாரிகள், ரசாயன தொழிற்சாலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திருப்பூர், வேலூர் போன்ற இடங்களில் நூற்பாலைகளிலும், தோல் பதனிடும் இடங்களில் வேலை செய்கிறார்கள்.

சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிப்பது, டீ கடைகள், போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடுத்தபடுவதாக யுனிசெஃப் ஆய்வு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் தடுப்புத் திட்டம் 2017-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க வைக்கும் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதால் குழந்தைத் தொழிலாளர்களை மீட்பது குறைந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் படிப்பை விட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது.

இந்த நிலையை மாற்ற, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகி இருப்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நமது நாட்டில் 1971-ஆம் ஆண்டு, மார்ச் 4-ஆம் தேதி தேசியப் பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.

மும்பையைத் தலைநகராகக் கொண்ட இந்த கவுன்சிலின் பிரிவு அனைத்து மாநிலங்களிலும் அரசு சாராத ஒரு தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

பலதுறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் விபத்துக்கள் நேராமல் பணிபுரியவும், பாதுகாப்புடனும், சுற்றுச்சூழல் கெடாமல் பணிபுரியவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மார்ச் 4-ம் தேதியும் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

தொழில்துறையின் வளர்ச்சிதான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில், பாதுகாப்பு நடைமுறைகளையும், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சேவைகளையும் சரியாக அளித்துவரும் தொழிற்சாலைகளுக்கு விருதுகள் அளித்து வருகிறது.

பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இத்தினத்தை கொண்டாடுவதன் நோக்கமாகும்.

தொழிலாளர்களின் பாதுகாப்புக் கருதி தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டுவரும் வேளையில், நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.

– ந.பால வெற்றிவேல்

  • நன்றி: புதிய தலைமுறை

#tamilnadu #india #தமிழ்நாடு #இந்தியா #child_labour #குழந்தைத்_தொழிலாளர்கள் #NCLP #National_Child_Labour_Project #congress #தொழிலாளர்கள்_பாதுகாப்பு_தினம் #World_Day_For_Safety_and_Health_at_Work #தொழிலாளர்கள் #labour

Comments (0)
Add Comment