சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த கோலி!

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் நடைபெற்று வருகிறது.

மழை மற்றும் ஆடுகளம் சரியில்லாமல் போனதால், இரண்டு மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில், நேற்று நான்காம் நாள் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை விளாசி டிக்ளேர் செய்தது.

இதில் இந்திய வீரர் விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த ரன் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸில் விளையாடி 27 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், விராட் கோலி 594 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார்.

Comments (0)
Add Comment