குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?

தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக இருப்பதாகவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட சிறார்கள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவதை யார் கண்காணிப்பார்? ஆணையம் இல்லாமல் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?

ஆணையம் அமைப்பதற்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், எப்போது தேர்வு நடைமுறைகளை முடிக்க போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் எனக் கூறி, சமூக நலத்துறை செயலாளரை காணொலியில் ஆஜராக அறிவுறுத்தினர்.

அதன்படி, காணொலி மூலம் ஆஜரான சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், வழக்கு காரணமாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது என்றும், தற்போது வழக்குகள் முடிந்து, இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன என்றும், மார்ச் 20-ம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்” என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்டு, மூன்று மாத அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஆணையம் அமைத்த பின் உச்சநீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தனர்.

ஆணையத் தலைவர், உறுப்பினர் நியமனம் குறித்து ஜூன் 20-ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்தனர்.

Comments (0)
Add Comment