மக்களவைத் தேர்தல்: இதுவரை ரூ.9000 கோடி பறிமுதல்!

- தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவைத் தேர்தலை ஒட்டி  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் நாடு முழுவதும் ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதில் மார்ச் 1-ல் இருந்து மே 18 வரை நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் சிக்கிய பொருளில் 45 சதவீதம் போதைப் பொருள்கள் எனவும், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதாக ரூ.849.15 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணம் பறிமுதல் செய்துள்ளதில் அதிகபட்சமாக ரூ.114.41 கோடியுடன் தெலுங்கானா முதலிடத்திலும், கர்நாடகா ரூ.92.55 கோடியுடன் 2-வது இடத்திலும் ரூ.90.79 கோடியுடன் டெல்லி  3ம் இடத்திலும், ஆந்திரத்தில் ரூ.85.32 கோடியும், மராட்டியத்தில் ரூ.75.49 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 1-ல் இருந்து மே 18 வரை நடந்த சோதனைகளில் குஜராத்தில் அதிகபட்சமாக ரூ.1187.85 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பஞ்சாபில் ரூ.665.67 கோடி மதிப்பு போதைப் பொருள்களும் டெல்லியில் ரூ.358.42 கோடி மதிப்பு போதைப் பொருளும் தமிழ்நாட்டில் ரூ.330.9 கோடி மதிப்பு போதைப் பொட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும், நாடு முழுவதும் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1260.33 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் ரூ.195 மதிப்பு தங்க நகைகளும், மராட்டியத்தில் ரூ.188 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் ரூ.145 கோடியும், குஜராத் மாநிலத்தில் ரூ.128.56 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.99.85 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

மேலும், வாக்காளர்களுக்கு இலவமாக வழங்க கொண்டு செல்லப்பட்டதாக ரூ.2006.56 கோடி மதிப்பு பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.  அதில் ராஜஸ்தானில் ரூ.756.77 கோடி, மத்தியப் பிரதேசத்தில் ரூ.177.45 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் ரூ.162 கோடி மதிப்பு பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment