அவமானங்களிலிருந்து மேலெழுங்கள்!

வினேஷ் போகத்
நமகக்குச் சொல்வது இதுதான்:
அவமானங்களிலிருந்து
மேலெழுங்கள்;
அது ஒன்றுதான்
வெல்வதற்கான போர்முறை.

நீங்கள்
சக்தி வாய்ந்த ஒன்றின் மேல்
உங்கள் பிடியை அழுத்தும்போது
நீங்கள் அதிகாரத்தின் கைகளால்
குரல்வளை நெறிக்கப்பட்ட
அந்த நாளை நினைத்துக்கொள்ளுங்கள்;
நீதிக்காகப் போராடியபோது கிடைத்த
அந்த அடியின் வலியை நினைத்துக்கொள்ளுங்கள்.

அப்போது உங்கள் பிடி
ஒரு இரும்புப் பிடியாக மாறிவிடும்;
அது வெல்ல முடியாததாகிவிடும்.

அவமானங்கள்தான் நம் தாய்;
அவைதாம் நம்மை வளர்க்கின்றன.
அவைதாம் நமக்கு வாழக்கற்றுத் தருகின்றன,
அவையே நம் கரங்களை உறுதியாக்குகின்றன.

வினேஷ் போகத்
இறுதிப் பிடியை நிகழ்த்தும்போது
யார் முகத்தை நினைத்துக்கொண்டாள் என்பது
நம் எல்லோருக்கும் தெரியும்

– மனுஷ்ய புத்திரன்

Comments (0)
Add Comment